Showing posts with label புத்தகம். Show all posts
Showing posts with label புத்தகம். Show all posts

Thursday, October 26, 2017

இது எங்கள் வகுப்பறை

ஒரு ஆசிரிய‌ராய் தனது சுற்றத்தில் முழு சக்தியை பயன்படுத்தி மாணவர்களுக்கு விரும்பும் வகையில் கற்றலை மாற்றியிருப்பதற்காகவும் அதனை இலக்கியத்திற்கு கொண்டு வந்ததாற்கவும் முதலில் எனது வாழ்த்துக்களை தோழி சசிகலா அவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் புத்தகத்தை வாசிக்கும் பொழுது இரண்டு புத்தகங்கள் எனது மனதிற்குள் வந்து வந்து சென்றது. அவை "பகல் கனவு" மற்றும் "ஜன்னலின் ஒரு சிறுமி" புத்தகங்கள். கல்வி துறையில் இவை இரண்டுமே முக்கியமானதாய் கருதப்படும்  புத்தகங்கள். பெற்றோர்,ஆசிரியர்கள்,சமூகம் இந்த மூவருக்கும் குழந்தை வளர்ப்பில் மிக முக்கிய பங்குண்டு. அதில் "இது எங்கள் வகுப்பறை" என்ற‌ இந்தப் புத்தகம் ஆசிரியரின் பங்கினை எவ்வாறெல்லாம் திறமையாகவும்,சிறப்பாகவும் செய்ய முடியுமென்பதை எடுத்துக்காட்டுகிறது.

மாணவர் பருவத்தில் ஆசிரியருடன் நெருங்கி உறுமையுடன் பழகிவிட்டால் போதும்,அந்தக் குழந்தை தனது முழு ஆற்றலையும்,கற்றல் என்பதன் உண்மையான சுவையையும் அனுபவத்திட‌ முடியும். அப்படி தனது மாணவர்களுக்கு சூழலை அமைத்திட நினைத்து அதனை செயல்முறை படுத்திய அனுபவம் தான் இந்தப் புத்தகம். பள்ளி வரலாற்றுடன் புத்தகம் துவங்குவது மகிழ்ச்சியை தருகிறது. தனது வகுப்பறை அனுபவத்தை அழகாக பகிர்ந்துள்ளார். அவரது எழுத்துக்கள் மூலம் அந்த வகுப்பறையின் நிகழ்வுகளை காட்சிகளாக ஓட்டிப்பார்க்க முடிகிறது. எனது பிள்ளைக்கும் இந்த மாதிரி வாய்ப்புகள் கிடைக்குமா என்ற எதிர்ப்பார்ப்பை உண்டாக்குகிறது.

சிறுவர்கள் எப்பொழுதும் செயல்பாடுகளையும்,அதிலுள்ள பொறுப்புகளையும் ரசிக்கின்றனர். வீட்டில் கூட பெரியவர்கள் செய்யும் வேலைகளில் தங்களுக்கு ஏதேனும் வாய்ப்பு கிடைக்குமா என்ற ஏக்கத்துடனையே இருக்கின்றனர். "இதெல்லாம் பெரியவங்க வேலை" என்ற வாக்கியத்தை அவர்கள் அதிகம் வெறுக்கின்றனர். சமைக்கும் போதும்,வீட்டை சுத்தம் செய்யும் போதும்,கடைக்கு செல்லும் போதும்,தோட்டத்தில் நாம் இருக்கும் போதும் இதை நன்றாக கவனிக்கலாம். இதுப்போன்ற சூழலில் அவர்களுக்கு கிடைக்கும் சிறிய பொறுப்புகளை முழு ஈடுபாடுகளுடன் செய்து முடிக்கின்றனர். அதன் மூலம் அவர்களுக்கு கிடைக்கும் கற்றலை வகுப்பறையில் அமர்ந்துக்கொண்டு வார்த்தைகள் கொண்டு அறிமுகம் செய்வதென்பது மிகவும் கடினமானது. அதைவிட சின்ன சின்ன செயல்பாடுகள் கொண்டு கற்றலை இயற்கையாய் ஏற்படுத்தினார் என்பதை வாசிக்கும் போது அழகாக இருந்தது.

ஒவ்வொரு பாடத்திற்கும் புதுப்புது பெயர்கள் சூட்டி அதன அனுபவத்தினை குழந்தைகள் எழுத்துகளாய் மாற்றும் முயற்சி மிகவும் சிறப்பானது. அதுவும் தோட்டம் அமைப்பதற்கான அத்துனை முயற்சிகளும் மிகப்பெரிய பாராட்டுகளுக்குறியது. புழு எப்படி பூச்சியாக மாறும் ? இந்த சந்தேகத்தை அவர் ஒவ்வொருவருக்கும் புரியும் படி செய்த செயலும் மிகவும் அருமையானது.

ஜட்டி போடாமல் வரும் 1ம் வகுப்பு சிறுமியை கையாண்ட விதம் என்னென்ன கேள்விகளை மனதினுள் எழுப்புகிறது. குழந்தையுடன் சற்று இறங்கி பேசும்பொழுது மாற்ற முடியாத சில விஷயங்களை எவ்வள்வு எளிமையாக மாற்றிட முடியும் என்பதை காணமுடிகிறது.

முட்டை எலும்புக்கூடு, பானை ஓவியம், வாட்டர் கேன் செடி தோட்டம்,#tense கதை,கத்தரிக்காய் ராஜா பாடலும் நாடகமும்,பம்பரம்,கிளி பாடல்,அந்த ஐந்து குழுக்கள்,அவர்கள் வரைந்த ஓவியங்கள்,ஜூஜூ கடிதங்கள் என அனைத்தும் காட்சிகளாய் மனதில் ஓடுகிறது. அதுவே இந்தப் புத்தகம் பெற்ற வெற்றியென நினைக்கிறேன்.

அவரது ஒவ்வொரு செயல்பாட்டிலும் 4-5 சிறுவர்கள் ஒட்டாமல் இருப்பதை ஆங்காங்கே சொல்கிறார். அது இயற்கையானதே அதை பதிந்தது மிக முக்கியமான ஒன்று. ஆனால் அதை சார்ந்து ஆசிரியரின் மன ஓட்டத்தை பதிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. ஒரு இடத்தில் சிறுவர்களை சற்றே கடிந்துக்கொள்கிறார். ஆனால் அடுத்த நிமிடத்தில் சிறுவர்கள் வேறு எதோ செய்ததும் அன்புடன் பழகிக்கொள்கிறார். இந்தச் சம்பவத்தை முழுவதும் பதிந்திட வேண்டும் என்று தோன்றுகிறது. அதிக சுதந்திரம் சிறுவர்களுக்கு தேவையில்லை என்பதை இந்த சமூகம் பெரிதாக நம்புகிறது. அந்த நம்பிக்கையால் குழந்தையை எப்பொழுதுமே தெரிந்தும் தெரியாமலும் கடிந்துக்கொண்டேயிருக்கிறது. அந்த மனநிலையை மாற்றுவதற்கு இதுபோன்ற சிக்கல்களை கையாளும் விதத்தைப் பற்றி முழுவதுமாக பேச வேண்டும். அது நிறைய நண்பர்களுக்கு உதவியாக இருக்கும்.

தோழியின் முயற்சிகளுக்கு மீண்டும் பெரிய நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். உங்கள் வகுப்புகள் தாண்டி அந்தப் பள்ளி முழுவதும் இதுப்போன்று மாறிட வேண்டும். மற்ற பள்ளிகளும் உங்களைப் பார்த்து மாணவர்கள் ஆர்வம் சார்ந்து இயங்கிட வேண்டும். அதற்கு இந்தப்புத்தகம் உதவும் என்று நம்புகிறேன். பெற்றோர் பார்வையிலிந்து புத்தகத்தை வாசிக்கும் போது ஆசிரியர்கள் சந்திக்கும் சவால்களையும் அதற்கான அவர்கள் செய்யும் முயற்சிகளையும் நன்றாக புரிந்துக்கொள்ள முடிகிறது.

 விதை முதல் விருட்சம் வரை என்று குழந்தைகளின் அனுபவ பதிவுகளை அழகாக தொகுத்து புத்தகமாக கொண்டு வரவேண்டும் என்று அன்புடன் தோழியிடம் கேட்டுக்கொள்கிறேன்.

இறுதியாக..இது யாருடைய வகுப்பறை? என்ற ஆயிஷா.நடராசன் கேள்விக்கு விடை தந்திருப்பதுப் போல் இருக்கிறது தலைப்பும் புத்தகமும். அதற்கு எனது சிறப்பு வாழ்த்துக்கள்.

Monday, January 2, 2017

வாசிப்பு 2016 - பாரதியியல்

சீனி.விசுவ‌நாதன்,பாரதியியலில் மிக முக்கியமானவர்.பாரதி படைப்புகளை தேடித் தேடி சேர்த்தவர். தி ஹிந்துவில் வந்திருந்த இவரது பேட்டியை வாசித்ததிலிருந்து நேரில்  சந்திக்க வேண்டுமென்ற ஆர்வம் தொற்றிக் கொண்டது. சென்னைக்கு சென்றபொழுது வாய்ப்பும் அமைந்தது.

பாரதி படைப்புகளுக்காக அவர் தேடி அலைந்த கதைகளைக் கேட்க ஆசைப்பட்டேன் , ஆனால் அவரோ என்னைப் பற்றியும்  எனது வேலையைப் பற்றியும்,வாசிப்பதற்கான நேரம் ஒதுக்குவதைப் பற்றியும்  நிறைய கேட்டார்.  நாள் முழுதும் கணிணியில் அமர்வோர்களால் வாசிப்பது சிரமம் தான் என்றும் கவலை கொண்டார். தனது மனைவியின் இறப்பிற்கு பின்பு எழுதுவதுமில்லை வாசிப்பதுமில்லை என்றார். அதை கேட்கவே சங்கடமாக இருந்தது. பாரதியின் படைப்புகள் சார்ந்து இன்னும் நிறைய வெளிவர வேண்டியிருக்கிறது,போதுமான ஆட்கள் தான் இல்லை என்றார். யதுகிரி அம்மாள் மற்றும் பாரதிதாசனின் பார்வை பற்றியும்,வடமாநில தலைவர்கள் சென்னையில் நடத்திய உரைகள் சார்ந்தும் சில விஷயங்களைச் சொன்னார். நான் பாரதியியல் சார்ந்து வாசித்திருந்த ஆதவன் எழுதிய "புழுதியில் வீனை" மற்றும் ய.மணிகண்டனின் புத்தகங்கள் பற்றியும் பேசினேன். எங்களது இரண்டு மணி நேர உரையாடல் பாரதிக்கும் பெங்களூருக்கும் மாறி மாறி சென்று முடிவுற்றது.

நீண்ட நாட்களாகவே சீனி.விசுவநாதன் அவர்களின் காலவரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகளை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்றிருந்தேன்,இந்த சந்திப்பு மேலும் என் ஆர்வத்தை அதிகமாக்கியது. அடுத்த புத்தகக் கண்காட்சியில் புதிய பதிப்பாக அவை வெளியாகின்றன‌ என்று அவர் சொன்னதும் மனம் சிறகை விரித்துத் தயாரானது. ஆனால் 2016 புத்தக கண்காட்சியில் அதிர்ச்சி தரும் விலையுடன்  அவை வெளியாயின‌. 16 புத்தகங்கள் 10,000ரூ. அதுவும் மொத்தமாக 16 புத்தகங்களையும் வாங்க வேண்டுமாம்,நூலகத்திற்கான வெளியீடு என்றனர் பதிப்பகத்தினர். மலிவு விலை புத்தகமாகவோ அல்லது தனித்தனி புத்தகமாகவோ வெளியிட்டால்  கண்டிப்பாக சாமானியர்களும் வாங்குவார்கள் என்பது எனது எண்ணம்,பதிப்பகம் அதை சிந்திக்குமா என்று தெரியவில்லை. காலம் வரும் காத்திருப்போம் என்று மனதை ஆறுதல் படுத்திக்கொண்டேன்.

இதனிடையில் பாரதியியல் சார்ந்து வேறு சில புத்தகங்களும் கிடைத்தன‌ , அதன் சிறிய‌ அறிமுகம் ....

6.பாரதியின் இறுதிக் காலம் - ய.மணிகண்டன்


யானை மிதித்துதான் பாரதி இறந்தாரென சிறுவயதில் கேள்விப்பட்டிருக்கிறேன். பின்னர் யானையால் தாக்கப்பட்டு அவர் உடனே இறக்கவில்லை என்றும்,மூன்று மாதம் கழித்து உடல்நிலை சரியில்லாமல் தான் இறந்தார் என்றும் கேள்விப்பட்டேன். ஆனால் பாரதியின் இறுதி காலம் குறித்து ய.மணிகண்டன் இவ்வாறு கூறுகிறார்.

"இப்பொழுது கிடைத்துள்ள அரிய தரவுகளால் யானை தாக்கிய சம்பவத்திற்கும் இறப்பிற்கும் இடையில் குறிப்பிடத்தக்க கால இடைவெளி உள்ளமை தெளிவாகின்றது.இந்த இடைவெளி யானை தாக்கியமைக்கும் இறப்பிற்கும் நேரடியான தொடர்பில்லை என்பதை உறுதிசெய்கின்றது.இடைப்பட்ட காலத்தில் பாரதி வெளியூர் நிகழ்ச்சிகளில் பங்கேற்றத்தையும் எழுதிக் குவித்ததையும் வரலாறு காட்டுகின்றது.எனினும் யானையால் தாக்கப்பட்டமை பாரதியின் உடல்நலத்தை பலவீனமாக ஆக்கியிருக்கவேண்டும்"

.பாரதியின் இறுதி காலமென புதுவையை விட்டுக் கிளம்பியதிலிருந்து அவர் குறிப்பிடுகின்றார்.இந்தக் காலக்கட்டத்தில் பாரதியின் வாழ்வு எவ்வாறு அமைந்தது என்ற‌ ஆதாரங்களைத் தருகின்றார். அதில் முக்கியமாக கோயிலில் யானை தாக்கிய சம்பவத்தின் போது பாரதியுடன் நேரடியான தொடர்புடையவர்களான சகுந்தலா பாரதி மற்றும் ரா.கனகலிங்கம் எழுதிய‌ பதிவுகளையும் தருகிறார். இதில் யவருமே யானை தாக்குதலின் காலத்தினை பதியவேயில்லை. ஆனால் மிகமுக்கியமான ஒன்று என்னவென்றால் ,பாரதி இந்த நிகழ்வைக் கொண்டு ஒரு படைப்பைத் தந்திருக்கிறார். கதையின் நாயகன் யானையால் தாக்கப்பட்டு நண்பர்கள் துணைகொண்டு மீட்கப்படுகிறார். பார‌தியின் மனநிலையை இந்தக் கதையில் காணமுடிகிறது.

பாரதி தனது இறுதிக் காலத்திலும் வெவ்வேறு ஊர்களுக்குப் பயணிக்கிறார்,மக்களிடமிருந்து ஏகப்பட்ட வரவேற்பு கிடைக்கிறது.பாரதியின் மீது மக்களுக்கு பெரிய அபிமானம் இருந்ததையே இது காட்டுகிறது, ஆனால்  பாரதியின் இறப்பிற்கு மிகக் குறைவான நபர்களே வந்தனர் என நாம் கேள்விப்பட்டிருப்போம். உண்மையில் அதன் காரணம் என்ன என்பதை இந்தப் புத்தகம் பேசுகிறது. இந்தச் செய்திகளையெல்லாம் வாசிக்கும் போது , 100 வருடத்திற்கு முந்தைய வரலாற்றைக் கூட சரியாக பதியாத சமூகமாக நாம் இருந்திருக்கிறோம் என்று மனம் வருந்துகிறது.பாரதி என்றொறு ஆளுமையின் கதையை தேடித் தேடி வாசிக்க மனம் ஆவலுடன் காத்துக்கிடக்கிறது.

7.என் குருநாதர் பாரதியார் - ரா.கனகலிங்கம்

பாரதி வரலாற்றில் புரட்சிக்கரமான நிகழ்வுகளில் முக்கியமானது,வேறு சாதியிலுள்ள ஒருவருக்கு பூணூல்     அ ணிவித்த நிகழ்வு. அப்படி பாரதியால் பூணூல் அணிவிக்கப்பட்டவர் தான் கனகலிங்கம் அவர்கள். அவரது பார்வையில் பாரதி என்பது தான் இந்தப் புத்தகம். புகழ்ச்சி தான் பிரதானம் என்றாலும் வாசிக்க சுவாரஸ்யமான பல நிகழ்வுகள் இருக்கின்றன‌. பாரதியின் அறிமுகம் , பாரதியைச் சுற்றி இருக்கும் போலீஸ் கெடுபடிகள்,பூணூல் அணுவித்த நிகழ்வு,பாரதியின் நட்பு,பின்னர் வேலை நிமித்தமாக வெளியூருக்குச் சென்றதால் பாரதியின் தொடர்பில்லாமல் போவது,மீண்டும் சென்னையில் பாரதியை சந்திப்பது,யானை மிதித்த செய்தியை கேட்டு பதறியடித்து பாரதி இல்லத்திற்கு சென்று அவரை சந்திக்கும் தருணம் போன்ற பல அரிய தகவல்கள் நமக்குக் கிடைக்கின்றன‌. இதில் மிக முக்கியமான ஒன்று பாரதியின் உருவத்தோற்றம் பற்றிய அவரது பதிவுகள்.  பாரதியுடன் வாழ்ந்த மக்களின் பாரதி பற்றின படைப்புகள் எப்பொழுதும் அதீத ஈர்ப்பைத் தருகின்றன‌. அந்த வகையில் நான் மிகவும் ரசித்த புத்தகம் இது.

8.புழுதியில் வீணை - ஆதவன்  (தாகம் பதிப்பகம்)

 சிகாகோ நூலகத்தில் கிடைத்த புதையல் இது. பாரதியின் புதுவை வாழ்வு பற்றி ஆத‌வன் எழுதிய நாடகம்.  நாடகக் காட்சிகளின் நம்ப‌கத் தன்மைக்காக அவர் எழுதிய முன்னுரை நாடகத்தை விட சிறப்பாக அமைந்துள்ளது என்பது எனது எண்ணம். ராஜாஜிக்கும் வ.ராவிற்கும் பாரதியார் பற்றி நடக்கும் கருத்து மோதலில் துவங்குகிறது முன்னுரை. அரவிந்தரின் கருத்துக்கள் பற்றியும்,கடவுள் மீதான பாரதியின் பார்வைப் பற்றியும் பேசுகிறார். வாஞ்சிநாதனின் ஆஷ் கொலை பாரதி காலத்தில் நடந்தது,கொலைக்கு முன்பு வாஞ்சி புதுவையில் தான் சிலக் காலம் இருந்தார்,அங்கு தான் துப்பாக்கிப் பயிற்சியும் நடந்ததாகத் தெரிகிறது ,அப்பொழுது புதுவையில் வாழ்ந்த‌ பாரதிக்கு இதில் ஏதாவது தொடர்பு  இருந்திருக்குமா? பத்மநாபன்  அவர்கள் தனது படைப்புகளில் பார‌தியை அகிம்சாவாதி என்கிறார்,ரகுநாதனோ ஆஷ் கொலை திட்டத்தில் பாரதிக்கும் பங்கு இருந்திருக்க வேண்டுமென்கிறார். இந்த கருத்து வேற்றுமையை மையமாக எடுத்துக்கொண்டு ரகுநாதன் அவர்கள் சொல்லும் வாதங்களுக்கு பதில் தருவதாக அமைகிறது ஆதவனின் முன்னுரை. ஒரு கொலைக்கு பாரதி என்றும் ஆதரவாக இருந்திருக்க மாட்டார் என்பதை நிரூபிக்கும் முயற்சியே முன்னுரையின் பிரதான கருத்தாக இருக்கிறது. பாரதியின் காலத்தினை ஒட்டிய  பல படைப்புகளின் அறிமுகங்கள் இந்த முன்னுரையின் மூலம் நமக்குக் கிடைக்கின்றன‌. ஆதவனின் நாடகமும் அருமையாக இருக்கிறது. நான் முதலாவதாக வாசித்த நாடகம். வாசிக்கும் போதே காட்சிகள் கற்பனையில் ஓடுகிறது,இதுவரை இந்த நூலை யாராவது நாடகமாக எடுத்துள்ளனரா என்று தெரியவில்லை. நாடகமாக அரங்கேற்ற சிறந்த புத்தகம் இது,யாராவது முயற்சித்தால் நன்றாக இருக்கும்.

9.பாரதி : சில பார்வைகள் - ரகுநாதன்

இணையத்தில் கிடைக்கும் புத்தகம் இது. பாரதியின் பாடல்களை அலசி ஆராயும் கட்டுரைகளின் தொகுப்பு. அதில் எனக்கு மூன்று கட்டுரைகள் மிகவும் பிடித்தமானது. முதலாவதாக‌ பாரதியின் கருப்புத் தோட்டம் பாடல் ,அந்தப் பாடலில் ஏன் "ஓ" என்று வருகிறது என்ற கேள்வியுடன் கட்டுரை துவங்குகிறது , பிஜி தீவில் அடிமைகளாக கரும்பு தோட்டங்களில் தவித்து வாடும் இந்தியர்களை நினைத்து உறக்கமில்லாமல் பாரதி எழுதிய பாடல் தான் "கரும்பு தோட்டத்திலே" பாடல். அந்த மக்களின் தவிப்பின் பிரதலிப்பே "ஓ" எனும் எழுத்து.தீனபந்து என்ற ஆளுமையை எனக்கு அறிமுகம் செய்தது இந்தக் கட்டுரை தான்.

அதே போல் தாயின் மணிக்கொடி பாடலை வைத்து ஒரு ஆய்வுக் கட்டுரை.

ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் -அதன்
உச்சியின் மேல் வந்தே மாதர மென்றே
பாங்கி னேழுதித் திகழும் -செய்ய
பட்டொளி வீசிப் பறந்தது பாரிர்!

இந்திரன் வச்சிர மோர்பால்-அதில்
எங்கள் துருக்க ரிளம்பிறை யோர்பால் (தாயின்)
மந்திர நடுவுறத் தோன்றும் -அதன்
மாண்பை வகுத்திட வல்லவன் யானோ?

இதில் பிறையும் ,வந்தே மாதரம் என்ற எழுத்தும் கொடியில் இருக்கிறது என்கிறார் பாரதி,ஆனால் அப்படியொரு கொடியை நாம் பார்த்ததில்லையே என்பதில் துவங்குகிறது இந்தக் கட்டுரை. அப்பொழுது நமது கொடியில் வேறு சில வடிவங்கள் இருந்ததா,அவைகள் யாவை,அதை வடிவமைத்தது யார்,அதன் பின்னனி என்ன என்ற கேள்விகளுக்கு அழகாக வரலாற்று சான்றுகளோடு விடை தருகிறார் ஆசிரியர். இந்தக் கட்டுரை நமக்கு பல்வேறு சுதந்திர‌ ஆளுமைகளை அறிமுகம் செய்கிறது. காமா அம்மையார்,  பூபேந்திரநாத் தத்தர் (இவர் விவேகானந்தரின் சகோதரர்) பற்றிய அறிமுகங்கள் கிடைத்தது. 1907ல் ஜெர்மனியில் நடந்த சர்வதேச சோஷியலிஸ்ட் காங்கிரஸ் மாநாட்டில் காமா அம்மையார் அவர்கள் இந்தியா சார்பில் பங்கு கொள்கிறார். இங்கு தான் லெனின் இந்திய வீரர்களைச் சந்திக்கிறார். அந்த மாநாட்டில் காமா அம்மையார் இந்திய சுதந்திரம் பற்றி புரட்சிக்கரமாக உரை ஒன்றைத் தருகிறார்,அத்துடன் தான் வடிவமைத்த கொடியையும் அறிமுகம் செய்கிறார். அந்தக் கொடியின் தாக்கமும்,நிவேதிதா அம்மையார் அவர்கள் வடிவமைத்த கொடியின் தாக்கமும் தான் பாரதி பாடலில் உள்ளது என்கிறார் ஆசிரியர்.

அடுத்து பரிசு பெறத் தவறிய பாரதியின் "செந்தமிழ் நாடெனும்" பாடல் "இந்திய கும்மி" எனும் போட்டியில் பங்குப்பெற்று தோற்கிறது. அந்தப் போட்டியின் மீதே பாரதிக்கு நம்பிக்கை இல்லை, ஆனால் நண்பர்கள் சொல்வதாலே பாடலை எழுதுகிறார் என்று அந்தப் பாடலின் பின்னனியை அலசி ஆராய்கிறார் ஆசிரியர். அந்த‌ போட்டியில் முதல் பரிசு பெற்ற பாடலை எழுதிய மாதவையா தான் தமிழின் மூன்றாம் நாவலான பத்மாவதி சரித்திரம் (1898) நூலை படைத்தவர். இது போன்ற பல்வேறு தகவல்களை வாசிக்க வாசிக்க இனிமையான உணர்வு ஏற்படுகிறது.

10.பாரதியியல்: கவ‌னம்பெறாத உண்மைகள் - ய.மணிகண்டன்

இந்தப் புத்தகம் தான் "பாரதியியல்" என்ற வார்த்தையை எனக்கு அறிமுகம் செய்தது. பாரதியியலின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றின அறிமுகத்துடன் புத்தகம் துவங்குகிறது.இதில் நடத்தப்படும் ஆய்வுகள் அனைத்தும் பாரதி என்று பெயரிட்டு வெளியான பாரதியின் படைப்புகள் சார்ந்தே வந்துள்ளதென்றும் ஆனால் பாரதி பல பத்திரிகைகளின் ஆசிரியராக இருந்திருக்கிறார், அவரது பெயரிடாத பலப் படைப்புகள் வெளியாகியுள்ள வாய்ப்புகள் அதிகம் என்றும் சொல்கிறார் மணிகண்டன். கவனம் பெறாத விஷயங்கள பல உள்ளதாகவும் அவற்றையெல்லாம் தேடிட வேண்டிய அவசியத்தைப் பற்றியும் பேசுகிறார். அப்படி அவர் தேடி கண்டிட்ட சிலவற்றை நம்முடன் பகிர்கிறார். அதில் என்னை மிகவும் கவர்ந்தது பாரதிதாசன் எடுக்க நினைத்த பாரதி திரைப்படம் பற்றின தகவல்கள். பாரதிதாசன் அவர்கள் தனது வாழ்நாளுக்குள் எப்படியாவது பாரதி வரலாற்றை படமாக்க ஆசைப்பட்டாராம்,அதற்காக திரைக்கதையும் அமைத்துள்ளார். அந்தத் திரைக்கதையை படமாக்க அனைத்து வகையான முயற்சிகளையும் எடுத்துள்ளார். தனது திரைக்கதையை சிலருக்கு அனுப்பியும் உள்ளார், ஆனால் அவர் ஆசை நிறைவேறாமலேயே போய்விட்டது. அவரது ஆசையுடன் அந்தத் திரைக்கதையும் மறைந்துவிட்டது. பின்பு சமீபத்தில் தான் அந்தத் திரைக்கதையை மீட்டெடுத்துள்ளனர். அந்தத் திரைக்கதை தற்பொழுது "பாட்டுப் பறவைகள்" என்ற புத்தகத்தின் ஒரு பகுதியாக உள்ளது. பாரதிதாசனின் மகன் அதனை வெளியிட்டுள்ளார்.

"பாட்டுப் பறவைகள்" என்ற தலைப்பே இந்தப் புத்தகம் மக்களிடம் சேராமல் செய்துவிட்டது என்று வருத்தம் கொள்கிறார்
மணிகண்டன். அத்துடன் அதிலுள்ல சில அரிய நிகழ்வுகளை நம்முடன் பகிர்கிறார்.

"சுப்புரத்தினம்! நான் வாழவேண்டும் என்று நினைக்கும் 'புதுவை' நண்பர்களை விட்டு,சாக வேண்டும் என்று நினைக்கும் சென்னை நண்பர்களை அடைந்தேன். இன்று வரைக்கும் என் கவிதைத்தொண்டு என்னைக் காப்பாறி வருகிறது.

நாம் சாப்பிட்டு விட்டு உருவப்படம் எடுக்கலாம்."

இன்று நம்மிடயே உலாவும் பாரதியின் புகைப்படம் இவ்வாறு தான் எடுக்கப்பட்டிருக்கிறது என்பதை இந்தக் காட்சி மூலம் சொல்கிறார் பாரதிதாசன்.

இதை வாசித்ததிலிருந்து "பாட்டுப் பறவைகள்" புத்தகத்தை நானும் நீண்ட நாட்களாக தேடிக்கொண்டிருந்தேன். சென்ற புத்தக கண்காட்சியில் எதார்த்தமாக கண்ணில் சிக்கியது. அதுவும் கடைசியாக சுற்றிவிட்டு கிளம்பலாம் என்று சென்றபொழுது சிக்கியது. புத்தகக் கண்காட்சிக்காக சென்னை சென்றதின் பயனை அடைந்ததாக ஒரு திருப்தி கிடைத்தது.

 பாரதி,வாஞ்சி,வ.வு.சி,நிவேதிதா,சுப்ரமணிய சிவா,காந்தி,பெரியார்,விவேகானந்தர்,அவரது சகோதரர்,காமா அம்மையார்,தீனபந்து .. (பட்டியல் இன்னும் நீள்கிறது) என ஏகப்பட்ட புதையல்களை வரலாறு மறைத்து வைத்திருக்கிறது. அதையெல்லாம் தேடிப்பிடிக்க ஆசை தான். எப்பொழுது என்பது தான் கேள்வி...








Monday, December 26, 2016

வாசிப்பு 2016 - சிறுவர் இலக்கியச் சிந்தனைகள்

சிறுவர்களுக்கான இலக்கியத்தை சிறுவர்களின் வயதிற்கேற்ப‌ இரண்டாக பிரித்தல் வேண்டும் என்று நண்பர் விழியன் அடிக்கடி சொல்வார். எட்டு வயது வரை உள்ள சிறுவர்களுக்கானது "குழந்தை இலக்கியம்" என்றும் , 8 முதல் 14 வரையில் உள்ளவர்களுக்கானது  "சிறுவர் இலக்கியம்" என்றும் பிரித்திடல் வேண்டும். அதே போன்று "தமிழ் விமர்சன" இலக்கியத்தில் "சிறுவர் இலக்கிய விமர்சனம்" என்று தனிப் பிரிவையையும் உருவாக்கிடல் வேண்டும்.அந்த பிரிவில் சேர்க்கப்பட வேண்டியவை தான் கீழே உள்ள புத்தகங்கள். ஆசிரிய‌ர்களுக்கும்,பெற்றோர்களுக்கும் மற்றும் சிறுவர்கள் சார்ந்து இயங்கும் நண்பர்களுக்கும் இதனை பரிந்துரை செய்கிறேன். இந்தப் புத்தகங்கள் மூலமாக சிறுவர் இதழ்கள் பற்றின தரவுகள் நிறைய கிடைத்தன‌. அதில் முக்கியமான ஒன்று 1950 களில்,மாதம் 50 தமிழ் சிறுவர் இதழ்கள் வெளியாகியுள்ளன‌ என்பது தான். இன்று எத்தனை இதழ்கள் வெளிவருகின்றது என்ற கேள்வி தான் பஞ்சுமிட்டாய் இதழாக உருமாறியது.

3. தமிழ்க் குழந்தை இலக்கியம் விவாதங்களும் விமர்சனங்களும் - சுகுமாரன் 

சென்னையில் எழுத்தாளர் விழியன் இல்லத்தில் சிறுவர் இலக்கியம் சார்ந்து ஒரு நாள் பட்டறை நடந்தது , அப்பொழுது அறிமுகமான புத்தகம் தான் இது . சுகுமாரன் அவர்களும் அங்கு வந்திருந்தார். செம ரகளையான புத்தகம். தமிழ் சிறுவர் இலக்கியத்தின்வளர்ச்சி,அதன் போக்கு,தற்பொழுதைய நிலை,சிறுவர் இலக்கியத்தின் பிரிவுகள்,இதழ்கள் என அனைத்து அம்சங்கள் பற்றியும் விரிவாக பேசுகிறார் சுகுமாரன். ஒரு நல்ல அரசு,சிறுவர்களுக்கான உலகத்தினை கட்டமைப்பதில் என்னென்ன‌ செய்திடல் வேண்டும் என்ற கேள்விக்கு நல்ல நூலகங்கள்,ஒவ்வொரு நூலகங்களிலும் சிறுவர்களுக்கான பிரிவு,சிறுவர்களுக்கான நிகழ்வுகள்,சிறுவர்களுக்கான  திரையரங்குகள் என்று நீண்ட பட்டியலை தருகிறார். இவை அனைத்தும் தமிழகத்தில் இருக்கிறதா,ஏன் அதற்கான எந்தவித முயற்சிகளும் எடுக்கப்படவில்லை என்பதைப் பற்றியும் பேசுகிறார்.

தற்பொழுது யார் யார் சிறுவர் இலக்கியத்தில் இயங்குகின்றனர்,சிறுவர் இலக்கியத்தில் பள்ளி ஆசிரியர்களின் பங்கு எத்தகையது,உண்மையில் சிறுவர்களுக்கான படைப்புக‌ள் தான் வருகிறதா என்று பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. காலம் மாறுகிறது சிறுவர்களின் ரசனையும் உலகமும் ஏகப்பட்ட மாற்றங்களை சந்தித்துவிட்டன‌ ஆனால் சிறுவர் இலக்கியம் மட்டும் மாறாமல் வள்ளியப்பா ஏற்படுத்திய பாணியிலே பயணிப்பதை சுட்டிக் காட்டுகிறார்.

"குழந்தை இலக்கியத்தில் குழந்தையின் உணர்வுகளும் எண்ணங்களும் செயல்களுமே வெளிப்பட வேண்டும். ஆனால் வெளிப்பட்டதெல்லாம் குழந்தை எழுத்தாளரின் எண்ணங்களும் உணர்வுகளுமே !"

என்று சிறுவர் இலக்கியம் சிறுவர்களிடமிருந்து அன்னியப்படிருப்பதையும் சாடுகிறார்.

4.சிறுவர் இலக்கியச் சிந்தனைகள் - பூவண்ணன்

சிறுவர் இலக்கியம் சார்ந்து வெவ்வேறு காலக்கட்டத்தில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பே இந்த புத்தகம். தமிழ் சிறுவர் இலக்கியம் எப்பொழுது தோன்றியது, அதன் ஆளுமைகள் யார்,அதன் வளர்ச்சி எத்தகையது, முதல் சிறுவர் இதழ் எது , இதுபோன்ற எண்ணற்ற‌ கேள்விகளுக்கு விடையாக அமையும். பாடல்கள்,கதைகள்,கதைப் பாடல்கள்,விடுகதைகள்,நாடகங்கள்,திரைப்படங்கள் என சிறுவர்கள் இலக்கியத்தின் பிரிவுகளில் தமிழில் வந்த படைப்புகளைப் பற்றின ஒரு விரிவான பார்வை இதில் உள்ளது.
அவ்வையின் ஆத்திச்சூடி உண்மையிலே சிறுவர் இலக்கியமா  அதைச் சார்ந்து நடந்த விவாதகங்கள்,சிறுவர் இலக்கிய எழுத்தாளர் சங்கத்தின் தோற்றம்,அதன் செயல்பாடு,வள்ளியப்பா எனும் ஆளுமையின் பங்கு என தமிழ் சிறுவர் இலக்கியத்தின் வரலாற்றை அழகாக சொல்கிறது. வெவ்வேறு காலக்கட்டத்தில் எழுதப்பட்ட கட்டுரைகள் என்பதால் , சில கருத்துக்கள் மீண்டும் மீண்டும் வருவது சலிப்பை தருகிற‌து.மற்றபடி சிறுவர் இலக்கியம் பற்றிய‌ புரிதலை தேடுவோருக்கு இது ஒரு சிறந்த புத்தகம்.

5.அழ.வள்ளியப்பா - பூவண்ணன்

அழ.வள்ளியப்பா...சென்ற தலைமுறை தமிழ் பெற்றோர்களுக்கு நன்கு பரிச்சயமான பெயர். சிறுவர் பாடல்கள் பற்றின‌ பேச்சுக்கள் எழும் போதெல்லாம் வள்ளியப்பாவின் பாடல்களை
நினைவுகொள்கின்றனர். இந்தத் தலைமுறை பெற்றோர் பல‌ருக்கும் அழ.வள்ளியப்பா யார் என்பதே தெரியவில்லை. 90களில் டிவியின் தாக்கம் அதிகமானது இதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம். ஆனால் அவர்களுக்கு  சினிமா அல்லாத சிறுவர்களுக்கான‌ தமிழ் பாடல்கள் என்றதும் முதலில் நினைவிற்கு வருவது வள்ளியப்பாவின் பாடல்கள் தான்.  "அணிலே அணிலே ஓடி வா"  , "தோ தோ நாய் குட்டி" , " மாம்பழமாம் மாம்பழம் " போன்ற பாடல்கள் அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது.

வள்ளியப்பா புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் , ஆனால் சென்னையில் வங்கி பணியிலிருந்தார். சென்னையில் இருந்துக்கொண்டே புதுக்கோட்டையில் சிறுவர் இதழை கொண்டுவந்திருக்கிறார். அச்சு மட்டும் தான் புதுக்கோட்டையில் நடந்திருக்கிறது. அதற்கு முந்தைய வேலைகள் அனைத்தையும் சென்னையிலே செய்திருக்கிறார். மிகவும் மலைப்பாக இருக்கிறது. மாதம் 10 இதழ்கள் வெளிவர உறுதுனையாக இருந்திருக்கிறார். சிறுவர்களுக்கான படைப்புகளை மட்டுமல்ல , பல படைப்பாளிகளையும் உருவாக்கியுள்ளார். இந்த வேகத்திலும் , படைப்புகளில் சிறுவர்களை திசை திருப்பும் எண்ணங்கள் எதுவும் வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்திருக்கிறார்.ஒரு முறை தமிழ் சிறுவர் இலக்கியத்தில் துப்பாக்கி கலாச்சாரம் தலை தூக்கியிருக்கிறது, அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். (அதன் எதிர்ப்பு எப்படி முடிவுற்றது என்பதை தேடிட வேண்டும்.)

இந்தப் புத்தகத்தை வாசித்தப் பொழுது மனதில் ஓடிய எண்ணம் இது தான், "தனி மனிதராய் மனுஷன் எப்படியெல்லாம் இயங்கியிருக்கிறார்!" என்று. நல்ல நண்பர்கள் மட்டும் இருந்தால் போதும் நமது விருப்பங்களை கண்டிப்பாக உருமாற்றிக் கொள்ள முடியும் என்பது தான் வள்ளியப்பாவின் வாழ்வு எனக்கு சொல்வதாக தோன்றுகிறது.

Thursday, March 5, 2015

யார் பாரதி?

சமூகவலைதளங்களை ஆயிரம் நொட்டை சொன்னாலும் சில நல்லதும் இருக்கத்தான் செய்கிறது , அதில் முக்கியமாக நான் கருதுவது மறைந்த பல தலைவர்களைப் பற்றி அடிக்கடி நினைவுபடுத்திக் கொண்டேயிருப்பது தான்.தலைவர்களின் பிறந்த / இறந்ததினத்திலோ அல்லது வரலாற்றின் முக்கிய நினைவுகளின் தினத்திலோ அவற்றை பற்றின‌ பதிவுகள் வருகின்றது.சுவாரஸ்யமான சம்பவங்கள், சர்ச்சைகள், ஆதரவுகள்,எதிர்ப்புகள் என்று அன்றைய தினம் கலைகட்டிவிடுகிறது.அப்படித் தான் பாரதி பற்றின "யார் பாரதி?" என்ற யூடுயுப் வீடியோ பகிரப்பட்டது.அதன் வழியே வ.ரா எழுதிய புத்தகம் பற்றியும் , யதுகிரி அம்மாள் எழுதிய பாரதி நினைவுகள் என்ற புத்தகம் பற்றியும் தகவல்கள் கிடைத்தது.

இரண்டு புத்தகமும் இணையத்திலே கிடைத்தும் விட்டது.அப்புறம் என்ன ?.. வீடியோ பார்த்த ஆர்வத்தில் இரண்டு புத்தகங்களையும் back to back படித்துவிட்டேன்.ஒருவரின் சரித்திரத்தினை வாசிக்கும் போது அதில் அவரது புகழ்ச்சி ஓங்கியிருக்கும் பட்சத்தில்  ஒருவித‌ சலிப்பினை ஏற்படுத்திவிடும்.அதற்கு பயந்தே சரித்திர நூல்களை தவிர்த்துவிடுவது வழக்கம்.ஆனால் இந்த இரண்டு புத்தகங்களிலும் புகழ்ச்சியை தேவையான இடத்தில் மட்டுமே சந்தித்தேன்.பாரதி பற்றின விமர்சணங்களை இருவரும் பதிந்திருந்தனர்.இரண்டுமே பாரதியின் புதுச்சேரி வாழ்வினை பற்றியது தான்.திரைப்படங்களில் மட்டுமே பாரதிப் பற்றின செய்திகளை அறிந்தவன் என்றதால் எனக்கு இந்தப் புத்தகங்கள் மிகவும் முக்கியமானவை.

முதலில் வாசித்தது யதுகிரி அம்மாளின் "பாரதி நினைவுகள்" தான்.யதுகிரி - பாரதியின் நண்பரது மகள்.பாரதி பாடல்களை இயற்றியதும் அதனை நண்பர்களிடம் பாடி காட்டுவதை வழக்கமாக வைத்திருக்கின்றார் , அப்பொழுது யதுகிரியையும் அழைத்து பாடல்களை பாடி அதனை திரும்ப பாடச் சொல்லி ரசிக்கின்றார்.இவ்வாறு பாடல்கள் பிறந்த கதைகளையும்  , தனக்கும் பாரதிக்கும் நடந்த விவாதங்கள் பற்றியும் ,  பாரதிக்கும் செல்லம்மாளுக்கும் இடையே நடக்கும் சின்ன சின்ன சண்டைகளைப் பற்றியும் , செல்லம்மாளின் கவலைகளையும் இந்தப் புத்தகத்தில் பதித்திருக்கின்றார்.யதுகிரிக்கும் பாரதிக்கும் நடந்த உரையாடல்களே அதிகம் இருப்பதால் மிக எளிய மொழி நடையாக இருந்தது.ஆரம்ப காலங்களில் தினமும் அவர்கள் கடற்கரைக்கு செல்கின்றனர்,அப்பொழுது நடக்கும் உரையாடல் , செல்லம்மாளுக்காக பாரதியிடம் சண்டைப் பிடிப்பது , திருமணம் நிச்சயம் ஆனதும் பாரதியை சந்திப்பதை தவிர்க்கும் போது பாரதி சொன்ன வார்த்தைகள் என பல சுவாரஸ்யமான உரையாடல்கள் இருக்கின்றது.அதில் எனக்கு முக்கியமாக தோன்றிய ஒரு உரையாடல் , யதுகிரி பள்ளிக்கு சென்று பயில வேண்டும் என்று விரும்புகின்றார் , வீட்டில் மறுத்து விட்டனர்.ஆதலால் மிக வருத்தத்தில் இருக்கும் அவரை பாரதி தேற்றுகிறார்.அப்பொழுது பாரதியும் யதுகிரியின் ஆசைக்கு எதிராகவே பேசுகின்றார்.அந்த எண்ணம் ஆங்கிலத்தின் மீது இருந்த வெறுப்பாக இருந்த போதும் எனக்கு பெண்கள் பள்ளிக்கு செல்வது சரியல்ல என்ற எண்ணமாகவே தோன்றியது(இது எனக்கு ஏற்பட்ட எண்ணமே, தவறாக இருப்பின் மன்னிக்கவும்).

பாரதியின் மெளன விரதமும் , இறப்பினை கடந்து விட நினைக்கும் அவரது மன ஓட்டமும் நாம் அதிகம் தெரிந்துக்கொள்ளாதவை.அவை இரண்டையும் வாசிக்கும் போது மனதினுள் ஒரு வருத்தம் தோன்றத்தான் செய்கின்றது.பாடல்களை பாரதியே மெட்டெடுத்து பாடியிருக்கின்றார்.தனது சுற்றத்தில் அவர் கேட்ட நாட்டுபுற பாடல்களின் மெட்டு,சில french பாடல்களின் மெட்டு என அசத்தியிருக்கிறார்.இப்பொழுதிருக்கும் வசதிகள் அவரது காலத்தின் இருந்திருந்தால் அனைத்தையும் அவரது குரலிலே நாம் எப்பொழுதும் கேட்டிருக்கலாம்.

என்ன சொல்ல...நமக்கு கொடுத்து வைத்தது அவ்வளவு தான்...

குடும்ப சிக்கல்களில் தவித்த பாரதியை பார்த்த எனக்கு வ.ரா எழுதிய புத்தகம் வேறொரு பாரதியை காட்டியது.வாசிப்பின் துவக்கத்தில் தகவல்கள் எளிமையாக இருப்பதாக தோன்றியது , ஆனால் போக போக ஏகப்பட்ட தகவல்கள் .பாரதியின் நண்பர்களைப் பற்றியும்,பாரதியின் பழக்க வழக்கங்கள் பற்றியும்,பாரதியின் ஆசைகள் என‌ நிறைய பேசுகிறார் வ.ரா,பாரதியிடம் தனக்கும் பிடிக்காத பழக்கமாக‌ அவர் கூறுவது "பாரதியின் எச்சில் துப்பும் பழக்கம்".அதனை அவரது நண்பரது வீட்டிலும் செய்கின்றார்.ஆனால் அந்த வீட்டில் அவருக்கு எந்தவித எதிர்ப்பும் இல்லை.அவர்கள் எதுவும் சொல்லாமல் சுத்தம் செய்கின்றனர்.அவர் வேறு ஜாதியை சேர்ந்த ஒருவருக்கு பூணல் அணிவித்து பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் , பாரதியை தேடி போலிஸ் வட்டமிட்ட சம்பவம்,புயலால் பாதிக்கப்பட்ட ஊரினை மீட்டெடுக்க துடிக்கும் நிகழ்வுகள்,காந்தியை சந்திக்கும் நிகழ்வு,காங்கிரஸ் மாநாடு  என அனைத்தையும் வாசிக்கும் போது பாரதி நம் மனதில் கண்டிப்பாக  சம்மணமிட்டு அமர்ந்துவிடுவார்.

பாரதியின் சமுதாய ஈடுபாடுகள் , அவரது நட்பு வட்டங்கள்,அவரது பத்திரிக்கை அனுபவங்கள்,போலிஸ் எதிர்ப்பு , அவரது கோபம்,ஆதங்கம்,எழுத்து,படைப்பு,பாடல் என அடுக்கிக்கொண்டே போகின்றார் வ.ரா.பாரதியின் உருவமைப்புகளை அழகாக வர்ணிக்கிறார் , மிக ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் "பாரதி வழுக்கை" என்பது தான்.எத்தனை வருடங்களாக பாரதியின் புகைப்படத்தை பார்த்திருக்கிறேன்.ஆனால் அந்த முண்டாசினுள் இப்படி ஒரு ரகசியம் இருப்பதாக நான் யோசித்ததேயில்லை.என்னை பொறுத்த வரை இது ஒரு முக்கியமான தகவல்.

பாரதிக்கு நீச்சல் அடிக்க வேண்டுமென்று ஆசையாம் , ஆனால் நண்பர்கள் கடலில் நீந்த இவர் மட்டும் கரையிலிருந்து ஏக்கமாக பார்ப்பாராம்.வ.வே.சு ஐயரிடம் செஸ்,சீட்டு விளையாட்டுகளில் போட்டியிடுகின்றார்.செஸில் அவர் வெற்றி பெறும் போது மனுசன் ஏகப்பட்ட சந்தோசத்தில் குதிப்பாராம்.பாரதி கைதான பின்பு , ஆங்கிலய அரசிற்கு மன்னிப்பு கடிதம் எழுதி தான் வெளியே வருகின்றார்.அதன் விமர்சணங்களை தற்பொழுதும் இணையத்தில் வாயிலாக‌ பார்க்க முடுகிறது.ஆனால் அப்பொழுதைய சூழலில் பாரதி அவ்வாறு செய்தததை தவறாக எண்ண மனம் மறுக்கிறது,அதற்கு இந்தப் புத்தகமும் ஒரு முக்கியமான காரணம்.

பாரதி யானையால் தாக்கப்பட்டார் என்பது நாம் அறிந்ததே,ஆனால் அப்பொழுது அவரை குவளைக் கண்ணன் என்பவர் தான் காப்பாற்றியிருக்கிறார்.இவரைப் போன்ற நிறைய நபர்களை இரண்டு புத்தகங்களும் நமக்கு அறிமுகம் செய்கின்றது.

அது ஒரு நீண்ட பட்டியில் , அதில் சில முக்கியமான நபர்களின் புகைப்படங்கள் இந்த இணையத்தில் கிடைக்கிறது.இதில் பாரதியின் பல படைப்புகளும் கிடைக்கிறது.பாரதியின் சுய விமர்சணமாக கருதப்படும் பாரதியின் சின்னச் சங்கரன் கதை திருடப்பட்டு விட்டது , அதில் நான்கு அத்தியாயம் மட்டுமே தற்பொழுது நம்மிடம் இருக்கின்றது.இதுப் போன்ற அறிய பாரதி படைப்புகள் இந்த தளத்தில் கிடைக்கிறது.

அடுத்து இந்த தளத்தினை வேட்டையாடலாம் என்றிருக்கிறேன்....யாராவது வரீங்களா?



Sunday, January 25, 2015

பலிக்குமா இந்த பகல் கனவு

பகல் கனவு - ஜிஜுபாய் பதேக்கா [தமிழில் - சங்கரராஜுலு]
வெளியீடு - நேஷனல் புக் டிரஸ்ட் [இணையத்தில் கிடைக்கிறது]

இந்தப் புத்தகத்தை வாசித்து முடித்ததும் தான் ஆசிரையரைப் பற்றி தேடினேன்.இந்தியாவில் Montessori கல்வி முறையை அறிமுகப்படுத்தியது ஜிஜுபாய் பதேக்கா அவர்கள் தான்.Montessori கல்வி முறையைப் பற்றி போதுமான புரிதல் எனக்கில்லை.விளையாட்டு மூலம் சொல்லித் தருவார்கள், வழக்கமான வகுப்பு முறைகளுக்கு பதிலாக Mixed age வகுப்பு முறைகள் இருக்குமென‌ இணையத்தில் படித்திருக்கிறேன்.பெங்களூரில் நிறைய Montessori  க்கள் இருக்கின்றன (அது உண்மையிலே Montessori  யா என்பதை இனிமேல் தான் விசாரிக்க வேண்டும்).எனது மகளுக்காக பள்ளிகளை விசாரித்தப் பொழுது சாதாரண பள்ளிகளை விட அசாதாரண கட்டணங்கள் இருந்ததால் விட்டுவிட்டேன்.


இந்தப் புத்தகம் Montessori கல்விமுறையின் தாக்கத்தில் தான் எழுதியது என முன்னுரையில் படித்தேன்.நமது சூழலிற்கு தகுந்தாற் போல் அந்த கல்விமுறையை மாற்றி அதனை 4ம் வகுப்பில் செயல்படுத்தி பார்க்கும் ஒரு அசிரியரியரின் கனவு தான் இந்த "பகல் கனவு".கதையின் நாயகன் ஆசிரியர் தான்.அவர் , மனப்பாடம் செய்யும் கல்வி முறையிலிருந்து விலகி நிற்க முயற்சிக்கிறார்.மாணவர்களுக்கு எது முக்கியம் ? முழுமையான புரிதலா அல்லது தேர்வின் மதிப்பெண்களா ? இது தான் அவரது கேள்வி.மதிப்பெண்கள்,வேலை,சம்பளம் என்ற பெரும்பாலோரின் போக்கை கேள்வி கேட்பது போல் இருந்தது.புரிதல் தான் கல்வியின் நோக்கமாக இருந்திருக்க வேண்டும் என்பது இந்த ஆசிரியரின் ஆசை மட்டுமல்ல‌.அது எல்லோரது ஆசையும் கூட."புரிந்து படி" என ஆசிரியர்,பெற்றோர்,அறிஞர்கள்,அனைவரும் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.ஆனால் உண்மையில் அதை செய்வது கடினமாக தான் இருந்தது.தேர்விற்காக படிக்கும் என்னைப் போன்ற கட்சியினர் அப்பொழுது வேண்டுமானால் புரிந்துப் படிக்கலாம் , ஆனால் தேர்வு முடிந்ததும் காற்றில் கரைந்து விடும் என்பது தான் உண்மை.ஏனென்றால் அதன் பயன்பாடு விளங்கியதேயில்லை.அப்படி ஒரு basement , பள்ளியிலிருந்தே அமைந்துவிட்டது.Rhymes லிருந்து ஆரம்பமாகிறது நமது கல்விதிட்டங்களின் ஓட்டைகள்.எதற்காக rain rain go away , london bridge is falling down,hot cross bun போன்ற பாடல்கள் இன்றும் மாறாமல் உள்ளது? இந்த கேள்வியை யாரிடம் கேட்பது என்று விளங்காமல் தான் நாம் எல்லாரும் இருக்கின்றோம்.


கல்கி,சாண்டிலியன் போன்றோரின் எழுத்துக்கள் நம்மில் பலரிடம் ஏற்படுத்திய வரலாற்று ஆர்வத்தை ஏன் பாடப்புத்தகத்தால் ஏற்படுத்த முடியவில்லை.அவர்கள் கற்பனையை கலக்கின்றார்கள் என்றாலும் உண்மையையும் நம் மனதில் பதிய செய்துவிடுகிறார்கள் என்பதை ஒற்றுக்கொள்ளதான் வேண்டும்.வரலாற்றைப் போல ஒரு சுவாரஸ்யமான பாடம் இல்லை என்று எனக்கு இப்பொழுது தோன்றுகிறது.வரலாற்றை சுலபமாக கதையாக சொல்ல முடியும் ஆனால் வகுப்புகள் அப்படி இருப்பதில்லை.அவை வருடங்களாகவும்,வாயினுள் நுழையாத பெயர்களாகவும் தான் இருக்கிறது

இதே மனப்போக்கில் தான் இந்தக் கதையின் நாயகனும் இருக்கிறார்.அவர் தனது வகுப்பில் முதல் 3-4 மாதத்திற்கு வெறும் கதைகளை தான் சொல்கிறார்.கற்பனைகள் மூலம் மாணவர்களை கதைக்குள் இழுக்கிறார்.கதைகளை மெல்ல மெல்ல அவர்கள் மனதில் பதிக்கின்றார்.கதைகளை நாடகமாக உருமாற்றுகிறார்.பின்னர் கதை உண்மையை விட்டு எவ்வளவு தூரம் மாறியிருக்கிறது என்பதை யோசிக்கிறார்.அடுத்த நாள் உண்மை கதையை சொல்கிறார் , ஆனால் மாணவர்கள் ஏற்க மறுக்கின்றனர்.5000 குதிரைகள் வந்த இடத்தில் 50 எனும் மாற்றத்தைக் கூட மாணவர்கள் கண்டுபிக்கின்றனர் என்பது அவர்கள் எவ்வளவு தூரம் கதைக்குள் இருக்கின்றனர் என்பதை ஆசிரியருக்கு உணர்த்துவதாக இருக்கிறது.மெல்ல மெல்ல உண்மையினை கதைக்குள் கொண்டு வருவதற்கு அவருக்கு சிலக் காலம் தேவைப்படுகிறது.

மாணவர்கள் சரியான வழியில் இழுந்து செல்வதாக அவருக்கு முழு நம்பிக்கை பிறந்ததும் , ஒவ்வொரு கட்டமாக நகர்கிறார்.அவரை கிண்டல் செய்த மற்ற வகுப்பாசிரியர்களும் கவணிக்க செய்யும் சந்தர்ப்பமொன்று பள்ளிவிழாவில் அவருக்கு அமைகிறது.எப்பொழுதும் நடக்கும் அபத்தத்தை எதிர்த்து தனியாக ஒரு நாடகம் போடுகின்றனர்.எந்த அலங்காரமும் இல்லை,மனனம் செய்யும் வசனமுமில்லை . அவர்கள் அன்றாடன் பேசிய கதைகள்,அன்றாடம் அவர்கள் வகுப்பில் நடித்த நாடகங்களையே அங்கு அரங்கேற்றம் செய்தனர்.தெளிவான நடிப்பும்,வசனங்களும் அங்கு அனைவரையும் ஆச்சரியப்பட செய்கிறது.அதுவே அனைவரது கவனத்தையும் ஈர்க்கிறது.

கல்வி நிர்வாகி நாயகனின் முறை சரியானது என்பதை உணர்ந்து அவரிடம் விசாரிக்கும் போது , இலக்கண வகுப்புப் பற்றி இருவரும் பேசுகின்றனர். அவரை மிகவும் பாராட்டி வேண்டிய உற்சாகத்தை தருகிறார் கல்வி நிர்வாகி.ஆண்டு இறுதி தேர்வில் அவரது வகுப்பு மாணவர்கள் என்ன செய்கின்றனர் என்பதே மீதி கதை.எனக்கு அந்த இலக்கண விளக்கம் மிகவும் பிடித்துவிட்டது.இந்த முறையை நாமும் நமது வீட்டில் முயற்சி செய்து பார்க்கலாம் என தோன்றியது.பள்ளியில் மாற்றங்களை எதிர்ப்பார்க்கலாம் ஆனால் நடக்குமென சொல்ல முடியாது.ஆனால் வீட்டில் கண்டிப்பாக நாம் முயற்ச்சிக்கலாம் , என்ன...கொஞ்சம் ஆர்வமும் அதற்கான உழைப்பும் தேவை.அதற்கு இந்த புத்தகம் உறுதுணையாக இருக்கும்.

இந்தப் புத்தகம்  1931 ல் குஜராத்தியில் எழுதியது.அப்பொழுதே கல்விமுறையின் போக்கை கண்டு மனம் வருதிருக்கிறார் என்பது வியப்படையச் செய்கிறது. அப்பொழுது அவர் கண்ட கனவு , 80 ஆண்டுகள் கடந்தும் கனவாகவே இருப்பதால் தான் "பகல் கனவு" என்று பெயர் வைத்தாரோ..?



Monday, January 12, 2015

2014 - வாசிப்பு - இத்தோடு நிறுத்திக்கலாம்

33.மரம் - ஜீ.முருகன்


இந்த நாவலைப் பற்றி இரு வேறு கருத்துக்கள்  என்னிடன் இருக்கிறது.என்னைப் பொறுத்தவரை கடவுள் பாதி மிருகம் பாதி தான்.நாவல் திருவண்ணாமலையில் நடக்கிறது , காலத்தால் அங்கு நடைபெறும் மாறுதல்களை கதாப்பாத்திரங்கள் பேசுகிறது , உறவுகள் , பந்தங்கள் , அதன் முரண்பாடுகளும் என நகர்கிறது.நாவலில் முக்கியமாக இரண்டு நபர்களைப் பற்றி பேச்சு அடிக்கடி வருகிறது , அதில் ஒருவர் கோபாலர் எனும் சந்நியாசி(இந்த கதாப்பாத்திரம் ரமணரைத் தான் சொல்கிறாரா என்று தெரியவில்லை) மற்றும் நீட்ஷேவின் வார்த்தைகள்.கோபாலர் ஆசிரமம் அடிக்கடி இதில் வரும் , அவர் அங்குள்ள மரத்தில் தூக்குமாட்டி இறந்தவிடுகிறார் என்று சொல்லப்படுகிறது ஆதலால் அந்த மரத்தை மக்கள் கோபாலராக நினைக்கின்றனர்.அவரது இறப்பிற்கு பிறகு அந்த ஆசிரமத்தின் வேறுபாடுகளும் பேசப்படுகிறது.அத்தோடு பொருளாதார சந்தை எப்படி ஆன்மீகத்தையும் வியாபரமாக மாற்றுகிறது என கதாப்பாத்திரங்கள் உரக்கப் பேசுகிறது.அந்த ஆசிரமத்தின் ஒரு விஞ்ஞானி ஒருவரும் வந்து சேருகிறார் , அவர் மூலம் எப்படி விஞ்ஞானத்தின் மீதும் சாடுகிறார்கள்.தவிர்க்கமுடியாத வார்த்தகளாக அவை நம் மனதில் வாசிக்கும் போது பதியத்தான் செய்கிறது.மேலும் முதன்மையாக உறவுகளையும் அதிலுள்ள சிக்கல்களையும் பேசுகிறது.நாவல் செம என்று சொல்லும் தருணத்தில் நாவலின் வரும் ஏற்றுக்கொள்ளப்படாத(என்னால்) விஷயம் மனதை வதைக்கிறது. கலாச்சாரம் எனும் போர்வையில் சிக்க விரும்பாத மனிதர்களின் கதை என்றாலும் அவர்களும் தங்களது வாழ்வில் மிகுந்த மன உலைச்சலுக்கே ஆளாகின்றனர் என்றே தோன்றுகிறது.கலாச்சாரத்திற்கு கட்டுப்பாட்டில் உள்ளவர்களுக்கும் அதை மீறுபவர்களுக்கும் குறைந்தப்பட்ச வித்தியாசமே தெரிகிறது.அவர்களது வாழ்வு சுதந்திரம் நிறைந்ததாக தெரிந்தாலும் அது வெறும் பிம்போமோ என தோன்றுகிறது.முருகனின் எழுத்து நடை ரசிக்க வைத்தாலும் நாவலை முடிக்கும் போது ஒரு குழப்பமான மனநிலையே என்னிடம் இருந்தது.குறிப்பு : இதில் A விஷயங்கள் நிறைந்திருக்கிறது.


34.பூமியின் பாதிவயது - அ.முத்துலிங்கம்


வாசிப்பில் அதிகம் சோகம் கலந்திருப்பதாகவே இருக்கிறது.மகிழ்வை பதிவு செய்யும் இலக்கியம் மிகவும் குறைவே.அப்படி பதிவு செய்வதில் அ.முத்துலிங்கத்திற்கு எப்பொழுதும் ஒரு இடமிருக்கும்.அவரது 3 நூல்கள் படித்திருக்கிறேன்.அதில் அனைத்திலும் நான் ரசித்த மிகவும் சாதரண நிகழ்வை அழகாக பதிந்திருப்பார்.அந்த வகையை சார்ந்தது தான் இந்தப் புத்தகம்.இது அவர் அவ்வப்போது எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே.20 சதவித கட்டுரைகள் எனக்கு புரியவில்லை , அதை தவிர்த்து மற்றவை அனைத்தும் செம என சொல்ல வைத்தது.GPS device வைத்து technical விவரம் இல்லாது 2 பக்க கட்டுரை எழுதியிருக்கிறார்.ஒரு எளியவன் முதன் முதலாக அந்த சாதனைத்தை பார்ப்பதிலிருந்து அதை முழுவதுமாய் உப்யோகமாய் பயண்படுத்தும் வரை.ஒரு கருவி அவனது வாழ்வில் எப்படி அங்கமாய் ஆகும் வரை என சொல்லலாம்.நான் மிகவும் ரசித்த கட்டுரை அது.அதேப் போன்று தமிழ் யுனிகோட் பற்றி ஒரு கட்டுரை , ஆவண செய்யவேண்டிய விஷயம்.இது மாதிரி பல ருசிகர கட்டுரைகள் இருக்கின்றது.கொஞ்சம் பொறுமையாக படித்தால் மிகவும் ரசிக்கலாம்.மொழிப்பெயர்ப்புகள் என்ற தலைப்பில் வரும் சில கதைகளும் , சில புத்தகங்கள் பற்றி வரும் கட்டுரைகளும் புரியாமல் சலிப்பை ஏற்படுத்தியது.மற்ற அனைத்தும் மிகவும் ரசிக்கும் வகையில் இருந்தது.

35.அகம் புறம் - வண்ணதாசன்


இந்தப் புத்தகம் ரொம்ப நாளாக எனது அலமாரியில் உறங்கியது . ஏனென்றால் வண்ணதாசனின் எழுத்துக்கள் போதுமான நேரம் கிடைத்தால் தான் என்னால் படிக்க முடியும்.ஆதலால் தக்க நேரத்திற்காக காத்திருந்தேன்.தனிமையில் இரண்டு நாள் கிடைத்தது.சரியென வண்ணதாசனுக்கு அதை கொடுத்துவிட்டேன்.ரொம்ப பொறுமையாகவும் , ரசித்தும் வாசித்தேன்.அவரது சின்ன சின்ன அனுபங்களை அழகாக பதிந்திருந்தார்.அவர் சந்தித்த மனிதர்களைப் பற்றியே அதிகம் இருந்தது.விதவிதமான மனிதர்களைப் பற்றி அவர் பேசும் போது நமது நினைவின் ஓரத்தில் ஒளிந்திருக்கும் நபர்கள் நினைவிற்கு வருகின்றனர்.திங்கள் கிழமை மனிதர்கள் என அவர் சில இடங்களில் கிழமைகளை முன்னிறுத்தி மனிதர்களை குறிப்பிடுவது ரசிப்பதாக இருந்தது.வாசிக்கும் போது சண்டையிட்ட நண்பருடனோ ,ரொம்ப நாளாக பேசாம இருந்திருக்கும் உறவிடனோ பேச வேண்டும் என தோன்றும் . (எல்லாம் சொந்த அனுபவம் தான்).


36.அறம் - ஜெ மோ


ஜெ மோ வின் மிகச் சிறந்த படைப்பென அனைவரும் சொல்லும் புத்தகம்.எனக்கு மிகவும் பிடித்த புத்தகம்.நாயகராக வாழ்ந்த சில மக்களின் வாழ்வினை சொல்லும் புத்தகம்.இந்தப் புத்தகத்தினைப் பற்றி யாருடனாவது பேசினாலும் அவர்கள் சொல்லும் முதல் கதை "யானை டாக்டர்" தான்.இணையத்திலும் கிடைக்கிறது.ஆங்கிலத்திலும் மொழிப்பெயர்க்கப்பட்டிருக்கிறது.வைத்தியநாதன் கிருஷ்ணமூர்த்தி என்பவரின் பற்றின கதை தான் . மிக முக்கியமான கதையிது.யானைகளுக்காக , அதன் உரிமைக்காக , அதற்கு நடக்கும் அநீதிகளை எதிர்த்து போராடி , தன்னால் முடிந்த உரிமைகளை அதற்கு கிடைக்கச்செய்த ஒருவரின் கதை.யானைகளுக்கு புத்துணர்ச்சி முகாம் நடக்கச் செய்தது இவரது உழைப்பு தான்.இன்னொறு கதையில் உலக பாஸ்போர்ட் என அமைப்பும் அதிலிருந்த ஒரு வெளிநாட்டவர் இந்தியாவிலே இருக்கிறார்.அமெரிக்காவில் எல்லாமே ரகசியமாய் உலவு பார்க்கப்படுகிறது , இந்தியாவில் தான் உண்மையான சுதந்திரத்தை உணர்கிறேன் என்று வரும்.இந்த வரிகள் சற்றே யோசிக்க வைக்கிறது , தற்பொழுது நம்ம ஊரில் இந்த வரிகள் ஒற்றுவருமென தோன்றவில்லை.காலம் நம்மை எவ்வாறு மாற்றிகிறது என்றே தோன்றுகிறது.வாசித்த சில மாதங்கள் ஆகிவிட்டன , இன்னும் இந்தப் புத்தகத்தின் நிறைய கதைகள் நினைவில் இருக்கிறது.

கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகம் என பட்டியல் ஒன்றை தயாரித்தால் , இந்தப் புத்தகத்தை சேர்த்துக்கொள்ளுங்கள்.


37.கனவுத் தொழிற்சாலை - சுஜாதா


சினிமா உலகத்தினைப் பற்றின நாவல்.ஒரு சினிமா நாயகன்-சினிமா நாயகி.அவர்களின் காதல் , திருமணம் .நாயகனின் காதல் அதலால் ஏற்படும் மனக்கசப்பு என நாம் தமிழ் சினிமாவில் பார்த்த கதை தான்.காலம் கடந்து நான் படிப்பதால் அனைத்தும் ஏற்கனவே திரைப்படங்களில் பார்த்தவையாகவே இருந்தது.ஆனால் சுஜாதாவின் வரிகள் பக்கங்களை பறக்கச் செய்கிறது.நாவலில் எந்த பக்கமும் சலிப்பில்லாமல் செல்கிறது.சினிமா உலகின் பற்றின படைப்பு என வரும்போது அசோகமித்ரனின் கரைந்த நிழல்கள் என்ற நூலும் , இந்த நூலும் இலக்கிய உலகில் சொல்லபடுவது.ஆனால் என்னைப் பொறுத்தவரை இந்த நூல் சினிமா உலகில் நாயனாகவும் , நாயகியாகவும் கொடிக்கட்டி பறக்கும் நபர்களைப் பற்றி மட்டுமே அதிகம் பேசுகிறது.அவர்களுக்குள் நடக்கும் மனப் போராட்டங்களையும்,வெற்றியையும், தோல்வியையும் பற்றி பேசுகிறது.ஒரு கிளைக் கதையாகத் தான் துனை நடிகை ஒருவர் வருகிறார்.அத்தோடு சினிமாவை உண்மையாக நேசிக்கும் ஒருவரும் வருகிறார்.இன்னும் நிறைய சினிமாவைப் பற்றி பேசியிருக்கலாமோ என்று தான் தோனியது.


39.சுமித்ரா - கல்பட்டா நாராயணன் [தமிழில் : கே.வி.ஷைலஜா]


முகப்புத்தகத்தைப் பற்றி எவ்வளவு வசைப்பாடினாலும் , அவ்வப்போது சில அரிய நூல்களை இதுத்தான் எனக்கு அறிமுகப்படுத்துகிறது .அப்படி எனக்கும் அறிமுகமான நூல் தான் இந்த சுமித்ரா(மலையாள மொழிப்பெயர்ப்பு). இறப்பு என்பது ஒரு முடிவு என்பதாலோ என்னவோ 2004ல் நான் வாசடித்த கடைசி நாவலாக இது இருந்திருக்கிறது.ஏனென்றால் இந்த நாவல் ஒரு இறப்பை தான் கதைக் களமாக வைத்திருக்கிறது.சுமித்ராவின் இறப்புத் தான் இந்த நாவல்.இறந்ததும் அவளை இறுதியாக காண வந்தவர்களின் மன ஓட்டத்தைத் தான் சொல்கிறது.அவளது கணவன்,மகள்,அவளிடம் நகை கொடுத்த வைத்தவள்,பாத்திரம் விற்கும் வியாபாரி,மகளின் தோழி,கல்லூரி தோழி,பக்கத்து வீட்டு பையன் என ஒவ்வொருவரின் மனதில் ஓடும் காட்சிகளின் தொகுப்பே இந்த நாவல்.அவள் இறந்ததை ஒவ்வொருவரையின் மன ஓட்டத்தில் மீண்டும் நாம் நினைவுப்படுத்திக் கொள்ள முடியும்.இறந்த வீடு எப்போதும் எவ்வளவு சத்தமாக இருந்தாலும் இறந்தவரின் கட்டுப் போட்ட முகத்தையோ,அந்த கால் கட்டை விரலையோ,சலனமில்லாத கைகலையோ பார்க்கும் போது மனம் அவரது நினைவலைகளை எல்லையற்று கடல் போல உருவாக்கிக் கொண்டேயிருக்கிறது.இறந்தவரோடு பேசிய வார்த்தைகள் நினைவில் ஆழத்தில் இருந்தாலும் எப்படியோ உயிர் பெற்று அந்த ஒரு நிமிடத்தில் அவரோடான உறவை மீட்டெடுத்து விடுகிறது.இந்த நாவலிலும் அப்படித்தான் ஒவ்வொருவரும் சுமித்ராவை நினைவுகளில் மீட்டெடுத்துக் கொண்டேயிருக்கிறார்கள்.அவரோடு நட்புடனோ அல்லது பகையுடனோ.வாசிக்கும் போது நினைவில் நான் சந்தித்த மரணங்கள் வந்துக் கொண்டேயிருக்கிறது.வாசித்து முடித்ததும் மரணத்தை , ஒரு இழப்பை இப்படி உருவகப் படுத்த இலக்கியத்தால் மட்டுமே முடியுமென தோன்றுகிறது.

இன்னும் சில புத்தகங்கள் இருக்கின்றன,ஆனால் அவை அனைத்தும் நினைவில் இல்லை.அந்தப் புத்தகங்களுக்கு அருகிலும் நான் தற்பொழுதில்லை.ஆதலால் 2014 நான் வாசித்த நூலின் பற்றின பகிர்வுகளை இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.


மற்றப் பதிவுகள்






Sunday, January 11, 2015

2014 - வாசிப்பு - தமிழ்மகன்

31.வெட்டுப்புலி 


தமிழ்மகன் எழுத்தில் நான் வாசித்த முதல் புத்தகம்.வெட்டுப்புலி தீப்பெட்டியை சிலர் பாத்திருக்கலாம் , அந்த தீப்பெட்டியின் மீது ஒட்டிருக்கும் படத்தினை பற்றின தேடலில் தான் இந்த நாவல் துவங்குகிறது.அந்தப் பரம்பரையில் வந்தவன் தான் இதை தேடுகிறான்.அவனது தேடல் வழியே இரண்டு தலைமுறைகளை சொல்கிறார்.சென்னை - செங்கல்பட்டு என கதை காலத்தால் ஏற்பட்ட இந்த நகரங்களின் மாற்றங்களை சொல்கிறது.அரசியல் மற்றும் சினிமாவின் வளர்ச்சியையும் சத்தமில்லாமல் சொல்கிறது.ஆரம்பத்தில் கதையில் ஏகப்பட்ட‌ கதாப்பாத்திரங்கள் நம்மை குழப்பினாலும் , போக போக நாவலுடன் பயணிக்க முடிகிறது.முக்கியமாக எனக்கு தாக்கத்தை ஏற்படுத்தியது பெரியார் பற்றின நிகழ்வுகள்.பெரியார் பின்பற்றியவரின் வாழ்வை சொல்வதன் மூலம் பெரியாரை பற்றி சொல்வது தான் ரசிக்க வைத்தது.பெரியார் வாழ்வினை தெரிந்துக்கொள்ளும் ஆசை வந்திருக்கிறது.வாசிப்பவர்களுக்கு கண்டிப்பாக தங்களது வாழ்வில் சந்தித்த தி.க நபர் வந்துச் செல்வார்.நமது கலாச்சாரத்தில் சாமியில்லை என சாதரணமாக சொல்ல முடியாது.அவர்கள் சந்திக்கும் இக்கட்டாண சூழ்நிலைகளை அழகாக சொல்கிறார்.குறிப்பாக துனைவியுடன் ஏற்படும் மனக்கசப்புகளை.

அதெயெல்லாம் வாசிக்கும் போது எனது தாத்தா தான் ஞாபத்தில்  வந்தார்.அவரும் திக தான்.சாமி கும்பிடுவதை வீட்டில் முற்றிலும் தடை செய்திருந்தார்.திருட்டுத்தனமாகத் தான் பாட்டி சாமி கும்பிடுவார்.அவர் கண்ணில் பட்டுவிட்டாள் அனைத்தும் வீட்டை விட்டு பறக்குமாம்.ஆனால் நாங்கள் இருந்தப் போதெல்லாம் கொஞ்சம் சாமி கும்பிடுவதை அனுமதித்துவிட்டார்.சாமி கும்பிடுவதை அவரால் ஏற்றுக்கொள்ளவே முடியாது , ஆனால் பாட்டியால் சாமி கும்பிடாமல் இருக்க முடியாது.வாசிக்கும் போதெல்லாம் இதே நினைவு தான்.என்னடா ஒரே தாத்தா புராணம் பாடுகிறான் என நினைக்க வேண்டாம்,நீங்களும் வாசித்துப் பாருங்கள் நீங்கள் எனைப் போல் இதேப் போன்று ஒரு புராணத்தை கண்டிப்பாக பாடுவீர்கள்.

இதை தவிற நான் ரசித்த ஒன்று , நாவலில் போகிற போக்கில் இரண்டு காட்சிகள் வரும்...சிறு வயதில் நான் அடிக்கடி கண்ட காட்சிகள் அது..கடைசி 10 வருடங்களில் அந்த காட்சிகளை நான் கவனத்ததில்லை...
1. தோடு , மூக்குத்திக்கு பதிலாக சிலர் ஈர் குச்சி குத்தியிருப்பார்கள்.சிறு வயதில் இந்த காட்சியை நான் அடிக்கடி பாத்திருக்கிறேன்...
2.கூரை வழியாக வெயில் தரையில் வட்டம் வட்டமாக விழும் காட்சி...
இது ஒன்றும் அவ்வளவு பெரிய விஷயம் இல்லை என்ற போதும் , வாசித்ததும் அந்தக் காட்சிகள் மனதிற்குள் வந்து வந்து போனது...


32.ஆண்பால் பெண்பால் 


ஒரு வாசகனுக்கு புத்தகத்தின் முன்னுரை எந்த அளவிற்கு முக்கியமானது என்று எழுதுபவர்கள் யோசிப்பதுண்டா ?.முன்னுரையில் இலக்கணம் எனக்கு தெரியாது ஆனால் வாசகனாக நான் முன்னுரையில் எதிர்ப்பார்ப்பது புத்தகத்தின் பற்றின மெல்லிய அறிமுகத்தை மட்டும் தான்.ஆனால் அப்படிப்பட்ட முன்னுரை அரிதாகத்தான் வருகிறது.ஆசிரியரைப் பற்றியும் அந்தப் புத்தகத்தினைப் பற்றியும் ”மானே தேனே பொன்மானே” என நிரப்பியதாகத் தான் தோன்றுகிறது.
வாசிப்புப் பழக்கம் ஆரம்பமான நாட்களில் எனக்கு வெறும் முன்னுரை மூலம் அறிமுகமான புத்தகம் தான் எஸ்.ரா வின் துணையெழுத்து.அந்த முன்னுரை எனக்கு ஞாபகமில்லை ஆனால் அந்த முன்னுரை தான் என்னை அந்தப் புத்தகத்தை வாங்க வைத்தது என சொல்லலாம்.எனக்கு மிகப்பிடித்த புத்தகப் பட்டியலில் ஒரு முக்கியமான இடம் இந்தப் புத்தகத்திற்கு உண்டு.ஆனால் , அதன் பிறகு எந்த முன்னுரையும் என்னை ஈர்க்கவேயில்லை.
சில முன்னுரைகள் கதையின் முக்கியமான திருப்பங்களை போட்டு உடைத்துவிடுகின்றன.சில முன்னுரைகள் கதாப்பாத்திரங்களை விளாவாரியாக வர்ணிக்கின்றன.சில,படைப்பாளியை பாராட்டுவதிலே முடிந்துவிடுகிறது.கதையின் தளத்தையோ,கதையின் காலத்தை பற்றியோ,கதைக்குள் நுழைவதற்கு முன் கிடைக்க வேண்டிய அறிமுகத்தையோ அவை தருவதேயில்லை.முன்னுரைகளை பாதி நேரம் தவிர்க்கவே நேரிடுகிறது.
பா.சிங்காரத்தின் “புயலிலே ஒரு தோணி” என்ற புத்தகம்.அதன் முன்னுரை பக்கங்கள் பல செல்லும்.அந்த நாவலை படிப்பதற்கு நிறைய அறிமுகங்கள் தேவை.கூகுள் செய்தே அந்த நாவலைப் படித்தேன்.வாசிக்கும் பொழுது அந்தக் காலகட்டத்தின் தலைவர்கள்,கதை நடக்கும் நாட்டின் வரைப்படம் என அறிமுகங்கள் பல தேவைப்படும்.இந்தத் தகவல்களைப் பற்றி துளியும் பேசவில்லை அந்த முன்னுரை.உண்மையில் அந்த முன்னுரை எனக்கு சலிப்பையே ஏற்படுத்தியது.
முன்னுரையைப் பற்றின அபிப்பிராயமே எனக்கு மாறிவிட்டது.அது எழுத்தாளரை பாராட்டுவதற்காக பயன்படுத்தப்படும் இடமாகவே எனக்கு தோன்றியது.வாசகனாகிய எனக்கும் அதற்கும் எந்த உறவும் இருப்பதாகவே தோன்றவில்லை.முன்னுரை எழுதுபவரும் எழுத்தாளரும் பேசிக்கொள்ளும் இடமாகவே தோன்றியது.அப்படியிருந்த என் மன்நிலையை ஒரு முன்னுரை மிகவும் ஈர்த்துவிட்டது.படித்த முதல் சில வரிகளிலே வாசகனுக்காக எழுதியது என தோன்றியது.நான் அடுத்து படிக்க வேண்டிய புத்தகம் இதுவென மாற்றியது.தமிழ்மகனின் ஆண்பால் பெண்பால் நாவலின் முன்னுரை தான் அது.அந்த முன்னுரையை எழுதியது தமிழ்மகன் தான்.வாசகனை தன் வசம் இழுப்பதற்காகவே எழுதப்பட்டதாக அது அமைந்திருந்தது.கதையின் தளத்தையும் , கதாப்பாத்திரங்களையும், கதையின் சிக்கலையும் எந்தவித திருப்பங்களையும் உடைக்காமல் அறிமுகம் செய்கிறார்.கதையின் காலக்கட்டத்தையும் , கதைக்கு சம்மந்தமான சரித்திர தகவலையும் அறிமுகம் செய்து வாசகனை கைப்பிடித்து கதையின் வாசலிற்கு கொண்டு சேர்க்கிறார்.எனக்கு பிடித்த முன்னுரைகளில் கண்டிப்பாக இந்த முன்னுரை இடம்பெறும்.

Men are from Mars , Women are from venus என்று ஒரு புத்தகம் இருக்கிறது . திருமணம் நிச்சயம் ஆனதும் நண்பர் ஒருவர் பரிசாக தந்தது.என் மனைவியை புரிந்துக்கொள்வதற்காக,ஆனால் உண்மையில் எனக்கு அந்தப் புத்தகம் செம மொக்கையாக இருந்தது.இதை செய் அதை செய் என பெரும் அபத்தமாக தோன்றியது.தமிழ் மகனின் ஆண்பால் பெண்பால் புத்த‌கமும் இதே களத்தில் தான் பயணிக்கிறது ஆனால் மிகவும் சுவாரஸ்யமாக செல்கிறது.ஆனால் பிரிந்திருப்பவர்களின் கதை என்பதால் இதை திருமணம் நிச்சயமானவர்களுக்கு தர முடியாது என நினைக்கிறேன் , ஆதலால் அவர்களுக்கு அதே ஆங்கில புத்தகம் தான்.அவர்களை காப்பாற்ற யாராலும் முடியாதுப் போல.விவாகரத்து ஆன அவர்கள் தங்களது பிரிவை அவரஅவர் பார்வையில் பதிவது தான் இந்தக் கதை.அவர்களது கதையில் மிகவும் முக்கியமான ஒரு கதாப்பாத்திரம் எம்.ஜி.ஆர் . எப்படியென படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.சில இடங்களை வாசிக்கும் போது நமது ஈகோ எதிரே காட்சியாகும்.ஆசிரியரின் வெற்றி இதுவேயென நான் சொல்வேன்.முடிவை முன்னதாய் சொல்லிவிட்டு துவங்கினாலும் ஒரு சந்தோஷமான முடிவை எதிர்ப்பார்த்தே கடைசிப் பக்கத்தை புரட்டினேன்.ஆனால் ஆசிரியர் ஏமாற்றிவிட்டார்.



மற்றப் பதிவுகள்








Thursday, January 8, 2015

2014 - வாசிப்பு - இன்னும் சில‌

26.தாகூர் சிறுகதைகள் 


தாகூர் சிறுகதைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில சிறுகதைகளின் தொகுப்பு.இவரது கதைகளில் ஒரு கதாப்பாத்திரம் அதிகமாக வருகிறது.அது அவரது ஊரிலுள்ள நதி தான்.அந்த நதியின் போக்குவரத்துக்கள்.மெத்ராஸ் பட்டிணம் படத்தில் பார்த்ததுப் போல நதியினை மக்கள் தங்களது போக்குவரத்திற்கு உபயோகப்படுத்திருப்பதை நிகழ்வுகளாக அவர் சொல்லும் போது அதன் பிரமாண்டத்தை உணர முடிகிறது.அவருக்கும் அந்த நதியின் பாதிப்பு அதிகமாக இருந்திருக்கும் போல அதான் அவரது எல்லாக்கதைகளிலும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நதியினை குறித்து பேசுகிறார்.ஒரு கதையில் ஆத்தோரத்திலுள்ள ஒரு பெரிய கல் அதான் ஒரு கதையை சொல்கிறது , அதுவும் ஒரு விதவையின் கதையை.ஒரு பெண்ணின் வாழ்வை , நதியோடு அவளது சீண்டலை , அவளது துடிப்பை , அவளது ஆராவாரத்தை , இத்தனையுமின்றி நீண்ட பிரிவிற்கு பின் வாழ்வின் சோகத்தையும் தனிமையையும் மட்டும் சுமந்து அவள் வருகிறாள் , அந்தக் கல் அவளை மீண்டும் சந்தித்த சந்தோஷத்திலிருக்கு அவள் தனது வாழ்வின் முடிவை தேடிக்கொள்வாள் என முடிகிறது.கதையை யாரோ சொல்வதுப் போலவே இருக்கும் முடிவில் தான் அது அந்தக் கல் என்பதே தெரியும்.நான் மிகவும் ரசித்த சிறுகதை.

தாகூரின் படைப்புலகத்திற்கு ஒரு அறிமுகம் கிடைத்ததாக இருந்தது


27.லிண்ஷேலோகன் w/oமாரியப்பன் - வா.மணிகன்டன்


சிறு சிறு கதைகளாக 25 கதைகள் , ஒவ்வொரு கதைகளும் 2-3 பக்கங்களே.”வாமா மின்னல்..” என்பதை மனதில் வைத்துத் தான் மின்னல் கதைகள் என்று sub-title வைத்தாரோ என்னவோ..? கதை துவங்குவதும் , நம்மைக் கடந்து செல்வதும், முடிவதும் மின்னல் போல இருக்கிறது.இந்த மின்னல் கதைகள் வாசிப்புப் பழக்கம் இல்லாதவர்களுக்கும் படிக்க ஏதுவாக இருக்கும்.அப்போ வாசிப்புப் பழக்கம் இருக்கிறவர்களுக்கு எப்படி இருக்கும்னு நீங்க கேட்கிறது என் காதில் விழாமலில்லை…

சிறுகதைகள் வாசிக்கும் போது ,அந்தக் கதாப்பாத்திரங்கள் நம்முடன் பயணிப்பது போன்ற அனுபவம் இதில் சற்று குறைவாக எனக்குத் தோன்றியது.எனது பள்ளி,கல்லூரி நினைவுகளை தூண்டியபோதும் அத்துடன் பயணம் செய்யப் போதுமான இடம் இல்லாது போலத் தோன்றியது.

படித்து முடித்த இரு தினங்கள் ஆகிறது ,தற்பொழுது நினைவில் இருக்கும் கதைகள் என்று சொல்வதை விட மனதைத் தொட்ட சில கதைகள் என்று சொன்னால் அவை சரோஜா,துலுக்கன்,நீதானே என் பொன் வசந்தம், லிண்ஷேலோகன் w/o மாரியப்பன்,காமத் துளி (இன்னும் இருக்கு..எனக்கு பிடித்த முதல் 5 மட்டும் இவை) போன்ற கதைகள்.என்னிடம் பெஸ்ட் ஆஃப் மின்னல் கதையைத் தேர்வு செய்யச் சொன்னால்,நான் தேர்வு செய்வது ”சில்க் ஸ்மிதா” கதையாகத் தான் இருக்கும்.

2-3 கதைகள் சுவாரஸ்யமாக எனக்குத் தோன்றவில்லை.குறிப்பாக என்கவுண்டர் கதை.லூஸ் பால்ல ஏன் மனுஷன் 6 அடிக்காம விட்டாருன்னு தோனிச்சு.ஆனால் அதிகப்பட்சக் கதைகள் பட்டயைக் கிளப்பியது.அதுவும் கடைசிப் பத்துக் கதைகளில் எழுத்தின் முதிர்ச்சியை உணர முடிந்தது.


28.சொல்லவே முடியாத கதைகளின் கதை - ஆதவன் தீட்சண்யா


புரட்சிக்கரமான கதைகள் என்று சொல்லலாம் , கொஞ்சம் பகடியும் சேர்த்து.ஏரியும் பனிகாடு நாவலை ஒரு சிறுகதையாக சொன்னால் எப்படி இருக்கும் அதன் வலியை சிறுகதையில் கொண்டு வர முடியுமா..?முடியும் என்று சொல்கிறார் முதல் கதையில்.சாக்கடை சுத்தம் செய்யும் தொழிலுக்கு நாட்டின் அதிகப்பட்சம் சம்பளம் ஒரு நாட்டில் கொடுத்தால் அந்த நாட்டின் நிலைமை என்னவாகும் , ஒரு சின்ன கற்பனை தான்..அந்த கதையின் பகடி சற்று சுள்ளென்று இருக்கும்.அதேப்போல் கைபேசியை வைத்து ஒரு கதை அதிலும் பகடி ரசிப்பதாகவும் கொஞ்சம் உண்மையை சொல்லி நடு மண்டையில் கொட்டியதாகவும் இருக்கும்.அந்தப் புத்தகத்தின் கடைசி கதை - ரஞ்சித் என்ற கதாப்பாத்திரம் , வேறு யாருமில்லை பகத் சிங் தான்.நான் மிகவும் ரசித்த கதை.பகத் சிங் எழுதிய 4 புத்தகம் நமக்கு கிடைக்காமலே அழிந்து விட்டதாம்.அதை வைத்து ஒரு புனைவு.அந்த புத்தகம் கிடைப்பதுப் போல.படித்த முடித்ததும் அப்பாடா அந்தப் புக் கிடைத்தது , என்ன புக் என்று இணையத்தில் தேடியப்போது தான் அது புனைவு என்பதை தெரிந்துக் கொண்டேன்.ஒரு மிகப்பெரிய பொக்கிசியத்தை இழந்த வருத்தம் இன்னும் கொல்கிறது.அந்தக் கதையிக் ஏகப்பட்ட தகவல்கள் பகத் சிங் பற்றி,அவர் பேசிய வார்த்தைகளின் குறிப்புகளுடன் கதை செல்லும்.பகத் சிங் பற்றி தேடலுக்கு ஒரு தூண்டுதலாக இந்த கதை இருந்தது.இந்தக் கதை இணையத்திலும் கிடைக்கிறது.


29.யேசு கதைகள் - பால் சக்காரியா - தமிழில் - ஜெயஸ்ரீ



செம புத்தகம் , யேசுவை மையமாக வைத்து எழுதிய புத்தகம்.சில பல எதிர்ப்புகளை சந்தித்த புத்தகம்.நண்பர் இந்தப் புத்தகத்தைப் பற்றி சொல்லும் போதெல்லாம் எனக்கு ஆன்மீக சம்மந்தமாக புத்தகங்கள் மீது நாட்டமில்லை என சொல்ல நினைத்தேன்.ஆனால் இந்த கதையின் களங்கள் வேறு என்பதை அவர் மீண்டும் மீண்டும் என்னிடம் சொல்லும் போது புரிந்துக் கொண்டேன்.இது யேசு வின் புகழ் பாடும் புத்தகம் அல்ல . அதை விட முக்கியமான ஒரு விஷயத்தை இந்தப் புத்தகம் விவாதிக்கிறது .யேசு ஒரு சாதாரண மனிதனாகவும் வாழ்ந்து இறந்திருக்கலாம் , காலம் தனது தேவைகளுக்காக அவரை கடவுளாக மாற்றியிருக்கலாம் என்ற விவாதம் தான் அது.யேசு முதன் முதலாக கண்ணாடியை பார்த்து சவரம் செய்வதாக ஒரு கதை , மிகவும் ரசித்து படித்த கதை.அதைப் போல் ஒரு யேசுவின் சிலை (பொம்மை) ஒரு விறகு கடையில் கிடைக்கிறது,அதை யாரும் மதிக்கவில்லை என்றே சொல்லலாம்.அதற்கு முக்கியமாக ஒரு காரணத்தை கதையில் சொல்கிறார்,அதில் யேசு சிரிப்பதாக இருக்கிறது அதான் அந்த சிலையை யாரும் கண்டுக்கொள்ளவேயில்லை இங்கு அனைவருக்கும் யேசுவின் பாவப்பட்ட முகம் தான் தேவை என்று வருகிறது.சற்று யோசிக்க வேண்டிய விஷயம் தான் .இந்தப் புத்தகத்தின் பற்றிய ஒரு அறிமுகம் தி.ஹிந்துவில் வ‌ந்திருக்கிறது.வாசித்துப் பாருங்கள்


30.கோபல்ல கிராமம் - கி.ரா




ரொம்ப நாளாக எனது அலமாரியில் உறங்கிக் கொண்டிருந்த புத்தகம் தான் கோபல்ல கிராமம்.நீண்ட முன்னுரை படித்தலிருந்து , இந்தப் புத்தகத்தை படிக்க தொடர்ந்து நேரம் கிடைத்தால் தான் முடியும் என்ற‌ பிம்பம் மனதில் உருவாகியிருந்தது . அப்படியொரு நேரம் கிடைக்குமென , "உனக்கு அடுத்த முறை நல்ல சம்பள உயர்வு வாங்கித் தரேன்" என மேனஜரின் சொல்லை நம்பி அடுத்த முறைக்காக காத்திருக்கும் ஐ.டி இளைஞன் போல நானும் காத்திருந்தேன்.அந்த நல்லவிதமான அடுத்த முறை வரவேயில்லை.பொறுத்தது போதுமென சென்ற வாரம் கையில் இந்தப் புத்தகத்தை எடுத்துவிட்டேன்.ஏகப்பட்ட கதாப்பாத்திரங்களின் அறிமுகங்கள் ,ஆரம்பத்தில் சற்று தடுமாற வைத்தது.முதல் சில பக்கங்களில் ஏகப்பட்ட தெரியாத வார்த்தைகள் வேறு.சரி இதுவும் கடந்து போகுமென பட்டியலை மட்டும் குறித்துவைத்துவிட்டு தொடர்ந்த வாசிப்பு போகப்போக ரெக்கை கட்டிப் பறந்தது.கதாப்பத்திரங்களின் பிம்பங்களோடு கிராமத்தை கண்டிப்பாக நம் கண்முன்னை வார்த்தைகளின் வழியாக வரைந்து விடுகிறார் கி.ரா.நாம் அறியாமல் புன்னைகை சிந்தும் இடமும் உண்டு கண்களை கசங்க வைக்கும் இடமும் உண்டு.கதையினை பற்றி சொல்லாமல் இந்நாவலை மேலும் விவரிப்பது சிரமம் என்பதால் எனக்குப் பிடித்த சில வரிகளையும் , வார்த்தைகளையும்  இங்கே பகிர்கிறேன்.....

//
அவர்கள் சூரியோதத்தைப் பார்த்ததும் அப்படியே நின்று விட்டார்கள்!இந்தச் சூரியோதயம் ஒன்றை எத்தனை தரம் பார்த்தாலும் சலிப்பதில்லை,அது ஒருநித்தப்புதுமை,அன்றலர்ந்த மலர்போல.இந்த கண் கூசாத சூரியனை,பூப்படையாத மங்கையைப் பார்ப்பது போல கூசாமல் பார்க்கலாம்.!
//

//
கோபல்ல கிராம‌மும் சுற்றுப்புறமும் கும்பினியின் ஆட்சிக்குக் கீழே வந்து பல வருஷங்கள் ஆகியும் எந்தவித மாறுதலும் உண்டாகிவிடவில்லை.மாறுதல் என்று ஒன்றைச் சொன்னால்வேண்டுமானால் அப்போது ஆகாயத்தில் தோன்றிய வால் நட்சத்டதிரத்தை வேண்டுமானல் சொல்லலாம்.
//

ருசிக்கல் - சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு உப்பு என்று சொல்ல கூடாதாம்.

அத்தாளம் -  dinner desserts

அரவ தேசம் - தமிழ்நாடு

ஏணி நாற்காலி - படிவைச்ச ஸ்டூல் [நீளமுள்ள‌ கூந்தலை உணர்த்திக்கொள்ள உதவும்]

நல்ல நாவல்.வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக படிக்கவும்.



மற்றப் பதிவுகள்



Tuesday, January 6, 2015

2014 வாசிப்பு - வலிகள்

ஒருவரது வலியை மற்றொருவருக்கும் உணரச்செய்வதில் இலக்கியத்திற்கு ஒரு முக்கிய பங்குண்டு..அப்படி 2014 ல் நான் வாசித்ததில் வலிகளை பேசிய படைப்புகளைப் பற்றி, 


22.எரியும் பனிக்காடு - பி.எச் டேனியம் [தமிழில் - இரா-முருகவேள்]


Red Label என்ற ஆங்கில நாவலின் மொழியாக்கம் தான் இந்த நாவல் ,  மிக முக்கியமான புத்தக‌ம் . நாம் அன்றாடம் அருந்தும் தேநீரின் கதை இது.பாலாவின் பரதேசி படம் இந்த நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்டது தான்.நான் படம் பார்க்கவில்லை , ஆனால் ஒரு பாட்டு பாத்தேன்.என்னால் அந்த பாட்டை நாவலின் எந்த இடத்திலும் வைத்து பார்க்க முடியவில்லை. 12  years a Slave  என்று ஒரு ஆங்கில திரைப்படம் .செம படம்.அந்த படத்தின் ஒவ்வொரு காட்சியிலையும் இந்த நாவலைப் பார்க்க முடிந்தது .டீ எஸ்டேட்டில் எப்படி வேலைக்கு ஆட்களை பிடித்து வருகின்றனர் என்பதில் துவங்குகிறது நாவல்.கங்கானி என்று சொல்லப்படுபவர்கள் தான் இந்த வேலையை செய்கின்றனர்.இந்த கங்கானிகள் கதாப்பாத்திரங்களை எந்த துறையிலும் பொருத்திப்பார்க்க முடியும்.நாயகனும் நாயகியும் இதுப் போன்ற ஒரு கங்கானியை நம்பி தங்கள் இடத்தினை விட்டு புறப்படுகின்றனர்.பஞ்சமும் , வேறு வேலைவாய்ப்பின்மையும் அவர்களை இந்த முடிவை எடுக்கச் செய்கிறது.எப்படியும் சம்பாதித்து விரைவில் கை நிறைய பணத்துடன் ஊருக்கு திரும்பிடலாம் என்ற நம்பிக்கையா போனவர்களுக்கு அங்கு சென்ற பின்பு தான் உண்மை நிலவரம் மெல்ல மெல்ல புரிகிறது.நாம் அருந்தும் தேனீர் பின்னாடி இப்படி ஒரு கதையிருக்கும் என சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. இதுப் போன்ற உடல் ரீதியான,பண ரீதியான துயரங்கள் இல்லாவிட்டாலும் நான் ஐ.டி துறையில் இருப்பதாலோ என்னவோ இந்தத் துறையினை நாவலின் ஒவ்வொரு வலி மிகுந்த இடத்திலும் பொருத்திப்பார்க்க முடிந்தது.முக்கியமாக‌ நாவலில் ஒரு இடத்தில் பரித்த தேநீர் இலைகளை இடை போடும் காட்சி வரும் அது எனது துறையில் நடக்கும்  "performance appraisal" ஐ நினைவிற்கு கொண்டு வந்தது. எவ்வளவு தூரம் பிழிய முடியுமோ பிழிந்தெடுத்துவிட்டு , முடியாது என்ற கட்டம் வரும்போது திறமையற்றவர் என‌ சொல்லி வெளியில் அனுப்புவது ஐ.டி துறையில் அவ்வப்போது நடந்துக் கொண்டே இருக்கிறது.இந்த நிலை நாவல் படிக்கும் போது காட்சிகளாக மனதில் சுற்றிக் கொண்டேயிருந்தது.நாவல் வாசிக்கும் போது அந்த நிலப்பரப்பின் குளிரையும் அந்த மக்கள் மனதில் எரியும் நெருப்பையும் நன்கு உணரலாம்.


23.நிமித்தம் - எஸ்.ரா


ஒரு பயணத்தில் தனது 6ம் வகுப்பு நண்பனை காண்கிறார் , அவர் பேருந்து நிலையத்தில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்."என்னடா " என்று கேட்க , தனது காது கேளாத பிரச்சனைத் தான் இந்த நிலைக்கு காரணம் என சொல்கிறார்...காது கேளாமை இவ்வளவு தூரம் ஒருவரின் வாழ்வை மாற்ற முடியுமா..? இந்த கேள்விக்கான விடை தேடலே நிமித்தம் நாவலாக உருமாறியிருக்கிறது.தேவ்ராஜ் என்ற கதாப்பாத்திரம் மூலம் காது கேளாதவர்களின் வலியை உர‌க்க சொல்லியிருக்கிறார்.இதில் காது கேளாமைத் தவிர , தாமதமாக திருமணமாகும் ஒருவனின் வலியும் இருக்கிறது.குறைந்த வயதை நிர்ணயம் செய்தவர்கள் , அதிகப் பட்ச வயதை நிர்ணயம் செய்யாதது ஏன்..என்ற கேள்வி சமுதாயத்தில் ஒரு பெண்ணிற்கு திருமணம் ஆகாதப் போது அவளை பாவப்பட்ட ஜென்மம் என்றாவது நினைப்பார்கள் ஆனால் ஆணிற்கு அதுவும் இல்லை என்பதே நிதர்சனம்.காது கேளாத ஒருவனது வாழ்க்கை தான் இந்த நாவல்.அவனை இந்த சமூகம் எப்படியெல்லாம் பந்தாடுகிறது , அவனது வலியை நமது செவிக்கு எட்டவைத்திருக்கிறார் எஸ்.ரா.

எஸ்.ராவின் எழுத்துக்கள் எனக்கு எப்போதும் நண்பன் தோழ் மீது கைப்போட்டு பேசுவதுப் போலவே இருக்கிறது,அவரது எழுத்தின் எளிமை எனக்கு மிகவும் ஒத்துப்போகிறது என்றே சொல்லலாம்.

24.கள்ளம் - தஞ்சை பிரகாஷ்


தஞ்சாவூர்காரனாக இருந்தும் தஞ்சை பிரகாஷ் பற்றி இணையத்தில் படித்துத் தான் தெரிந்துக் கொண்டேன்.அவரது எழுத்துக்கள் அதிகம் அச்சில் இல்லையாம்,கள்ளம் நாவல் போன வருடம் மறுப்பதிப்பாக வந்தது.உடனே வாங்கிவிட்டேன்.தஞ்சை ஓவிய கலை தான் கதையின் மையம்.தஞ்சை ஓவியம் எப்படி உருவானது , அந்த சமூகம் பற்றின அறிமுகம் முன்னுரையிலே ஆசிரியர் தந்து விடுகிறார். நாவல் தஞ்சை அரண்மனையிலே துவங்குகிறது . நாயகன் தஞ்சை ஓவிய கலை பின்னனியில் வந்தவன் , ஆனால் அவனுக்கு எந்த வித புதுப்பிதலும் இல்லாமல் வெறும் tempalte ஆக ஓவியம் தயாரிப்பதில் நாட்டமில்லாமல் அதை எதிர்க்கிறான்.அதிலிருந்து அவனது பயணம் துவங்குகிறது.கதை அதிகமாக பூக்கார வீதியிலே நடக்கிறது.தஞ்சையின் முக்கியமான இடங்களில் ஒன்று.அங்குள்ள மக்களுடன் நாயகன் சேர்கிறான் , அவர்களின் துனைகொண்டே கலைக்கு புது உருவம் தருகிறான்.அதற்கு அவன் கையாளும் முறை ... அதை நாவல் படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.இதில் நாயகனின் ஒரே வலி , கலை தான் ... அவன் உயிரோட்டமில்லாமல் அப்படியே நகலாக உருவெடுப்பதை பார்க்கும் போதெல்லாம் தவிக்கிறான்.அவனது தவிப்பே இந்த நாவல்.கலையோடு உறவுகளையும் அதுகம் கையாண்டிருப்பார்.சில இடங்கள் சினிமா தனமாக தோன்றினாலும் வாசிக்கும் போது சுவாரஸ்யமாகவே இருந்தது.

25. மாதொருபாகன் - பெருமாள்முருகன்



பெருமாள் முருகன் எழுத்தில் நான் படிக்கும் முதல் நாவல்.பாதி வாசிப்பில் இருக்கும் போதே , நாவல் பற்றின பிரச்சனை செய்தி எட்டியது.அந்த விஷயத்தை முன்னுரையிலையே சொல்லிவிடுவார்.அதை மற்றும் படிச்சிட்டு பிரச்சனை செஞ்சாங்களான்னு தெரியல.இந்த நாவல் வேறு விஷயத்தை தான் பேசுகிறது.அது என்னான்னா குழந்தையில்லாமல் இருக்கும் ஒரு தம்பதியின் வலி தான்.அதில் இந்த பிரச்சனைக்குறிய விஷயம் ஒரு திருப்பமாக வரும்...

திருமணம் ஆனதும் "என்ன ஏதாச்சும் விஷேசம் உண்டா" என்ற கேள்வி இங்கு திருமணம் ஆன அனைவரும் எதிர்கொள்ளும் கேள்வி தான்.இதுப் போன்ற கேள்விகள் தான் நம் வாழ்க்கையை நடத்துகிறதோ என்ற சந்தேகம் கூட அடிக்கடி வருவதுண்டு.10 வது மார்க்,+2,எந்த காலேஜ்,campus,இன்னும் வேலை கிடைக்கலையா,அவன் அவ்வளவு சம்பளம் வாங்குறான்,வெளிநாடு,திருமணம்,முதல் குழந்தை,சொந்த வீடு,கார்,ஆண் வாரிசு..என கேள்விகள் வந்துக் கொண்டேயிருக்கிறதுஏதாச்சும் ஒரு கேள்விக்கு +ve ஆக பதில் சொன்னால் அடுத்த கேள்விக்கு தாவி விடுவார்கள்.ஆனால் -ve ஆக பதில் சொன்னால் அவ்வளவு தான்,அதே கேள்வியை திரும்ப திரும்ப கேட்டு வாழ்வை ரணமாக மாற்றுவதில் இந்த சமூகம் ஆர்வம் காட்டும் பாருங்க...அப்படி தான் இங்கு குழந்தை இல்லாத போதும் தங்களுக்குள் பிரச்சனை இல்லாததாக உணர்ந்த வந்த தம்பதியர் வாழ்வில் அன்றாடம் சந்திக்கும் ஏதோ ஒரு நிகழ்வில் அந்த வருத்தம் ஏற்பட்டுக் கொண்டேயிருந்தது.அதை ஏற்படுத்துவதே அந்த சமூகத்தின் முதல் கடமையாக இருந்தது.

இந்த நாவலில் வரும் கணவன் - மனைவிக்குள் இருக்கும் ஈடுபாடை,காதலை,காமத்தை அழகாக ரசிக்கலாம்.நாயகனின் அறிமுகமே ஒரு பூவரச மரத்தடியில் (அவனது மாமியார் வீட்டில்) அவனது சோம்பலான விழிப்புடன் துவங்குகிறது...நேரத்தை கடத்த முயன்று அவன் மெல்ல மெல்ல தனது நினைவுகளை ஓட்டுகிறான்.
குழந்தையில்லாத காரணத்தால் அவன் சந்தித்த அவமானம் மட்டுமே அவனது நினைவில் அதிகம் இருக்கிறது.குழந்தையின்மை - எவ்வளவு பெரிய பூதமாக தங்களுக்குள் இருப்பதையும் , தங்களது கூடல் கூட மகிழ்ச்சிக்கரமாக அமையாது பயத்துடன் இருப்பதை நினைத்து வாடுவதை என்னவென்று சொல்வது...

நாவல் சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தினுடையது , திருச்சங்கோட்டில் நடக்கிறது , அங்கிருக்கும் வழிபாட்டு முறைகளையும் , வேண்டுதலையும் சொல்லி நகர்கிறது.அங்கு நடக்கும் திருவிழா , அப்பொழுதைய நடப்பில் இருக்கும் சில முறைகளை இந்த கதைக்கு முக்கிய திருப்பமாக உபயோகித்திருக்கிறார்.வாசிக்கும் போது அது ஒரு ஆச்சரியம் தருவதாக இருந்ததைத் தவிர பெறும் கலாச்சார அவமானமாக தோன்றவில்லை எனக்கு.

நாவலின் அடுத்த இரண்டு பகுதிகள் வருகிறதான் (12 B style ல் என்று கேள்வி).....


மற்றப் பதிவுகள்