Showing posts with label பாரதி. Show all posts
Showing posts with label பாரதி. Show all posts

Monday, January 2, 2017

வாசிப்பு 2016 - பாரதியியல்

சீனி.விசுவ‌நாதன்,பாரதியியலில் மிக முக்கியமானவர்.பாரதி படைப்புகளை தேடித் தேடி சேர்த்தவர். தி ஹிந்துவில் வந்திருந்த இவரது பேட்டியை வாசித்ததிலிருந்து நேரில்  சந்திக்க வேண்டுமென்ற ஆர்வம் தொற்றிக் கொண்டது. சென்னைக்கு சென்றபொழுது வாய்ப்பும் அமைந்தது.

பாரதி படைப்புகளுக்காக அவர் தேடி அலைந்த கதைகளைக் கேட்க ஆசைப்பட்டேன் , ஆனால் அவரோ என்னைப் பற்றியும்  எனது வேலையைப் பற்றியும்,வாசிப்பதற்கான நேரம் ஒதுக்குவதைப் பற்றியும்  நிறைய கேட்டார்.  நாள் முழுதும் கணிணியில் அமர்வோர்களால் வாசிப்பது சிரமம் தான் என்றும் கவலை கொண்டார். தனது மனைவியின் இறப்பிற்கு பின்பு எழுதுவதுமில்லை வாசிப்பதுமில்லை என்றார். அதை கேட்கவே சங்கடமாக இருந்தது. பாரதியின் படைப்புகள் சார்ந்து இன்னும் நிறைய வெளிவர வேண்டியிருக்கிறது,போதுமான ஆட்கள் தான் இல்லை என்றார். யதுகிரி அம்மாள் மற்றும் பாரதிதாசனின் பார்வை பற்றியும்,வடமாநில தலைவர்கள் சென்னையில் நடத்திய உரைகள் சார்ந்தும் சில விஷயங்களைச் சொன்னார். நான் பாரதியியல் சார்ந்து வாசித்திருந்த ஆதவன் எழுதிய "புழுதியில் வீனை" மற்றும் ய.மணிகண்டனின் புத்தகங்கள் பற்றியும் பேசினேன். எங்களது இரண்டு மணி நேர உரையாடல் பாரதிக்கும் பெங்களூருக்கும் மாறி மாறி சென்று முடிவுற்றது.

நீண்ட நாட்களாகவே சீனி.விசுவநாதன் அவர்களின் காலவரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகளை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்றிருந்தேன்,இந்த சந்திப்பு மேலும் என் ஆர்வத்தை அதிகமாக்கியது. அடுத்த புத்தகக் கண்காட்சியில் புதிய பதிப்பாக அவை வெளியாகின்றன‌ என்று அவர் சொன்னதும் மனம் சிறகை விரித்துத் தயாரானது. ஆனால் 2016 புத்தக கண்காட்சியில் அதிர்ச்சி தரும் விலையுடன்  அவை வெளியாயின‌. 16 புத்தகங்கள் 10,000ரூ. அதுவும் மொத்தமாக 16 புத்தகங்களையும் வாங்க வேண்டுமாம்,நூலகத்திற்கான வெளியீடு என்றனர் பதிப்பகத்தினர். மலிவு விலை புத்தகமாகவோ அல்லது தனித்தனி புத்தகமாகவோ வெளியிட்டால்  கண்டிப்பாக சாமானியர்களும் வாங்குவார்கள் என்பது எனது எண்ணம்,பதிப்பகம் அதை சிந்திக்குமா என்று தெரியவில்லை. காலம் வரும் காத்திருப்போம் என்று மனதை ஆறுதல் படுத்திக்கொண்டேன்.

இதனிடையில் பாரதியியல் சார்ந்து வேறு சில புத்தகங்களும் கிடைத்தன‌ , அதன் சிறிய‌ அறிமுகம் ....

6.பாரதியின் இறுதிக் காலம் - ய.மணிகண்டன்


யானை மிதித்துதான் பாரதி இறந்தாரென சிறுவயதில் கேள்விப்பட்டிருக்கிறேன். பின்னர் யானையால் தாக்கப்பட்டு அவர் உடனே இறக்கவில்லை என்றும்,மூன்று மாதம் கழித்து உடல்நிலை சரியில்லாமல் தான் இறந்தார் என்றும் கேள்விப்பட்டேன். ஆனால் பாரதியின் இறுதி காலம் குறித்து ய.மணிகண்டன் இவ்வாறு கூறுகிறார்.

"இப்பொழுது கிடைத்துள்ள அரிய தரவுகளால் யானை தாக்கிய சம்பவத்திற்கும் இறப்பிற்கும் இடையில் குறிப்பிடத்தக்க கால இடைவெளி உள்ளமை தெளிவாகின்றது.இந்த இடைவெளி யானை தாக்கியமைக்கும் இறப்பிற்கும் நேரடியான தொடர்பில்லை என்பதை உறுதிசெய்கின்றது.இடைப்பட்ட காலத்தில் பாரதி வெளியூர் நிகழ்ச்சிகளில் பங்கேற்றத்தையும் எழுதிக் குவித்ததையும் வரலாறு காட்டுகின்றது.எனினும் யானையால் தாக்கப்பட்டமை பாரதியின் உடல்நலத்தை பலவீனமாக ஆக்கியிருக்கவேண்டும்"

.பாரதியின் இறுதி காலமென புதுவையை விட்டுக் கிளம்பியதிலிருந்து அவர் குறிப்பிடுகின்றார்.இந்தக் காலக்கட்டத்தில் பாரதியின் வாழ்வு எவ்வாறு அமைந்தது என்ற‌ ஆதாரங்களைத் தருகின்றார். அதில் முக்கியமாக கோயிலில் யானை தாக்கிய சம்பவத்தின் போது பாரதியுடன் நேரடியான தொடர்புடையவர்களான சகுந்தலா பாரதி மற்றும் ரா.கனகலிங்கம் எழுதிய‌ பதிவுகளையும் தருகிறார். இதில் யவருமே யானை தாக்குதலின் காலத்தினை பதியவேயில்லை. ஆனால் மிகமுக்கியமான ஒன்று என்னவென்றால் ,பாரதி இந்த நிகழ்வைக் கொண்டு ஒரு படைப்பைத் தந்திருக்கிறார். கதையின் நாயகன் யானையால் தாக்கப்பட்டு நண்பர்கள் துணைகொண்டு மீட்கப்படுகிறார். பார‌தியின் மனநிலையை இந்தக் கதையில் காணமுடிகிறது.

பாரதி தனது இறுதிக் காலத்திலும் வெவ்வேறு ஊர்களுக்குப் பயணிக்கிறார்,மக்களிடமிருந்து ஏகப்பட்ட வரவேற்பு கிடைக்கிறது.பாரதியின் மீது மக்களுக்கு பெரிய அபிமானம் இருந்ததையே இது காட்டுகிறது, ஆனால்  பாரதியின் இறப்பிற்கு மிகக் குறைவான நபர்களே வந்தனர் என நாம் கேள்விப்பட்டிருப்போம். உண்மையில் அதன் காரணம் என்ன என்பதை இந்தப் புத்தகம் பேசுகிறது. இந்தச் செய்திகளையெல்லாம் வாசிக்கும் போது , 100 வருடத்திற்கு முந்தைய வரலாற்றைக் கூட சரியாக பதியாத சமூகமாக நாம் இருந்திருக்கிறோம் என்று மனம் வருந்துகிறது.பாரதி என்றொறு ஆளுமையின் கதையை தேடித் தேடி வாசிக்க மனம் ஆவலுடன் காத்துக்கிடக்கிறது.

7.என் குருநாதர் பாரதியார் - ரா.கனகலிங்கம்

பாரதி வரலாற்றில் புரட்சிக்கரமான நிகழ்வுகளில் முக்கியமானது,வேறு சாதியிலுள்ள ஒருவருக்கு பூணூல்     அ ணிவித்த நிகழ்வு. அப்படி பாரதியால் பூணூல் அணிவிக்கப்பட்டவர் தான் கனகலிங்கம் அவர்கள். அவரது பார்வையில் பாரதி என்பது தான் இந்தப் புத்தகம். புகழ்ச்சி தான் பிரதானம் என்றாலும் வாசிக்க சுவாரஸ்யமான பல நிகழ்வுகள் இருக்கின்றன‌. பாரதியின் அறிமுகம் , பாரதியைச் சுற்றி இருக்கும் போலீஸ் கெடுபடிகள்,பூணூல் அணுவித்த நிகழ்வு,பாரதியின் நட்பு,பின்னர் வேலை நிமித்தமாக வெளியூருக்குச் சென்றதால் பாரதியின் தொடர்பில்லாமல் போவது,மீண்டும் சென்னையில் பாரதியை சந்திப்பது,யானை மிதித்த செய்தியை கேட்டு பதறியடித்து பாரதி இல்லத்திற்கு சென்று அவரை சந்திக்கும் தருணம் போன்ற பல அரிய தகவல்கள் நமக்குக் கிடைக்கின்றன‌. இதில் மிக முக்கியமான ஒன்று பாரதியின் உருவத்தோற்றம் பற்றிய அவரது பதிவுகள்.  பாரதியுடன் வாழ்ந்த மக்களின் பாரதி பற்றின படைப்புகள் எப்பொழுதும் அதீத ஈர்ப்பைத் தருகின்றன‌. அந்த வகையில் நான் மிகவும் ரசித்த புத்தகம் இது.

8.புழுதியில் வீணை - ஆதவன்  (தாகம் பதிப்பகம்)

 சிகாகோ நூலகத்தில் கிடைத்த புதையல் இது. பாரதியின் புதுவை வாழ்வு பற்றி ஆத‌வன் எழுதிய நாடகம்.  நாடகக் காட்சிகளின் நம்ப‌கத் தன்மைக்காக அவர் எழுதிய முன்னுரை நாடகத்தை விட சிறப்பாக அமைந்துள்ளது என்பது எனது எண்ணம். ராஜாஜிக்கும் வ.ராவிற்கும் பாரதியார் பற்றி நடக்கும் கருத்து மோதலில் துவங்குகிறது முன்னுரை. அரவிந்தரின் கருத்துக்கள் பற்றியும்,கடவுள் மீதான பாரதியின் பார்வைப் பற்றியும் பேசுகிறார். வாஞ்சிநாதனின் ஆஷ் கொலை பாரதி காலத்தில் நடந்தது,கொலைக்கு முன்பு வாஞ்சி புதுவையில் தான் சிலக் காலம் இருந்தார்,அங்கு தான் துப்பாக்கிப் பயிற்சியும் நடந்ததாகத் தெரிகிறது ,அப்பொழுது புதுவையில் வாழ்ந்த‌ பாரதிக்கு இதில் ஏதாவது தொடர்பு  இருந்திருக்குமா? பத்மநாபன்  அவர்கள் தனது படைப்புகளில் பார‌தியை அகிம்சாவாதி என்கிறார்,ரகுநாதனோ ஆஷ் கொலை திட்டத்தில் பாரதிக்கும் பங்கு இருந்திருக்க வேண்டுமென்கிறார். இந்த கருத்து வேற்றுமையை மையமாக எடுத்துக்கொண்டு ரகுநாதன் அவர்கள் சொல்லும் வாதங்களுக்கு பதில் தருவதாக அமைகிறது ஆதவனின் முன்னுரை. ஒரு கொலைக்கு பாரதி என்றும் ஆதரவாக இருந்திருக்க மாட்டார் என்பதை நிரூபிக்கும் முயற்சியே முன்னுரையின் பிரதான கருத்தாக இருக்கிறது. பாரதியின் காலத்தினை ஒட்டிய  பல படைப்புகளின் அறிமுகங்கள் இந்த முன்னுரையின் மூலம் நமக்குக் கிடைக்கின்றன‌. ஆதவனின் நாடகமும் அருமையாக இருக்கிறது. நான் முதலாவதாக வாசித்த நாடகம். வாசிக்கும் போதே காட்சிகள் கற்பனையில் ஓடுகிறது,இதுவரை இந்த நூலை யாராவது நாடகமாக எடுத்துள்ளனரா என்று தெரியவில்லை. நாடகமாக அரங்கேற்ற சிறந்த புத்தகம் இது,யாராவது முயற்சித்தால் நன்றாக இருக்கும்.

9.பாரதி : சில பார்வைகள் - ரகுநாதன்

இணையத்தில் கிடைக்கும் புத்தகம் இது. பாரதியின் பாடல்களை அலசி ஆராயும் கட்டுரைகளின் தொகுப்பு. அதில் எனக்கு மூன்று கட்டுரைகள் மிகவும் பிடித்தமானது. முதலாவதாக‌ பாரதியின் கருப்புத் தோட்டம் பாடல் ,அந்தப் பாடலில் ஏன் "ஓ" என்று வருகிறது என்ற கேள்வியுடன் கட்டுரை துவங்குகிறது , பிஜி தீவில் அடிமைகளாக கரும்பு தோட்டங்களில் தவித்து வாடும் இந்தியர்களை நினைத்து உறக்கமில்லாமல் பாரதி எழுதிய பாடல் தான் "கரும்பு தோட்டத்திலே" பாடல். அந்த மக்களின் தவிப்பின் பிரதலிப்பே "ஓ" எனும் எழுத்து.தீனபந்து என்ற ஆளுமையை எனக்கு அறிமுகம் செய்தது இந்தக் கட்டுரை தான்.

அதே போல் தாயின் மணிக்கொடி பாடலை வைத்து ஒரு ஆய்வுக் கட்டுரை.

ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் -அதன்
உச்சியின் மேல் வந்தே மாதர மென்றே
பாங்கி னேழுதித் திகழும் -செய்ய
பட்டொளி வீசிப் பறந்தது பாரிர்!

இந்திரன் வச்சிர மோர்பால்-அதில்
எங்கள் துருக்க ரிளம்பிறை யோர்பால் (தாயின்)
மந்திர நடுவுறத் தோன்றும் -அதன்
மாண்பை வகுத்திட வல்லவன் யானோ?

இதில் பிறையும் ,வந்தே மாதரம் என்ற எழுத்தும் கொடியில் இருக்கிறது என்கிறார் பாரதி,ஆனால் அப்படியொரு கொடியை நாம் பார்த்ததில்லையே என்பதில் துவங்குகிறது இந்தக் கட்டுரை. அப்பொழுது நமது கொடியில் வேறு சில வடிவங்கள் இருந்ததா,அவைகள் யாவை,அதை வடிவமைத்தது யார்,அதன் பின்னனி என்ன என்ற கேள்விகளுக்கு அழகாக வரலாற்று சான்றுகளோடு விடை தருகிறார் ஆசிரியர். இந்தக் கட்டுரை நமக்கு பல்வேறு சுதந்திர‌ ஆளுமைகளை அறிமுகம் செய்கிறது. காமா அம்மையார்,  பூபேந்திரநாத் தத்தர் (இவர் விவேகானந்தரின் சகோதரர்) பற்றிய அறிமுகங்கள் கிடைத்தது. 1907ல் ஜெர்மனியில் நடந்த சர்வதேச சோஷியலிஸ்ட் காங்கிரஸ் மாநாட்டில் காமா அம்மையார் அவர்கள் இந்தியா சார்பில் பங்கு கொள்கிறார். இங்கு தான் லெனின் இந்திய வீரர்களைச் சந்திக்கிறார். அந்த மாநாட்டில் காமா அம்மையார் இந்திய சுதந்திரம் பற்றி புரட்சிக்கரமாக உரை ஒன்றைத் தருகிறார்,அத்துடன் தான் வடிவமைத்த கொடியையும் அறிமுகம் செய்கிறார். அந்தக் கொடியின் தாக்கமும்,நிவேதிதா அம்மையார் அவர்கள் வடிவமைத்த கொடியின் தாக்கமும் தான் பாரதி பாடலில் உள்ளது என்கிறார் ஆசிரியர்.

அடுத்து பரிசு பெறத் தவறிய பாரதியின் "செந்தமிழ் நாடெனும்" பாடல் "இந்திய கும்மி" எனும் போட்டியில் பங்குப்பெற்று தோற்கிறது. அந்தப் போட்டியின் மீதே பாரதிக்கு நம்பிக்கை இல்லை, ஆனால் நண்பர்கள் சொல்வதாலே பாடலை எழுதுகிறார் என்று அந்தப் பாடலின் பின்னனியை அலசி ஆராய்கிறார் ஆசிரியர். அந்த‌ போட்டியில் முதல் பரிசு பெற்ற பாடலை எழுதிய மாதவையா தான் தமிழின் மூன்றாம் நாவலான பத்மாவதி சரித்திரம் (1898) நூலை படைத்தவர். இது போன்ற பல்வேறு தகவல்களை வாசிக்க வாசிக்க இனிமையான உணர்வு ஏற்படுகிறது.

10.பாரதியியல்: கவ‌னம்பெறாத உண்மைகள் - ய.மணிகண்டன்

இந்தப் புத்தகம் தான் "பாரதியியல்" என்ற வார்த்தையை எனக்கு அறிமுகம் செய்தது. பாரதியியலின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றின அறிமுகத்துடன் புத்தகம் துவங்குகிறது.இதில் நடத்தப்படும் ஆய்வுகள் அனைத்தும் பாரதி என்று பெயரிட்டு வெளியான பாரதியின் படைப்புகள் சார்ந்தே வந்துள்ளதென்றும் ஆனால் பாரதி பல பத்திரிகைகளின் ஆசிரியராக இருந்திருக்கிறார், அவரது பெயரிடாத பலப் படைப்புகள் வெளியாகியுள்ள வாய்ப்புகள் அதிகம் என்றும் சொல்கிறார் மணிகண்டன். கவனம் பெறாத விஷயங்கள பல உள்ளதாகவும் அவற்றையெல்லாம் தேடிட வேண்டிய அவசியத்தைப் பற்றியும் பேசுகிறார். அப்படி அவர் தேடி கண்டிட்ட சிலவற்றை நம்முடன் பகிர்கிறார். அதில் என்னை மிகவும் கவர்ந்தது பாரதிதாசன் எடுக்க நினைத்த பாரதி திரைப்படம் பற்றின தகவல்கள். பாரதிதாசன் அவர்கள் தனது வாழ்நாளுக்குள் எப்படியாவது பாரதி வரலாற்றை படமாக்க ஆசைப்பட்டாராம்,அதற்காக திரைக்கதையும் அமைத்துள்ளார். அந்தத் திரைக்கதையை படமாக்க அனைத்து வகையான முயற்சிகளையும் எடுத்துள்ளார். தனது திரைக்கதையை சிலருக்கு அனுப்பியும் உள்ளார், ஆனால் அவர் ஆசை நிறைவேறாமலேயே போய்விட்டது. அவரது ஆசையுடன் அந்தத் திரைக்கதையும் மறைந்துவிட்டது. பின்பு சமீபத்தில் தான் அந்தத் திரைக்கதையை மீட்டெடுத்துள்ளனர். அந்தத் திரைக்கதை தற்பொழுது "பாட்டுப் பறவைகள்" என்ற புத்தகத்தின் ஒரு பகுதியாக உள்ளது. பாரதிதாசனின் மகன் அதனை வெளியிட்டுள்ளார்.

"பாட்டுப் பறவைகள்" என்ற தலைப்பே இந்தப் புத்தகம் மக்களிடம் சேராமல் செய்துவிட்டது என்று வருத்தம் கொள்கிறார்
மணிகண்டன். அத்துடன் அதிலுள்ல சில அரிய நிகழ்வுகளை நம்முடன் பகிர்கிறார்.

"சுப்புரத்தினம்! நான் வாழவேண்டும் என்று நினைக்கும் 'புதுவை' நண்பர்களை விட்டு,சாக வேண்டும் என்று நினைக்கும் சென்னை நண்பர்களை அடைந்தேன். இன்று வரைக்கும் என் கவிதைத்தொண்டு என்னைக் காப்பாறி வருகிறது.

நாம் சாப்பிட்டு விட்டு உருவப்படம் எடுக்கலாம்."

இன்று நம்மிடயே உலாவும் பாரதியின் புகைப்படம் இவ்வாறு தான் எடுக்கப்பட்டிருக்கிறது என்பதை இந்தக் காட்சி மூலம் சொல்கிறார் பாரதிதாசன்.

இதை வாசித்ததிலிருந்து "பாட்டுப் பறவைகள்" புத்தகத்தை நானும் நீண்ட நாட்களாக தேடிக்கொண்டிருந்தேன். சென்ற புத்தக கண்காட்சியில் எதார்த்தமாக கண்ணில் சிக்கியது. அதுவும் கடைசியாக சுற்றிவிட்டு கிளம்பலாம் என்று சென்றபொழுது சிக்கியது. புத்தகக் கண்காட்சிக்காக சென்னை சென்றதின் பயனை அடைந்ததாக ஒரு திருப்தி கிடைத்தது.

 பாரதி,வாஞ்சி,வ.வு.சி,நிவேதிதா,சுப்ரமணிய சிவா,காந்தி,பெரியார்,விவேகானந்தர்,அவரது சகோதரர்,காமா அம்மையார்,தீனபந்து .. (பட்டியல் இன்னும் நீள்கிறது) என ஏகப்பட்ட புதையல்களை வரலாறு மறைத்து வைத்திருக்கிறது. அதையெல்லாம் தேடிப்பிடிக்க ஆசை தான். எப்பொழுது என்பது தான் கேள்வி...








Friday, February 12, 2016

தீனபந்து

கரும்புத் தோட்டத்திலே - ஆ!
கரும்புத் தோட்டத்திலே

கரும்புத் தோட்டத்திலே - அவர்
கால்களும் கைகளும் சோர்ந்து விழும்படி
வருந்து கின்றனரே! ஹிந்து
மாதர்தம் நெஞ்சு கொதித்துக் கொதித்துமெய்
சுருங்குகின்றனரே - அவர்
துன்பத்தை நீக்க வழியில்லையோ? ஒரு
மருந்திதற் கிலையோ? - செக்கு
மாடுகள் போலுழைத் தேங்குகின்றார், அந்தக் (கரும்புத்தோட்டத்திலே)

- பாரதி

இந்தப் பாடல் பிஜி தீவில் அவதிப்படும் இந்தியப் பெண்களின் நிலையைக் கண்டு என் தல (அதான்பா பாரதி) புதுச்சேரி கடலில் இரவெல்லாம் உறக்கமின்றி தவித்து மனம் வருந்தி பாடிய பாடல்.ஆங்கிலேய ஆட்சியிலிருந்த விலை அடிமை முறைக்கு எதிர்ப்பு வரவே , அவர்கள் அதனை ஒழித்துவிட்டதாகக் கூறு புதிய திட்டத்தை அறிமுகம் செய்தனர்.அதன் பெயர் ஒப்பந்த முறை திட்டம்.ஒப்பந்த முறையில் (Contract) நம்மவர்கள் வெளிநாட்டிற்கு அடிமைகளாய் அனுப்பப்பட்டனர்.அனுப்பப்பட்டனர் என்று சொல்வதை விட கடத்தப்பட்டனர் என்று சொன்னால் பொறுத்தமாக இருக்கும்.அதற்காக கங்கானிகள் இருந்தனர்.பொய் சொல்லி மக்களை கவர்ந்து அவர்களை அடிமைகளாய் நாடு கடத்துவது தான் இவர்களது வேலை.அப்படித் தான் பிஜி தீவிலுள்ள சக்கரை ஆலைகளுக்கு அடிமைகளாய் நாடு கடத்தப்பட்டனர்.அவர்களது துயரத்தை கேட்டுத் தான் பாரதி இவ்வாறு பாடியுள்ளார்.

பாரதியின் மனதில் இவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தியதற்கு நமது தீனபந்துவிற்கு(அதானே நம்ம தலைப்பு) ஒரு முக்கிய பங்கு இருக்கிறது.காந்தி அடிமைத்தனத்தை எதிர்த்து தென்னாப்பிரிக்காவில் போராட்டம் நடத்த , அதனைத் தொடர்ந்து கோகுலே இந்தியாவில் போராட்டத்தை துவங்குகிறார்.நிதி திரட்ட பல்வேறு இடங்களில் பேசுகிறார்.அப்படி அவரது பேச்சினை கேட்ட ஆங்கிலேயர் ஒருவர் தனது எதிர்கால சேமிப்பெல்லாம் இந்த போராட்டத்திற்கு உதவட்டும் என்று கொடுக்கிறார்.1915ல் கோகுலே இறக்க , அந்தப் போராட்டத்தை தனது கையில் எடுக்கிறார்.அவர் தான் நம்ம தீனபந்து.ஆங்கிலேயருக்கு தீனபந்து என்ற பெயரா? என்று வியக்க வேண்டாம்.அவரது இயற்பெயர் C.F.Andrew , அவரது உள்ளத்தினை அறிந்த காந்தி அவருக்கு தீனபந்து என்று பெயர் வைக்கிறார்.தீனபந்து என்பதற்கு ஏழைகளின் நண்பன் என்று பொருள்.

பிஜி தீவில் ஒப்பந்த கூலிகளாக சென்றவர்களுக்கு என்னென்ன பிரச்சனைகள் என்பதை  C.F.Andrews & W.W.Pearson இருவரும் நேரில் ஆய்வு 
C.F.Andrews
செய்தனர்.மக்களிடம் பேசி திரும்பியதும் உடனே அதனை "Report on Indentured Labour in Fiji - An independent Enquiry" புத்தகமாக வெளியிடுகின்றனர்.இந்தப் புத்தகம் இணையத்தில் கிடைக்கிறது.400+ பக்கங்கள் , முதல் 50 பக்கங்களை கடந்திருக்கிறேன்.கங்கானிகள் மூலம் மக்கள் எவ்வாறெல்லாம் ஏமாற்றப்பட்டிருக்கின்றனர்,அவர்களின் மனநிலை,ஏமாற்றம் என அங்குள்ள மக்களைப் பற்றின தகவல்களும் , தங்களது ஆய்வின் கருத்துகளையும் பதிந்திருக்கின்றனர்.இதனை வாசிக்கும் பொழுது எரியும் பனிகாடு  நாவலும் , 12 years a slave திரைப்படமும் ஏற்படுத்திய தாக்கம் நினைவிற்கு வந்தது.நான் வாசித்த வரை அதில் பிஜி தீவில் நமது மக்களின் மனநிலை எப்படியிருக்கிறது,அங்கு நடக்கும் குற்றங்களுக்கு என்ன காரணம்,அதனை பிஜி அரசாங்கம் எப்படி பார்க்கிறது,அங்கு நம் மக்கள் நல்லபடியாக வாழ என்ன வழி பற்றி அவர்களது ஆய்வு பேசுகிறது.

பிஜி தீவில் வட இந்தியர்களே முதலில் அதிகம் சென்றிருக்கின்றனர்,காலப்போக்கில் அவர்களது எண்ணிக்கை குறைய 
தென் இந்தியர்கள் சென்றிருக்கின்றனர்.ஹிந்துஸ்தானி தெரிந்தவர்களிடம் அதிகம் பேசியுள்ளனர் , ஹிந்துஸ்தானி தெரிந்த தமிழர்களுடனும் பேசியுள்ளனர்,ஹிந்துஸ்தானி தெரியாததால் தமிழர்களிடனும் மற்ற‌ தென் இந்தியர்களுடனும் பேச முடியாமல் போகிறது.இந்திய நிலப்பரப்பில் மதராஸ் மாநிலத்தில் தான் குறைந்த அளவு தற்கொலைகள் பதிவாகியுள்ளதாகவும் ஆனால் பிஜி தீவில் தற்கொலையில் அதிகமான எண்ணிக்கையில் மதராஸ் மாகாணத்தை சேர்ந்தவர்கள் இருந்திருக்கின்றனர்.இந்த ஆய்வில் எனக்கு மிகவும் முக்கியமாக‌ தோன்றியது இந்த வரிகள்...

under the existing system of indian labour immigration there is a great disproportion between number of males and females.That this disproportion is mostly responsible for the abnormal number of murders and kindred crimes among Indians.That the majority of those found guilty of such crimes are otherwise quite and law abiding;and the murders for which they are condemned to death,are not due to any murderous instinct in them,but really to sexual jealousy.

பாலியல் வறட்சியால் ஏற்படும் பொறாமையே அங்கு நடக்கும் குற்றங்களுக்கும் தற்கொலைகளுக்கும் காரணம் என்று ஆய்வில் சொல்கின்றனர்.இதை வாசிக்கும் போது தற்பொழுது நமது தேசத்தில் நடக்கும் பாலியல் குற்றங்களோடு ஒப்பிட்டுப் பார்க்க தோன்றுகிறது.அதோடு மட்டுமில்லாமல் மக்கள் தங்களது மதத்தை கைவிட்டதே இதற்கு மிக முக்கிய காரணமாக சொல்கின்றனர்.ஒருவனுக்கு ஒருத்தி என்பதே அங்கு இல்லை,அடிமைத் தனத்திலிருந்து வெளியில் வந்தவர்களும் அதனை பின்பற்றவில்லை, இதற்கெல்லாம் காரணம் மக்கள் இழந்த மத நம்பிக்கைகளே என்று கூறுகின்றனர்.ஆதலால் பிஜி அரசாங்கத்திற்கு மக்களின் மத நம்பிக்கைகள் மீது கவனம் செலுத்த சொல்கின்றனர்.இந்துக்களை கசாப்பு கடைகளுக்கு அனுப்புவதை தவிர்த்துவிடுங்கள் என்று பரிந்துரைக்கின்றனர்.ஒப்பந்த ஊழியர்கள் நலமாக வாழ கல்வி,மதம்,ஆண்-பெண் எண்ணிக்கையில் கவனம் செலுத்த வேண்டும் என்று சொல்கின்றனர்.இவர்களது ஆய்வு ஆங்கிலேயர் மற்றும் பிஜி அரசாங்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்திருக்கும் என்று புரிந்துக்கொள்ள முடிகிறது. 

மக்களுக்கு அங்கு உதவ போதுமான மருத்துவ வசதிகள் இல்லை , மதம் சம்மந்தமான எந்தவித தொடர்பும் இல்லை ஆதலால் இதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் . கல்வி என்றதே அங்குள்ள சிறுவர்களுக்கு கிடையாது ஆங்காங்கே கல்விற்கு உதவ சில கிறுத்துவ அமைப்புகள் செயல்பட்டிறுக்கின்றன ஆனால் அவை மக்களை அவரவர் மதத்தினை பின்பற்ற தடையாக இருக்கலாம்,ஆதால் பிஜி அரசாங்கம் இம்மக்களின் கல்வியினைப் பற்றி கவலைப்பட வேண்டும் என்று ஆய்வு கூறுகிறது .மக்களின் சுய நெறிமுறைகளை மீட்டெடுப்பதின் அவசியத்தையும் அதற்கு ஒரே வழியாக அமைய மக்கள் தங்களது மதத்தினை பின்பற்ற வேண்டும் என்று வழியுறுத்துகிறார்கள்.பெரியார் ஒருப்பக்கம் மதம் மனிதனை வளர்க்கவில்லை என்று குற்றம் சாட்டுக்கின்றார் , மறுப்பக்கம் மனிதன் தனது நிலைப்பாட்டை இழந்து தவிப்பதற்கு காரணமாக மதமில்லாததை கூறுகின்றது வரலாறு.

தேடலில் ஆர்வமுள்ளவர்களுக்கு வரலாறு ஒரு சிறந்த ஆடுகளமாகவே இருக்கிறது.பாரதிப் பற்றி வாசிக்க ஆரம்பித்தேன் அது என்னை தீனபந்துவிடம் வந்து சேர்த்திருக்கிறது.வரலாற்றை தாறுமாறாக பள்ளி வயதில் திட்டியவன் நான் , ஆனால் தற்பொழுது வரலாற்றுடன் தொடந்து பயணம் செய்ய ஆயத்தமாக இருக்கிறேன்.

வெறும் 50 பக்கம் வாசித்துவிட்டு தீனபந்துவைப் பற்றி இன்று அவசர அவசரமாக எழுத காரணமிருக்கிறது.இன்று தீனபந்துவின் பிறந்தநாள்.











Thursday, March 5, 2015

யார் பாரதி?

சமூகவலைதளங்களை ஆயிரம் நொட்டை சொன்னாலும் சில நல்லதும் இருக்கத்தான் செய்கிறது , அதில் முக்கியமாக நான் கருதுவது மறைந்த பல தலைவர்களைப் பற்றி அடிக்கடி நினைவுபடுத்திக் கொண்டேயிருப்பது தான்.தலைவர்களின் பிறந்த / இறந்ததினத்திலோ அல்லது வரலாற்றின் முக்கிய நினைவுகளின் தினத்திலோ அவற்றை பற்றின‌ பதிவுகள் வருகின்றது.சுவாரஸ்யமான சம்பவங்கள், சர்ச்சைகள், ஆதரவுகள்,எதிர்ப்புகள் என்று அன்றைய தினம் கலைகட்டிவிடுகிறது.அப்படித் தான் பாரதி பற்றின "யார் பாரதி?" என்ற யூடுயுப் வீடியோ பகிரப்பட்டது.அதன் வழியே வ.ரா எழுதிய புத்தகம் பற்றியும் , யதுகிரி அம்மாள் எழுதிய பாரதி நினைவுகள் என்ற புத்தகம் பற்றியும் தகவல்கள் கிடைத்தது.

இரண்டு புத்தகமும் இணையத்திலே கிடைத்தும் விட்டது.அப்புறம் என்ன ?.. வீடியோ பார்த்த ஆர்வத்தில் இரண்டு புத்தகங்களையும் back to back படித்துவிட்டேன்.ஒருவரின் சரித்திரத்தினை வாசிக்கும் போது அதில் அவரது புகழ்ச்சி ஓங்கியிருக்கும் பட்சத்தில்  ஒருவித‌ சலிப்பினை ஏற்படுத்திவிடும்.அதற்கு பயந்தே சரித்திர நூல்களை தவிர்த்துவிடுவது வழக்கம்.ஆனால் இந்த இரண்டு புத்தகங்களிலும் புகழ்ச்சியை தேவையான இடத்தில் மட்டுமே சந்தித்தேன்.பாரதி பற்றின விமர்சணங்களை இருவரும் பதிந்திருந்தனர்.இரண்டுமே பாரதியின் புதுச்சேரி வாழ்வினை பற்றியது தான்.திரைப்படங்களில் மட்டுமே பாரதிப் பற்றின செய்திகளை அறிந்தவன் என்றதால் எனக்கு இந்தப் புத்தகங்கள் மிகவும் முக்கியமானவை.

முதலில் வாசித்தது யதுகிரி அம்மாளின் "பாரதி நினைவுகள்" தான்.யதுகிரி - பாரதியின் நண்பரது மகள்.பாரதி பாடல்களை இயற்றியதும் அதனை நண்பர்களிடம் பாடி காட்டுவதை வழக்கமாக வைத்திருக்கின்றார் , அப்பொழுது யதுகிரியையும் அழைத்து பாடல்களை பாடி அதனை திரும்ப பாடச் சொல்லி ரசிக்கின்றார்.இவ்வாறு பாடல்கள் பிறந்த கதைகளையும்  , தனக்கும் பாரதிக்கும் நடந்த விவாதங்கள் பற்றியும் ,  பாரதிக்கும் செல்லம்மாளுக்கும் இடையே நடக்கும் சின்ன சின்ன சண்டைகளைப் பற்றியும் , செல்லம்மாளின் கவலைகளையும் இந்தப் புத்தகத்தில் பதித்திருக்கின்றார்.யதுகிரிக்கும் பாரதிக்கும் நடந்த உரையாடல்களே அதிகம் இருப்பதால் மிக எளிய மொழி நடையாக இருந்தது.ஆரம்ப காலங்களில் தினமும் அவர்கள் கடற்கரைக்கு செல்கின்றனர்,அப்பொழுது நடக்கும் உரையாடல் , செல்லம்மாளுக்காக பாரதியிடம் சண்டைப் பிடிப்பது , திருமணம் நிச்சயம் ஆனதும் பாரதியை சந்திப்பதை தவிர்க்கும் போது பாரதி சொன்ன வார்த்தைகள் என பல சுவாரஸ்யமான உரையாடல்கள் இருக்கின்றது.அதில் எனக்கு முக்கியமாக தோன்றிய ஒரு உரையாடல் , யதுகிரி பள்ளிக்கு சென்று பயில வேண்டும் என்று விரும்புகின்றார் , வீட்டில் மறுத்து விட்டனர்.ஆதலால் மிக வருத்தத்தில் இருக்கும் அவரை பாரதி தேற்றுகிறார்.அப்பொழுது பாரதியும் யதுகிரியின் ஆசைக்கு எதிராகவே பேசுகின்றார்.அந்த எண்ணம் ஆங்கிலத்தின் மீது இருந்த வெறுப்பாக இருந்த போதும் எனக்கு பெண்கள் பள்ளிக்கு செல்வது சரியல்ல என்ற எண்ணமாகவே தோன்றியது(இது எனக்கு ஏற்பட்ட எண்ணமே, தவறாக இருப்பின் மன்னிக்கவும்).

பாரதியின் மெளன விரதமும் , இறப்பினை கடந்து விட நினைக்கும் அவரது மன ஓட்டமும் நாம் அதிகம் தெரிந்துக்கொள்ளாதவை.அவை இரண்டையும் வாசிக்கும் போது மனதினுள் ஒரு வருத்தம் தோன்றத்தான் செய்கின்றது.பாடல்களை பாரதியே மெட்டெடுத்து பாடியிருக்கின்றார்.தனது சுற்றத்தில் அவர் கேட்ட நாட்டுபுற பாடல்களின் மெட்டு,சில french பாடல்களின் மெட்டு என அசத்தியிருக்கிறார்.இப்பொழுதிருக்கும் வசதிகள் அவரது காலத்தின் இருந்திருந்தால் அனைத்தையும் அவரது குரலிலே நாம் எப்பொழுதும் கேட்டிருக்கலாம்.

என்ன சொல்ல...நமக்கு கொடுத்து வைத்தது அவ்வளவு தான்...

குடும்ப சிக்கல்களில் தவித்த பாரதியை பார்த்த எனக்கு வ.ரா எழுதிய புத்தகம் வேறொரு பாரதியை காட்டியது.வாசிப்பின் துவக்கத்தில் தகவல்கள் எளிமையாக இருப்பதாக தோன்றியது , ஆனால் போக போக ஏகப்பட்ட தகவல்கள் .பாரதியின் நண்பர்களைப் பற்றியும்,பாரதியின் பழக்க வழக்கங்கள் பற்றியும்,பாரதியின் ஆசைகள் என‌ நிறைய பேசுகிறார் வ.ரா,பாரதியிடம் தனக்கும் பிடிக்காத பழக்கமாக‌ அவர் கூறுவது "பாரதியின் எச்சில் துப்பும் பழக்கம்".அதனை அவரது நண்பரது வீட்டிலும் செய்கின்றார்.ஆனால் அந்த வீட்டில் அவருக்கு எந்தவித எதிர்ப்பும் இல்லை.அவர்கள் எதுவும் சொல்லாமல் சுத்தம் செய்கின்றனர்.அவர் வேறு ஜாதியை சேர்ந்த ஒருவருக்கு பூணல் அணிவித்து பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் , பாரதியை தேடி போலிஸ் வட்டமிட்ட சம்பவம்,புயலால் பாதிக்கப்பட்ட ஊரினை மீட்டெடுக்க துடிக்கும் நிகழ்வுகள்,காந்தியை சந்திக்கும் நிகழ்வு,காங்கிரஸ் மாநாடு  என அனைத்தையும் வாசிக்கும் போது பாரதி நம் மனதில் கண்டிப்பாக  சம்மணமிட்டு அமர்ந்துவிடுவார்.

பாரதியின் சமுதாய ஈடுபாடுகள் , அவரது நட்பு வட்டங்கள்,அவரது பத்திரிக்கை அனுபவங்கள்,போலிஸ் எதிர்ப்பு , அவரது கோபம்,ஆதங்கம்,எழுத்து,படைப்பு,பாடல் என அடுக்கிக்கொண்டே போகின்றார் வ.ரா.பாரதியின் உருவமைப்புகளை அழகாக வர்ணிக்கிறார் , மிக ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் "பாரதி வழுக்கை" என்பது தான்.எத்தனை வருடங்களாக பாரதியின் புகைப்படத்தை பார்த்திருக்கிறேன்.ஆனால் அந்த முண்டாசினுள் இப்படி ஒரு ரகசியம் இருப்பதாக நான் யோசித்ததேயில்லை.என்னை பொறுத்த வரை இது ஒரு முக்கியமான தகவல்.

பாரதிக்கு நீச்சல் அடிக்க வேண்டுமென்று ஆசையாம் , ஆனால் நண்பர்கள் கடலில் நீந்த இவர் மட்டும் கரையிலிருந்து ஏக்கமாக பார்ப்பாராம்.வ.வே.சு ஐயரிடம் செஸ்,சீட்டு விளையாட்டுகளில் போட்டியிடுகின்றார்.செஸில் அவர் வெற்றி பெறும் போது மனுசன் ஏகப்பட்ட சந்தோசத்தில் குதிப்பாராம்.பாரதி கைதான பின்பு , ஆங்கிலய அரசிற்கு மன்னிப்பு கடிதம் எழுதி தான் வெளியே வருகின்றார்.அதன் விமர்சணங்களை தற்பொழுதும் இணையத்தில் வாயிலாக‌ பார்க்க முடுகிறது.ஆனால் அப்பொழுதைய சூழலில் பாரதி அவ்வாறு செய்தததை தவறாக எண்ண மனம் மறுக்கிறது,அதற்கு இந்தப் புத்தகமும் ஒரு முக்கியமான காரணம்.

பாரதி யானையால் தாக்கப்பட்டார் என்பது நாம் அறிந்ததே,ஆனால் அப்பொழுது அவரை குவளைக் கண்ணன் என்பவர் தான் காப்பாற்றியிருக்கிறார்.இவரைப் போன்ற நிறைய நபர்களை இரண்டு புத்தகங்களும் நமக்கு அறிமுகம் செய்கின்றது.

அது ஒரு நீண்ட பட்டியில் , அதில் சில முக்கியமான நபர்களின் புகைப்படங்கள் இந்த இணையத்தில் கிடைக்கிறது.இதில் பாரதியின் பல படைப்புகளும் கிடைக்கிறது.பாரதியின் சுய விமர்சணமாக கருதப்படும் பாரதியின் சின்னச் சங்கரன் கதை திருடப்பட்டு விட்டது , அதில் நான்கு அத்தியாயம் மட்டுமே தற்பொழுது நம்மிடம் இருக்கின்றது.இதுப் போன்ற அறிய பாரதி படைப்புகள் இந்த தளத்தில் கிடைக்கிறது.

அடுத்து இந்த தளத்தினை வேட்டையாடலாம் என்றிருக்கிறேன்....யாராவது வரீங்களா?