Showing posts with label பிரபு. Show all posts
Showing posts with label பிரபு. Show all posts

Tuesday, November 14, 2017

ஜன்னலில் ஒரு சிறுமி

குட்டி ஆகாயம் குழுவின் சார்பில் நடந்த குழந்தை வளர்ப்பு சார்ந்த நிகழ்விற்காக "ஜன்னலில் ஒரு சிறுமி" என்ற புத்தகம் குறித்து எனது பார்வை.

வணக்கம் நண்பர்களே,
4 வருடங்களுக்கு முன்பு இந்தப் புத்தகத்தை வாசித்தப் பொழுது எனது பள்ளி நினைவுகளே மனதில் முழுதும் ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் தற்பொழுது வாசிக்கும் பொழுது ஒரு தகப்பனாக எனது மகளின்
கல்விமுறையிலுள்ள  சிக்கல்கள் மனதினுள் ஓடிக்கொண்டிருக்கிறது. சிக்கல்கள் மட்டுமல்ல பள்ளியிலுள்ள நல்ல மாற்றங்களையும் புரிந்துக்கொள்ள முடிகிறது.  இந்தப் புத்தகத்தில் வரும் டோட்டா சானின் வயது தான் எனது மகளுக்கும் , ஆதலால் நிறைய விசயங்களை அதனுடன் ஒப்பிட்டு பார்க்க முடிகிறது. பெற்றோராய் எனது பார்வையை கடந்து எனது சுற்றத்தில் நான் கவனிக்கும் குழந்தை வளர்ப்பு மற்றும் கல்வி சார்ந்தும் பேச‌ விரும்புகிறேன். இந்தப் புத்தகத்தை ரயில் பெட்டி வகுப்பறையை தாண்டி எடுத்துக்கொள்ள வேண்டிய விசயங்கள் நிறைய இருப்பதாக கருதுகிறேன். இந்தப் புத்தகம் சார்ந்து நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தப் போது,இதிலுள்ள ஒவ்வொரு பக்கத்தையும் விரிவாக பேசிட வேண்டும் என்றார். என்னளவில் எனக்கு முக்கியத்துவமாக தோன்றிய விசயங்களை இங்கு பேசுகிறேன்.

சுமத்தப்படும் குற்றங்கள்:
செப். கடைசி வாரம் உத்திர பிரதேசத்தில் 11ம் வகுப்புபயிலும் மாணவன் தற்கொலை செய்ய முயற்சி என்ற செய்தி கண்ணில் பட்டது. அந்தச் செய்தி மனதை உறுத்திக்கொண்டேயிருந்தது. ஆம் மனதை உறுத்திக்கொண்டே தான் இருந்தது. ஏனென்றால் அவன் தற்கொலைக்கு தூண்டப்பட்டிருக்கிறான் அதுவும் பள்ளி ஆசிரியர்களால். அவன் தற்கொலை கடிதம் ஒன்றையும் எழுதியிருக்கிறான். அதுவும் உபி முதலமைச்சருக்கு. அதன் வார்த்தைகள் இவை தான் “Chief minister sir, I am not a terrorist but a student.”  ...ஏன் இந்த வார்த்தைகள்? இரண்டு மாதத்திற்கு முன்பு தான் அந்தப் பள்ளியில் சேர்ந்திருக்கிறான். அவன் ஒரு முஸ்லீம் மதத்தை சேர்ந்தவன் என்பதால் அவன் மீது சந்தேக பார்வையை ஆசிரியர்கள் கொண்டிருக்கின்றனர். அவனது பை தினமும் சோதனை செய்யப்பட்டிருக்கிறது. சக மாணவர்களும் யாரும் அவனிடம் பழகுவதில்லை. அவனை வெவ்வேறு சூழலில் ஆசிரியர்கள் தீவிரவாதி என்று சொல்லி ஒதுக்கிக்கொண்டேயிருந்ததால் இந்த முடிவிற்கு தள்ளப்பட்டிருக்கிறான்.
இந்த சம்பத்தை டோட்டோ சான் புத்தகத்தில் வரும் ஒரு சம்பவத்தோட ஒப்பிட முடியும். டோட்டா சான் வகுப்பில் ஆசிரியார் மனிதனின் வளர்ச்சியைப் பற்றி ஒரு பாடம் எடுக்கிறார். அப்பொழுது துவக்கத்திலிழுந்த வால் மனிதனின் பரிணாம வளர்ச்சியில் மறைந்துவிட்டது என்று சொல்லி ஆசிரியர் சிறுவர்களை முதுகெலும்பை தொட்டுப் பார்க்க சொல்கிறார். அப்பொழுது ஒரு சிறுவனைப் பார்த்து "என்ன வால் இருக்கா?" என்று சொல்லி சிரிக்கிறார். இது ஒரு சாதாரன சம்பவமாகவே நமக்கு தோன்றினாலும் பள்ளி முதல்வருக்கு அப்படி தோன்றவில்லை. முதல்வர் அந்த ஆசிரியரை தனியாக அழைத்து கண்டிக்கிறார். அந்த ஆசிரியர் வால் இருக்கா என்ற கேட்ட சிறுவன் சற்றே குள்ளமானவன் என்பதால் அவர் வால் என்றதுமே மற்றவர்களோ அல்லது அவனோ குரங்காக நினைக்கலாம் அதுவே தாழ்வுணர்ச்சியாக மாறலாம் என்பதே முதல்வரின் எண்ணம்.
இந்தச் சம்பவம் நிறைய சிந்திக்க வைக்கிறது. இன்று ஒரு குழந்தை மேல் எத்தனை வகையான சின்ன சின்ன‌ குற்றங்கள் வீட்டிலும் பள்ளியிலும் தேவையில்லாமல் சுமத்தப்படுகிறது. "இதை சரியா செய்யல..அத ஒழுங்கா செய்யல. ஏன் இப்படி பண்ண..சொன்னதையே கேட்கிறதில்லை..நான் அப்பவே சொன்னேனா..பாரு அந்தப் புள்ளைக்கும் உன் வயசு தான் ஆகுது...உன்னால் ஏன் செய்ய முடியல" போன்று சுமத்தப்படும் குற்றங்கள் தான் எத்தனை. இந்த மாதிரி சுமத்தப்படும் சின்ன சின்ன குற்றங்களும் அந்தக் குழந்தையின் மனதில் ஏகப்பட்ட தாழ்வுணர்ச்சியை விதைக்கும். சற்றே தள்ளி நின்று ஒரு குழந்தை உள்ளத்துடன் சுமத்தப்படும் இந்தக் குற்றங்களை நாம் பார்த்திட வேண்டும். அப்பொழுது தான் அதன் சுமையையும் வலியையும் தெரிந்துக்கொள்ள முடியும்.

மலையிலிருந்து கொஞ்சம் கடலிருந்து கொஞ்சம்:
அந்தப் பள்ளியின் மதிய உணவு இடைவேளை எனக்கு முக்கியமாக தோன்றுகிறது. தினமும் மாணவர்களின் உணவில் மலை மற்றும் கடலிருந்து கொஞ்சம் இருக்கிறதா என்ற கேள்வியே சிறுவர்களுக்கு உணவின் மீது ஆர்வம் தருகிறது. இந்தப் பள்ளியைப் போன்று தற்பொழுதுள்ள சில‌ பள்ளிகளில் (எனது நட்பு வட்டத்தில்) குழந்தைகளின் உணவின் மீது கவனம் தருகிறார்கள். சிறுவர்கள் யாராவது சிப்ஸ்,பிஸ்கட் அல்லது பேக் செய்யப்பட்ட உணவை எடுத்துப் போனால் உடனே வீட்டில் சமைத்த‌ உணவை அனுப்புங்கள் என்று சீட்டு அனுப்புகிறார்கள். உணவு பற்றின விழிப்புணர்வை சிறுவர்களுக்கு தர வேண்டுமென்ற ஆர்வம் பள்ளிக்கு இருப்பது மகிழ்ச்சி தருகிறது. அதே போல் சிறுநீர் கழிப்பதற்காக செல்வதையும்  சிறுவர்களின்  (குறிப்பாக 3-6 வயது சிறுவர்கள்) விருப்பம் போல் இருப்பதை கவனிக்க முடிகிறது. இது ஒரு நல்ல விசயம்.
ஆனால்  உணவின் இடைவெளியில் சிறுவர்களை (3-6 வயதினர்) சீர்படுத்த முயற்சிக்கிறார்கள். விரைவாக சாப்பிட வேண்டுமென்று  கட்டாயப்படுத்துவதை உணர முடிகிறது. ஆசிரியர் திட்டுவதற்காக தங்களது உணவை அரைக்குறையாக சாப்பிடுகின்றனர். நல்ல உணவின் முக்கியத்துவத்தை உணர்த்தும் பள்ளிகள் தனி ஒரு சிறுவர் போதுமான‌ உணவை எடுத்துக்கொள்கிறார்களா என்பதை கவனிப்பதில் சிரமம் எடுத்துக்கொள்வதில்லை. காலை 8 மணிக்கு கிளம்பும் இந்த வயது சிறுவர்கள் மதியம் 1 மணிக்கு தான் வீடு திரும்புகிறார்கள். அந்த சின்ன உணவு இடைவேளை சிறுவர்களின் உணவு பழக்கத்திற்கு முக்கியமானவை. போதுமான நேரம் பள்ளி தருவதில்லை என்று பெற்றோர்கள் குறைப்பட்டுக்கொண்டால்,பள்ளியோ வீட்டில் குழந்தைக்கு சுவையான உணவை சமைத்து வையுங்கள் என்று பதில் தருகிறார்கள். பள்ளி-வீடு இப்படி மாறி மாறி குறை சொல்லிக்கொண்டிருக்கிறோம்.ஆனால் இழப்பும் பாதிப்பும் சிறுவர்களுக்கு தான் என்பதை இருவரும் உணர்ந்திடல் வேண்டும். ஆனால் டோட்டோ சானின் பள்ளியிலோ மெதுவாக சாப்பிடுங்கள் என்று சொல்லித் தரப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. "Row Row row your boat" பாடலை மெல்லு மெல்லு நல்லா மென்னு சாப்பிடு என்று  பாடலை மாற்றி பாடி சிறுவர்களுக்கு சாப்பிடும் முறையையும் அழகாக  நடைமுறைப்படுத்தியுள்ளனர்.

மேடை பேச்சு:
டோட்டா சான் வகுப்பில் உணவிற்கு பின்பு சொற்பொழிவிற்கான நேரம் தரப்படுகிறது. மேடையில் பேசுவதுப் பற்றி பள்ளி முதல்வரின் புரிதல் மிக முக்கியமானது. சிறுவர்கள் அனைவரும் மேடை பேச்சாளராக வேண்டுமென்ற நோக்கில் இந்த நேரம் ஒதுக்கப்படவில்லை ஒவ்வொரும் தங்கு தடையின்றி தங்களுக்கு தோன்றியதை பொதுவில் பேசிட வேண்டுமென்ற நோக்கில் அதை நடத்துவார். தற்பொழுது கல்வி சூழலில் இதை மிக முக்கியமாக பார்த்திட வேண்டும். ஒரு குழந்தை தனது மனதில் உள்ளதை தங்கு தடையில்லாமல் சொல்வது என்பது மிக முக்கியமானது. அது ஒரு நேர்த்தியாகவோ,ஒரு வடிவத்திலோ,ஈர்க்கும் வார்த்தைகளின் அலங்காரத்திலோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் பெரியோரின் எதிர்ப்பார்ப்பு வேறு விதமாக இருக்கிறது. இந்த எதிர்ப்பார்ப்பிற்கு பயந்து தான் சிறுவர்கள் தயக்கத்திற்கு உட்படுத்துகிறார்கள்.
மேடை பேச்சு என்றதும் அதன் சார்ந்து எனக்கு கிடைத்த நேரடி அனுபத்தை பகிர விரும்புகிறேன். நானும் நண்பர்களும் நடத்தும் கதை சொல்லல் நிகழ்வில் எங்களுக்கு கிடைத்த அனுபவம் தான் அது. 50-60 பெரியோர் உள்ள கூட்டத்திற்கு முன்பு அங்கு கூடியிருந்த பெரும்பாலான சிறுவர்கள் தாங்களும் கதைகள் சொல்ல வேண்டுமென்று ஆர்வத்துடன் முன்னே வந்தக் காட்சி எங்களுக்கு இன்றும் பிரமிப்பாக இருக்கிறது.  அங்கு கூடியிருந்த‌ பெற்றோரும் மேடை பயம் என்பதே இல்லாமல் தங்களது பிள்ளகள் பேசியதை நினைத்து ஆச்சரியம் அடைந்தார்கள். ஆனால் எங்களுக்கு அதன் ரகசியம் புரிந்திருந்தது. ஆம் மேடை பயம் இல்லாமல் சிறுவர்கள் இருந்ததற்கு காரணம் அந்த இடமும் சூழலும் சிறுவர்களுக்காக இருந்தது, அங்கு எந்தவித அன்னிய தனமும் இல்லாமல் நாங்கள் சூழலை உருவாக்கி வைத்திருந்தோம். மேடை அமைப்பு இல்லை, அலங்காரம் ஏதுமில்லை,மைக் கூட இல்லை. ஆனால் சிறுவர்களுக்கான பாடல்கள்,கதைகள்,விளையாட்டுகள் என அனைத்தும் அவர்களுக்கானதாக‌ இருந்தது. சிறுவர்கள் அனைவரும் அதை தங்களுக்கான சூழல் என்பதை உணர்ந்திருந்தார்கள். அங்கு பேசவோ,பாடவோ எந்தவித கூச்சமோ தயக்கமோ அவர்களுக்கில்லை. ஆனால் பெரியோர்கள் மேடை பேச்சு என்றதுமே மேடை பயம் என்பதை சிறுவர்களுக்கு அறிமுகம் செய்கிறார்கள். மேடை என்றதும் சிறுவர்கள் தங்களது இயல்பு தன்மையை இழக்கும் வகையில் நிறைய விசயங்களை குழந்தைகள் மீது சுமத்துகிறார்கள்.
மேடை பேச்சு என்பதில் மட்டுமல்ல , குழந்தையின் வெவ்வேறு செயலிலும் பெரியோருக்கு நிறைய எதிர்ப்பார்ப்புகள் இருக்கிறது. குழந்தை வரைய துவங்கியதும்,பாட துவங்கியதும்,ஆட துவங்கியதும்,கதை சொல்ல துவங்கியதும் அல்லது வேறு எதையாவது ஆர்வத்துடன் செய்ய துவங்கியதும் அவற்றை தாங்கள் அறிந்த வடிவத்திற்கு மாற்றுவதிலே பெரியோர்கள் பலர் அதிகம் கவனம் செலுத்துகிறார்கள். சிறுவோர்களின் செயலை அடிக்கடி திருத்துவது,அல்லது ஏதாவது வகுப்பில் கொண்டு சேர்ப்பது (அவர்களின் விருப்பத்தின் மீது கவனம் செலுத்தாமல்) என்று ஆர்வத்தையை குறைக்கும் விதத்தில் நடந்துக்கொள்கிறார்கள். நடன வகுப்பிற்கு சேர்ந்தத‌தும் தனது பிள்ளைகள் நடனம் ஆடுவதை நிறுத்திவிடுவதுப் போன்ற அனுபங்கள் பலவற்றை நண்பர்கள் சொல்லி கேட்டிருக்கிறேன். ஏதாவது இரண்டு வகுப்பில் மட்டும் என்னை சேர்த்துவிடுங்கள் அதற்கு மேல் என்னால் போக‌ முடியாது என்று சொல்லும் சிறுவர்களையும் பார்த்திருக்கிறேன்.
குழந்தைகளின் செயல்களை அவர்களின் வடிவத்திலே அனுமதிப்பது அதன் அழகை ரசிப்பது என்பது ஒரு கலை. அதனை பெரியோர்களாகிய நாம்  முதலில் வளர்த்துக்கொள்வோம்.

விவசாய ஆசிரியர்:
டோட்டா சானின் அவர்களது பள்ளிக்கு அருகிலுள்ள விவசாயியை வகுப்பிற்கு அழைத்து வந்து இவர் தான் தங்களுக்கு பாடம் எடுக்கப் போகும் விவசாய ஆசிரியர் என்று அறிமுகம் செய்வார்கள். அந்தக் காட்சி எனக்குள் ஓடிக்கொண்டே இருக்கிறது. சிறுவர்களுக்கு ஏற்கனவே தெரிந்த்திருந்த (அறிமுகமானவர் அல்ல)   அன்றைய வகுப்பிற்கு ஆசிரியர். அவர்களின் சிந்தனைகள் எப்படியெல்லாம் இருந்திருக்கும் என்று யோசித்துக்கொண்டிருந்தேன். நமது கல்வி அமைப்பில் நிலத்திற்கான கல்விக்கு எவ்வளவு முக்கியத்துவம்  கொடுக்கப்படுகிறது என்பது பலரது கேள்விகளாகவே இருக்கிறது. நமது பிள்ளைகளின் பாடப்புத்தகத்தில் 
Strawberry,kiwi பழங்களுக்கு கூட இடமுண்டு ஆனால் மாம்பழத்திற்கோ,பலாவிற்கோ இடம் கிடைப்பது சற்றே சிரமமாக தான் இருக்கிறது. அருகிலுள்ள விசயங்களைப் பற்றின புரிதல்கள் மீது கவனம் செலுத்தாமல் கடல் தாண்டி இருக்கும் விச்யத்தை சொல்லி தருவதில் ஏன் இந்த அவசரம் என்பது புரியவில்லை. நமது நாட்டில் அச்சிடப்படும் ஆங்கில சிறுவர் இதழில் ஒரு படத்தை கவனித்தேன். மீனவர்களின் உலகை விவரிக்கும் படம் அது. அதில் வேறு நாட்டின் ஆண்களும் பெண்களும் பேண்ட் சட்டைப் போட்டுக்கொண்டு மீன்களை தூக்கிக் கொண்டு நிற்கிறார்கள். இந்தப் படத்தை சிறுவர்கள் பார்க்கும் போது அவர்களுக்கு மீனவர்கள் பற்றி என்ன மாதிரியான புரிதல்கள் கிடைக்கும் என்பதை நாம் சிந்திக்க வேண்டியிருக்கிறது. உண்மைக்கும் சிறுவர்களுக்கான புத்தகத்திற்கும் ஏன் தேவையில்லாத இடைவேளையை நாம் உருவாக்குகிறோம். கற்றலுக்கு எதிர்விதமாக நான் பயணிப்பது போல் இருக்கிறது.

பள்ளி நிகழ்வுகள்:
இந்தப் புத்தகத்தில் வரும் பள்ளி நிகழ்வுகள் குறிப்பாக பரிசாக அங்கு தரப்படும் காய்கறிகள் எனக்கு இன்றைய பள்ளி நிகழ்வுகள் சார்ந்து எண்ணங்களை ஓடச்செய்கிறது. இன்றைய பள்ளிகள் முடிந்தவரை தங்களது நிகழ்வுகளில் அனைத்து சிறுவர்களும் பங்குபெற வேண்டுமென்று நினைக்கின்றனர். அதற்கு தகுந்தாற்போல் நிகழ்வுகளை வடிவமைக்கின்றனர் என்பது மகிழ்வாக இருக்கிறது. ஆனால் பள்ளி நிறுவனங்கள் பெற்றோர்களை கவர்வதிலே முக்கியத்துவம் காட்டுவதாக தோன்றுகிறது குழந்தைகளின் மகிழ்ச்சிக்கு முக்கியத்துவம் தருகிறார்களா என்று யோசிக்க வைக்கிறது. எனது மகளின் பள்ளியில் கடந்த இரண்டு ஆண்டுகளிலும் சுதந்திர தின விழாவில் கொடி ஏற்றப்படுவதை அதிகமான சிறுவர்கள் பார்க்கவேயில்லை. அவர்கள் நிகழ்ச்சியில் பங்கெடுப்பதாலும் திடீர் மழையாலும் அனைத்து சிறுவர்களையையும் பெற்றோர்களின் இருப்பில் கையாள்வதில் நிர்வாகத்திற்கு உள்ள சிக்கல்களாலும் என்று காரணங்கள் பல. ஏற்கனவே சொன்னதுப் போன்று எதுவாக இருந்தாலும் இழப்பு என்னமோ சிறுவர்களுக்கு தான். அடுத்து அந்த நிகழ்வுகளில் மேடையில் பேசும் சிறுவர்களின் உரை சிறுவர்களுக்கானதாகவே இருப்பதில்லை. பத்து வயது சிறுவருக்கு வயதிற்கு மீறிய கருத்துக்கள் கொண்ட உரையை தரப்படுகிறது. சுதந்திரம் பற்றின புரிதல் பத்து வயது சிறுவருக்கு என்னவாக இருக்கும், நாட்டின் சுதந்திரம் சார்ந்து ம‌னதில் உள்ளதை அப்படியே பகிர அனுமதித்திருந்தால் அந்த உரை எப்படி இருக்கும் என்று ஏன் பள்ளி நினைத்து பார்ப்பதில்லை என்ற கேள்வி எனக்கு எப்பொழுதும் உண்டு. பெரியோர்கள் தயாரித்து அதை மனனம் செய்து ஒப்பித்த சிறுவரின் உரையால் யாருக்கு என்ன கிடைக்கிறது. சிறுவர்களின் மனனம் செய்யும் திறனையும் மொழி உச்சரிப்பு திறனையும்  வேண்டுமானால் நினைத்து நாம் பெருமைப்பட்டுக்கொள்ளலாம். பள்ளி நிகழ்வுகள் தான் சிறுவர்களின் நினைவுகளில் நீண்ட நாட்கள் வாழப்போகிற ஒன்று. கொஞ்சம் திட்டமிடலும் அக்கறையும் எடுத்துக் கொண்டால் போதும் இதனை அழகாக வடிவமைக்கலாம். சினிமா பாடல்கள் தாண்டி மத ஒற்றுமை என்று சொல்லி நாம் வழக்கமாக போடும் நாடகங்கள் தாண்டி குழந்தைகள் அனுபவிக்கும் நிகழ்வுகளை உருவாக்கிட முடியும்.

பேய் இருக்கா:
அந்தப் பள்ளியில் ஒரு விளையாட்டு நடந்தேறியது, அது பேய் விளையாட்டு. ஆம் சிறுவர்கள் சிலர் பேயாக வேடமிட்டு சுடுகாட்டில் ஒளிந்துக்கொள்கின்றனர். மற்ற சிறுவர்கள் தைரியமாக சுடுகாட்டிற்கு சென்று அங்கிருக்கும் பேய்களை பார்த்து வர வேண்டும். அதிகமான சிறுவர்கள் சுடுகாட்டிற்கு கிட்ட வரை சென்று தைரியமாக திரும்பிவிட்டனர், ஆனால் யாரும் பேயை கண்டுப்பிடிக்கவில்லை. ஆரம்பத்தில் பயந்திருந்த சிறுவர்கள் அவ்வளவு தூரம் சென்று வந்ததும் தைரியமாக இருந்தனர். பேய் பற்றின அவர்களின் பயம் இனி சற்று விலகியே இருக்கும் என்று அந்தப் புத்தகத்தின் பகுதி நகர்கிறது.
இந்த பேய் பயம் நமது சிறுவர்கள் மத்தியில் எப்படி இருக்கிறது. ஏதோ ஒரு பயம் சிறுவர்களுக்கு வேண்டுமென்று சொல்லியே பூச்சாண்டிக்கும் போலிசுக்கும் அல்லது ஏதோ ஒன்றிருக்கு வீட்டில் பயம் மூட்டி வைத்திருக்கின்றனர் பெற்றோர்கள் பலர். தற்பொழுது தொலைக்காட்சியின் மூலம் பேய் பற்றின பயம் சிறுவர்களுக்கு உருவாகிக்கொண்டிருக்கிறதை கவனிக்க முடிகிறது. அதிகமான சீரியல்கள் பேய்,ஜோசியம்,மந்திர சக்திகள் என்று பயணித்துக் கொண்டிருக்கிறது. சிறுவர்கள் எங்கு சீரியல்கள் பார்க்கிறார்கள் அப்படியே அவர்கள் பார்த்தாலும் இதெல்லாம் புரியாது என்று நினைத்தால் நமக்கு தெரிந்தது அவ்வளது தான். நிறைய சிறுவர்கள் சீரியல்களை தொடர்ந்து பார்க்கிறார்கள். டிவி நிகழ்ச்சிகளை பொறுத்தவரை பார்வையாளராக பெரியோரின் பார்வையும் சிறுவர்களின் பார்வையும் வேறுபடுகிறது. சிறுவர்களின் கவனிப்பு மேலோட்டமானது அல்ல. உலகம்,வாழ்வு பற்றின புரிதல்களை பார்ப்பதிலிருந்து அவர்கள் எடுத்துக்கொள்கிறார்கள். பெரியோர்கள் சீரியல்களை பார்க்குபோது அருகிலிருந்து பார்க்கும் சிறுவர்கள் அதிலிருந்து நிறைய விசயங்களை புரிந்துக்கொள்கிறார்கள். 5 வயது சிறுவர்களால் கூட சீரியல்களில் வரும் குடும்ப உறவுகளை தெள்ளத் தெளிவாக சொல்ல முடிகிறது. வேறு நாடகத்தில் அதே நடிகர்கள் வரும்போது அவர்களுடன் நடிக்கும் மற்றவர்கள் எங்கே என்று கேட்கிறார்கள். போலீஸ் என்றாலே அதில் நல்ல போலிஸ் கெட்ட போலிஸ் உண்டு என்று தான் சீரியல்கள் மூலம் புரிந்து வைத்திருக்கிறார்கள்.விஷம் கலந்து வரும் சீரியல்கள் பெரியர்களுக்கு வேண்டுமானால் பொழுதுபோக்கு என்று சொல்லிக்கொள்ளலாம் ஆனால் அது உண்மையில் சிறுவர்களின் உலகில் வேறு.
சமீபத்தில் வடநாட்டு சீரியல் குழந்தை திருமணத்தை ஆதரிக்கும் வகையில் காட்சிகள் இருந்ததால் நிறுத்தப்பட்டது. நமது தமிழக சீரியலின் போக்கு ஏற்கனவே கொடுமையாக இருக்கும் தற்பொழுது மரணக் கொடுமையாக இருக்கிறது. மூடநம்பிகைகளை வளர்க்கும் வண்ணம் காட்சிகளும் கதைகளும் நிறைந்துகிடக்கிறது. கருவை எப்படியெல்லாம் கலைப்பது என்பதை நமது சீரியல்களில் அழகாகவும் தெள்ளத் தெளிவாகவும் ஏதோ  ஒரு சானலில் எப்பொழுதும்  சொல்லிக்கொடுக்கிறார்கள். இறந்துப் போனதாக கருதப்படுப‌வர்கள் உயிரோடு தான் இருக்கிறார்கள் என்று ஜோசியர்கள் சரியாக சொல்லிவிடுகிறார்கள். ஏகப்பட்ட பேய் நாடகங்களும் ஏகப்பட்ட சாமி நாடகங்களும் (பெயரளவில் சாமி நாடகங்கள் என்று சொல்லிக்கொண்டு) பெருகிக்கொண்டே இருக்கிறது. இரண்டுமே நல்ல சமூகத்திற்கு தேவையானதா என்று சிந்திக்க வேண்டும். உண்மையில் பேய் என்று இந்த உலகில் ஏதாவது உண்டென்றால் அது டிவிப் பொட்டியாக தான் இருக்க வேண்டும்.

நன்றி:
டோட்டா சானின் அம்மாவின் புரிதல்கள்,ரயில் பட்டி ஒன்றை எடுத்து வரும் தினம் அன்று சிறுவர்கள் காத்திருந்தது,6 வயது சிறுமி தனியாக தினமும் பள்ளிக்கு ரயிலி வருவது,சூப் வைக்கும் நிகழ்வு,நிர்வாணமாக‌பள்ளியில் அனைத்து சிறுவர்களும் குளிப்பது,உடல் குறைபாடுள்ள சக நண்பன் பற்றியது என பேச வேண்டிய விசயங்கள் நிறைய இருந்தாலும் எனக்கு தற்பொழுது முக்கியமென தோன்றியதை மட்டுமே பகிர்ந்துள்ளேன். டோட்டோ சானின் வெற்றி என்பது நாம் ரெயில் வகுப்பறையை உருவாக்குவதில்லை , டோட்டோ சானுக்கு பள்ளியில் கிடைத்த அந்த உணர்வை அந்த மகிழ்வை அந்த அனுபத்தை நமது குழந்தைகளுக்கு ஏற்படுத்தவதில் தான் உள்ளது என்பதே எனது பார்வை.










Thursday, October 26, 2017

இது எங்கள் வகுப்பறை

ஒரு ஆசிரிய‌ராய் தனது சுற்றத்தில் முழு சக்தியை பயன்படுத்தி மாணவர்களுக்கு விரும்பும் வகையில் கற்றலை மாற்றியிருப்பதற்காகவும் அதனை இலக்கியத்திற்கு கொண்டு வந்ததாற்கவும் முதலில் எனது வாழ்த்துக்களை தோழி சசிகலா அவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் புத்தகத்தை வாசிக்கும் பொழுது இரண்டு புத்தகங்கள் எனது மனதிற்குள் வந்து வந்து சென்றது. அவை "பகல் கனவு" மற்றும் "ஜன்னலின் ஒரு சிறுமி" புத்தகங்கள். கல்வி துறையில் இவை இரண்டுமே முக்கியமானதாய் கருதப்படும்  புத்தகங்கள். பெற்றோர்,ஆசிரியர்கள்,சமூகம் இந்த மூவருக்கும் குழந்தை வளர்ப்பில் மிக முக்கிய பங்குண்டு. அதில் "இது எங்கள் வகுப்பறை" என்ற‌ இந்தப் புத்தகம் ஆசிரியரின் பங்கினை எவ்வாறெல்லாம் திறமையாகவும்,சிறப்பாகவும் செய்ய முடியுமென்பதை எடுத்துக்காட்டுகிறது.

மாணவர் பருவத்தில் ஆசிரியருடன் நெருங்கி உறுமையுடன் பழகிவிட்டால் போதும்,அந்தக் குழந்தை தனது முழு ஆற்றலையும்,கற்றல் என்பதன் உண்மையான சுவையையும் அனுபவத்திட‌ முடியும். அப்படி தனது மாணவர்களுக்கு சூழலை அமைத்திட நினைத்து அதனை செயல்முறை படுத்திய அனுபவம் தான் இந்தப் புத்தகம். பள்ளி வரலாற்றுடன் புத்தகம் துவங்குவது மகிழ்ச்சியை தருகிறது. தனது வகுப்பறை அனுபவத்தை அழகாக பகிர்ந்துள்ளார். அவரது எழுத்துக்கள் மூலம் அந்த வகுப்பறையின் நிகழ்வுகளை காட்சிகளாக ஓட்டிப்பார்க்க முடிகிறது. எனது பிள்ளைக்கும் இந்த மாதிரி வாய்ப்புகள் கிடைக்குமா என்ற எதிர்ப்பார்ப்பை உண்டாக்குகிறது.

சிறுவர்கள் எப்பொழுதும் செயல்பாடுகளையும்,அதிலுள்ள பொறுப்புகளையும் ரசிக்கின்றனர். வீட்டில் கூட பெரியவர்கள் செய்யும் வேலைகளில் தங்களுக்கு ஏதேனும் வாய்ப்பு கிடைக்குமா என்ற ஏக்கத்துடனையே இருக்கின்றனர். "இதெல்லாம் பெரியவங்க வேலை" என்ற வாக்கியத்தை அவர்கள் அதிகம் வெறுக்கின்றனர். சமைக்கும் போதும்,வீட்டை சுத்தம் செய்யும் போதும்,கடைக்கு செல்லும் போதும்,தோட்டத்தில் நாம் இருக்கும் போதும் இதை நன்றாக கவனிக்கலாம். இதுப்போன்ற சூழலில் அவர்களுக்கு கிடைக்கும் சிறிய பொறுப்புகளை முழு ஈடுபாடுகளுடன் செய்து முடிக்கின்றனர். அதன் மூலம் அவர்களுக்கு கிடைக்கும் கற்றலை வகுப்பறையில் அமர்ந்துக்கொண்டு வார்த்தைகள் கொண்டு அறிமுகம் செய்வதென்பது மிகவும் கடினமானது. அதைவிட சின்ன சின்ன செயல்பாடுகள் கொண்டு கற்றலை இயற்கையாய் ஏற்படுத்தினார் என்பதை வாசிக்கும் போது அழகாக இருந்தது.

ஒவ்வொரு பாடத்திற்கும் புதுப்புது பெயர்கள் சூட்டி அதன அனுபவத்தினை குழந்தைகள் எழுத்துகளாய் மாற்றும் முயற்சி மிகவும் சிறப்பானது. அதுவும் தோட்டம் அமைப்பதற்கான அத்துனை முயற்சிகளும் மிகப்பெரிய பாராட்டுகளுக்குறியது. புழு எப்படி பூச்சியாக மாறும் ? இந்த சந்தேகத்தை அவர் ஒவ்வொருவருக்கும் புரியும் படி செய்த செயலும் மிகவும் அருமையானது.

ஜட்டி போடாமல் வரும் 1ம் வகுப்பு சிறுமியை கையாண்ட விதம் என்னென்ன கேள்விகளை மனதினுள் எழுப்புகிறது. குழந்தையுடன் சற்று இறங்கி பேசும்பொழுது மாற்ற முடியாத சில விஷயங்களை எவ்வள்வு எளிமையாக மாற்றிட முடியும் என்பதை காணமுடிகிறது.

முட்டை எலும்புக்கூடு, பானை ஓவியம், வாட்டர் கேன் செடி தோட்டம்,#tense கதை,கத்தரிக்காய் ராஜா பாடலும் நாடகமும்,பம்பரம்,கிளி பாடல்,அந்த ஐந்து குழுக்கள்,அவர்கள் வரைந்த ஓவியங்கள்,ஜூஜூ கடிதங்கள் என அனைத்தும் காட்சிகளாய் மனதில் ஓடுகிறது. அதுவே இந்தப் புத்தகம் பெற்ற வெற்றியென நினைக்கிறேன்.

அவரது ஒவ்வொரு செயல்பாட்டிலும் 4-5 சிறுவர்கள் ஒட்டாமல் இருப்பதை ஆங்காங்கே சொல்கிறார். அது இயற்கையானதே அதை பதிந்தது மிக முக்கியமான ஒன்று. ஆனால் அதை சார்ந்து ஆசிரியரின் மன ஓட்டத்தை பதிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. ஒரு இடத்தில் சிறுவர்களை சற்றே கடிந்துக்கொள்கிறார். ஆனால் அடுத்த நிமிடத்தில் சிறுவர்கள் வேறு எதோ செய்ததும் அன்புடன் பழகிக்கொள்கிறார். இந்தச் சம்பவத்தை முழுவதும் பதிந்திட வேண்டும் என்று தோன்றுகிறது. அதிக சுதந்திரம் சிறுவர்களுக்கு தேவையில்லை என்பதை இந்த சமூகம் பெரிதாக நம்புகிறது. அந்த நம்பிக்கையால் குழந்தையை எப்பொழுதுமே தெரிந்தும் தெரியாமலும் கடிந்துக்கொண்டேயிருக்கிறது. அந்த மனநிலையை மாற்றுவதற்கு இதுபோன்ற சிக்கல்களை கையாளும் விதத்தைப் பற்றி முழுவதுமாக பேச வேண்டும். அது நிறைய நண்பர்களுக்கு உதவியாக இருக்கும்.

தோழியின் முயற்சிகளுக்கு மீண்டும் பெரிய நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். உங்கள் வகுப்புகள் தாண்டி அந்தப் பள்ளி முழுவதும் இதுப்போன்று மாறிட வேண்டும். மற்ற பள்ளிகளும் உங்களைப் பார்த்து மாணவர்கள் ஆர்வம் சார்ந்து இயங்கிட வேண்டும். அதற்கு இந்தப்புத்தகம் உதவும் என்று நம்புகிறேன். பெற்றோர் பார்வையிலிந்து புத்தகத்தை வாசிக்கும் போது ஆசிரியர்கள் சந்திக்கும் சவால்களையும் அதற்கான அவர்கள் செய்யும் முயற்சிகளையும் நன்றாக புரிந்துக்கொள்ள முடிகிறது.

 விதை முதல் விருட்சம் வரை என்று குழந்தைகளின் அனுபவ பதிவுகளை அழகாக தொகுத்து புத்தகமாக கொண்டு வரவேண்டும் என்று அன்புடன் தோழியிடம் கேட்டுக்கொள்கிறேன்.

இறுதியாக..இது யாருடைய வகுப்பறை? என்ற ஆயிஷா.நடராசன் கேள்விக்கு விடை தந்திருப்பதுப் போல் இருக்கிறது தலைப்பும் புத்தகமும். அதற்கு எனது சிறப்பு வாழ்த்துக்கள்.

Friday, February 12, 2016

தீனபந்து

கரும்புத் தோட்டத்திலே - ஆ!
கரும்புத் தோட்டத்திலே

கரும்புத் தோட்டத்திலே - அவர்
கால்களும் கைகளும் சோர்ந்து விழும்படி
வருந்து கின்றனரே! ஹிந்து
மாதர்தம் நெஞ்சு கொதித்துக் கொதித்துமெய்
சுருங்குகின்றனரே - அவர்
துன்பத்தை நீக்க வழியில்லையோ? ஒரு
மருந்திதற் கிலையோ? - செக்கு
மாடுகள் போலுழைத் தேங்குகின்றார், அந்தக் (கரும்புத்தோட்டத்திலே)

- பாரதி

இந்தப் பாடல் பிஜி தீவில் அவதிப்படும் இந்தியப் பெண்களின் நிலையைக் கண்டு என் தல (அதான்பா பாரதி) புதுச்சேரி கடலில் இரவெல்லாம் உறக்கமின்றி தவித்து மனம் வருந்தி பாடிய பாடல்.ஆங்கிலேய ஆட்சியிலிருந்த விலை அடிமை முறைக்கு எதிர்ப்பு வரவே , அவர்கள் அதனை ஒழித்துவிட்டதாகக் கூறு புதிய திட்டத்தை அறிமுகம் செய்தனர்.அதன் பெயர் ஒப்பந்த முறை திட்டம்.ஒப்பந்த முறையில் (Contract) நம்மவர்கள் வெளிநாட்டிற்கு அடிமைகளாய் அனுப்பப்பட்டனர்.அனுப்பப்பட்டனர் என்று சொல்வதை விட கடத்தப்பட்டனர் என்று சொன்னால் பொறுத்தமாக இருக்கும்.அதற்காக கங்கானிகள் இருந்தனர்.பொய் சொல்லி மக்களை கவர்ந்து அவர்களை அடிமைகளாய் நாடு கடத்துவது தான் இவர்களது வேலை.அப்படித் தான் பிஜி தீவிலுள்ள சக்கரை ஆலைகளுக்கு அடிமைகளாய் நாடு கடத்தப்பட்டனர்.அவர்களது துயரத்தை கேட்டுத் தான் பாரதி இவ்வாறு பாடியுள்ளார்.

பாரதியின் மனதில் இவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தியதற்கு நமது தீனபந்துவிற்கு(அதானே நம்ம தலைப்பு) ஒரு முக்கிய பங்கு இருக்கிறது.காந்தி அடிமைத்தனத்தை எதிர்த்து தென்னாப்பிரிக்காவில் போராட்டம் நடத்த , அதனைத் தொடர்ந்து கோகுலே இந்தியாவில் போராட்டத்தை துவங்குகிறார்.நிதி திரட்ட பல்வேறு இடங்களில் பேசுகிறார்.அப்படி அவரது பேச்சினை கேட்ட ஆங்கிலேயர் ஒருவர் தனது எதிர்கால சேமிப்பெல்லாம் இந்த போராட்டத்திற்கு உதவட்டும் என்று கொடுக்கிறார்.1915ல் கோகுலே இறக்க , அந்தப் போராட்டத்தை தனது கையில் எடுக்கிறார்.அவர் தான் நம்ம தீனபந்து.ஆங்கிலேயருக்கு தீனபந்து என்ற பெயரா? என்று வியக்க வேண்டாம்.அவரது இயற்பெயர் C.F.Andrew , அவரது உள்ளத்தினை அறிந்த காந்தி அவருக்கு தீனபந்து என்று பெயர் வைக்கிறார்.தீனபந்து என்பதற்கு ஏழைகளின் நண்பன் என்று பொருள்.

பிஜி தீவில் ஒப்பந்த கூலிகளாக சென்றவர்களுக்கு என்னென்ன பிரச்சனைகள் என்பதை  C.F.Andrews & W.W.Pearson இருவரும் நேரில் ஆய்வு 
C.F.Andrews
செய்தனர்.மக்களிடம் பேசி திரும்பியதும் உடனே அதனை "Report on Indentured Labour in Fiji - An independent Enquiry" புத்தகமாக வெளியிடுகின்றனர்.இந்தப் புத்தகம் இணையத்தில் கிடைக்கிறது.400+ பக்கங்கள் , முதல் 50 பக்கங்களை கடந்திருக்கிறேன்.கங்கானிகள் மூலம் மக்கள் எவ்வாறெல்லாம் ஏமாற்றப்பட்டிருக்கின்றனர்,அவர்களின் மனநிலை,ஏமாற்றம் என அங்குள்ள மக்களைப் பற்றின தகவல்களும் , தங்களது ஆய்வின் கருத்துகளையும் பதிந்திருக்கின்றனர்.இதனை வாசிக்கும் பொழுது எரியும் பனிகாடு  நாவலும் , 12 years a slave திரைப்படமும் ஏற்படுத்திய தாக்கம் நினைவிற்கு வந்தது.நான் வாசித்த வரை அதில் பிஜி தீவில் நமது மக்களின் மனநிலை எப்படியிருக்கிறது,அங்கு நடக்கும் குற்றங்களுக்கு என்ன காரணம்,அதனை பிஜி அரசாங்கம் எப்படி பார்க்கிறது,அங்கு நம் மக்கள் நல்லபடியாக வாழ என்ன வழி பற்றி அவர்களது ஆய்வு பேசுகிறது.

பிஜி தீவில் வட இந்தியர்களே முதலில் அதிகம் சென்றிருக்கின்றனர்,காலப்போக்கில் அவர்களது எண்ணிக்கை குறைய 
தென் இந்தியர்கள் சென்றிருக்கின்றனர்.ஹிந்துஸ்தானி தெரிந்தவர்களிடம் அதிகம் பேசியுள்ளனர் , ஹிந்துஸ்தானி தெரிந்த தமிழர்களுடனும் பேசியுள்ளனர்,ஹிந்துஸ்தானி தெரியாததால் தமிழர்களிடனும் மற்ற‌ தென் இந்தியர்களுடனும் பேச முடியாமல் போகிறது.இந்திய நிலப்பரப்பில் மதராஸ் மாநிலத்தில் தான் குறைந்த அளவு தற்கொலைகள் பதிவாகியுள்ளதாகவும் ஆனால் பிஜி தீவில் தற்கொலையில் அதிகமான எண்ணிக்கையில் மதராஸ் மாகாணத்தை சேர்ந்தவர்கள் இருந்திருக்கின்றனர்.இந்த ஆய்வில் எனக்கு மிகவும் முக்கியமாக‌ தோன்றியது இந்த வரிகள்...

under the existing system of indian labour immigration there is a great disproportion between number of males and females.That this disproportion is mostly responsible for the abnormal number of murders and kindred crimes among Indians.That the majority of those found guilty of such crimes are otherwise quite and law abiding;and the murders for which they are condemned to death,are not due to any murderous instinct in them,but really to sexual jealousy.

பாலியல் வறட்சியால் ஏற்படும் பொறாமையே அங்கு நடக்கும் குற்றங்களுக்கும் தற்கொலைகளுக்கும் காரணம் என்று ஆய்வில் சொல்கின்றனர்.இதை வாசிக்கும் போது தற்பொழுது நமது தேசத்தில் நடக்கும் பாலியல் குற்றங்களோடு ஒப்பிட்டுப் பார்க்க தோன்றுகிறது.அதோடு மட்டுமில்லாமல் மக்கள் தங்களது மதத்தை கைவிட்டதே இதற்கு மிக முக்கிய காரணமாக சொல்கின்றனர்.ஒருவனுக்கு ஒருத்தி என்பதே அங்கு இல்லை,அடிமைத் தனத்திலிருந்து வெளியில் வந்தவர்களும் அதனை பின்பற்றவில்லை, இதற்கெல்லாம் காரணம் மக்கள் இழந்த மத நம்பிக்கைகளே என்று கூறுகின்றனர்.ஆதலால் பிஜி அரசாங்கத்திற்கு மக்களின் மத நம்பிக்கைகள் மீது கவனம் செலுத்த சொல்கின்றனர்.இந்துக்களை கசாப்பு கடைகளுக்கு அனுப்புவதை தவிர்த்துவிடுங்கள் என்று பரிந்துரைக்கின்றனர்.ஒப்பந்த ஊழியர்கள் நலமாக வாழ கல்வி,மதம்,ஆண்-பெண் எண்ணிக்கையில் கவனம் செலுத்த வேண்டும் என்று சொல்கின்றனர்.இவர்களது ஆய்வு ஆங்கிலேயர் மற்றும் பிஜி அரசாங்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்திருக்கும் என்று புரிந்துக்கொள்ள முடிகிறது. 

மக்களுக்கு அங்கு உதவ போதுமான மருத்துவ வசதிகள் இல்லை , மதம் சம்மந்தமான எந்தவித தொடர்பும் இல்லை ஆதலால் இதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் . கல்வி என்றதே அங்குள்ள சிறுவர்களுக்கு கிடையாது ஆங்காங்கே கல்விற்கு உதவ சில கிறுத்துவ அமைப்புகள் செயல்பட்டிறுக்கின்றன ஆனால் அவை மக்களை அவரவர் மதத்தினை பின்பற்ற தடையாக இருக்கலாம்,ஆதால் பிஜி அரசாங்கம் இம்மக்களின் கல்வியினைப் பற்றி கவலைப்பட வேண்டும் என்று ஆய்வு கூறுகிறது .மக்களின் சுய நெறிமுறைகளை மீட்டெடுப்பதின் அவசியத்தையும் அதற்கு ஒரே வழியாக அமைய மக்கள் தங்களது மதத்தினை பின்பற்ற வேண்டும் என்று வழியுறுத்துகிறார்கள்.பெரியார் ஒருப்பக்கம் மதம் மனிதனை வளர்க்கவில்லை என்று குற்றம் சாட்டுக்கின்றார் , மறுப்பக்கம் மனிதன் தனது நிலைப்பாட்டை இழந்து தவிப்பதற்கு காரணமாக மதமில்லாததை கூறுகின்றது வரலாறு.

தேடலில் ஆர்வமுள்ளவர்களுக்கு வரலாறு ஒரு சிறந்த ஆடுகளமாகவே இருக்கிறது.பாரதிப் பற்றி வாசிக்க ஆரம்பித்தேன் அது என்னை தீனபந்துவிடம் வந்து சேர்த்திருக்கிறது.வரலாற்றை தாறுமாறாக பள்ளி வயதில் திட்டியவன் நான் , ஆனால் தற்பொழுது வரலாற்றுடன் தொடந்து பயணம் செய்ய ஆயத்தமாக இருக்கிறேன்.

வெறும் 50 பக்கம் வாசித்துவிட்டு தீனபந்துவைப் பற்றி இன்று அவசர அவசரமாக எழுத காரணமிருக்கிறது.இன்று தீனபந்துவின் பிறந்தநாள்.











Thursday, March 5, 2015

யார் பாரதி?

சமூகவலைதளங்களை ஆயிரம் நொட்டை சொன்னாலும் சில நல்லதும் இருக்கத்தான் செய்கிறது , அதில் முக்கியமாக நான் கருதுவது மறைந்த பல தலைவர்களைப் பற்றி அடிக்கடி நினைவுபடுத்திக் கொண்டேயிருப்பது தான்.தலைவர்களின் பிறந்த / இறந்ததினத்திலோ அல்லது வரலாற்றின் முக்கிய நினைவுகளின் தினத்திலோ அவற்றை பற்றின‌ பதிவுகள் வருகின்றது.சுவாரஸ்யமான சம்பவங்கள், சர்ச்சைகள், ஆதரவுகள்,எதிர்ப்புகள் என்று அன்றைய தினம் கலைகட்டிவிடுகிறது.அப்படித் தான் பாரதி பற்றின "யார் பாரதி?" என்ற யூடுயுப் வீடியோ பகிரப்பட்டது.அதன் வழியே வ.ரா எழுதிய புத்தகம் பற்றியும் , யதுகிரி அம்மாள் எழுதிய பாரதி நினைவுகள் என்ற புத்தகம் பற்றியும் தகவல்கள் கிடைத்தது.

இரண்டு புத்தகமும் இணையத்திலே கிடைத்தும் விட்டது.அப்புறம் என்ன ?.. வீடியோ பார்த்த ஆர்வத்தில் இரண்டு புத்தகங்களையும் back to back படித்துவிட்டேன்.ஒருவரின் சரித்திரத்தினை வாசிக்கும் போது அதில் அவரது புகழ்ச்சி ஓங்கியிருக்கும் பட்சத்தில்  ஒருவித‌ சலிப்பினை ஏற்படுத்திவிடும்.அதற்கு பயந்தே சரித்திர நூல்களை தவிர்த்துவிடுவது வழக்கம்.ஆனால் இந்த இரண்டு புத்தகங்களிலும் புகழ்ச்சியை தேவையான இடத்தில் மட்டுமே சந்தித்தேன்.பாரதி பற்றின விமர்சணங்களை இருவரும் பதிந்திருந்தனர்.இரண்டுமே பாரதியின் புதுச்சேரி வாழ்வினை பற்றியது தான்.திரைப்படங்களில் மட்டுமே பாரதிப் பற்றின செய்திகளை அறிந்தவன் என்றதால் எனக்கு இந்தப் புத்தகங்கள் மிகவும் முக்கியமானவை.

முதலில் வாசித்தது யதுகிரி அம்மாளின் "பாரதி நினைவுகள்" தான்.யதுகிரி - பாரதியின் நண்பரது மகள்.பாரதி பாடல்களை இயற்றியதும் அதனை நண்பர்களிடம் பாடி காட்டுவதை வழக்கமாக வைத்திருக்கின்றார் , அப்பொழுது யதுகிரியையும் அழைத்து பாடல்களை பாடி அதனை திரும்ப பாடச் சொல்லி ரசிக்கின்றார்.இவ்வாறு பாடல்கள் பிறந்த கதைகளையும்  , தனக்கும் பாரதிக்கும் நடந்த விவாதங்கள் பற்றியும் ,  பாரதிக்கும் செல்லம்மாளுக்கும் இடையே நடக்கும் சின்ன சின்ன சண்டைகளைப் பற்றியும் , செல்லம்மாளின் கவலைகளையும் இந்தப் புத்தகத்தில் பதித்திருக்கின்றார்.யதுகிரிக்கும் பாரதிக்கும் நடந்த உரையாடல்களே அதிகம் இருப்பதால் மிக எளிய மொழி நடையாக இருந்தது.ஆரம்ப காலங்களில் தினமும் அவர்கள் கடற்கரைக்கு செல்கின்றனர்,அப்பொழுது நடக்கும் உரையாடல் , செல்லம்மாளுக்காக பாரதியிடம் சண்டைப் பிடிப்பது , திருமணம் நிச்சயம் ஆனதும் பாரதியை சந்திப்பதை தவிர்க்கும் போது பாரதி சொன்ன வார்த்தைகள் என பல சுவாரஸ்யமான உரையாடல்கள் இருக்கின்றது.அதில் எனக்கு முக்கியமாக தோன்றிய ஒரு உரையாடல் , யதுகிரி பள்ளிக்கு சென்று பயில வேண்டும் என்று விரும்புகின்றார் , வீட்டில் மறுத்து விட்டனர்.ஆதலால் மிக வருத்தத்தில் இருக்கும் அவரை பாரதி தேற்றுகிறார்.அப்பொழுது பாரதியும் யதுகிரியின் ஆசைக்கு எதிராகவே பேசுகின்றார்.அந்த எண்ணம் ஆங்கிலத்தின் மீது இருந்த வெறுப்பாக இருந்த போதும் எனக்கு பெண்கள் பள்ளிக்கு செல்வது சரியல்ல என்ற எண்ணமாகவே தோன்றியது(இது எனக்கு ஏற்பட்ட எண்ணமே, தவறாக இருப்பின் மன்னிக்கவும்).

பாரதியின் மெளன விரதமும் , இறப்பினை கடந்து விட நினைக்கும் அவரது மன ஓட்டமும் நாம் அதிகம் தெரிந்துக்கொள்ளாதவை.அவை இரண்டையும் வாசிக்கும் போது மனதினுள் ஒரு வருத்தம் தோன்றத்தான் செய்கின்றது.பாடல்களை பாரதியே மெட்டெடுத்து பாடியிருக்கின்றார்.தனது சுற்றத்தில் அவர் கேட்ட நாட்டுபுற பாடல்களின் மெட்டு,சில french பாடல்களின் மெட்டு என அசத்தியிருக்கிறார்.இப்பொழுதிருக்கும் வசதிகள் அவரது காலத்தின் இருந்திருந்தால் அனைத்தையும் அவரது குரலிலே நாம் எப்பொழுதும் கேட்டிருக்கலாம்.

என்ன சொல்ல...நமக்கு கொடுத்து வைத்தது அவ்வளவு தான்...

குடும்ப சிக்கல்களில் தவித்த பாரதியை பார்த்த எனக்கு வ.ரா எழுதிய புத்தகம் வேறொரு பாரதியை காட்டியது.வாசிப்பின் துவக்கத்தில் தகவல்கள் எளிமையாக இருப்பதாக தோன்றியது , ஆனால் போக போக ஏகப்பட்ட தகவல்கள் .பாரதியின் நண்பர்களைப் பற்றியும்,பாரதியின் பழக்க வழக்கங்கள் பற்றியும்,பாரதியின் ஆசைகள் என‌ நிறைய பேசுகிறார் வ.ரா,பாரதியிடம் தனக்கும் பிடிக்காத பழக்கமாக‌ அவர் கூறுவது "பாரதியின் எச்சில் துப்பும் பழக்கம்".அதனை அவரது நண்பரது வீட்டிலும் செய்கின்றார்.ஆனால் அந்த வீட்டில் அவருக்கு எந்தவித எதிர்ப்பும் இல்லை.அவர்கள் எதுவும் சொல்லாமல் சுத்தம் செய்கின்றனர்.அவர் வேறு ஜாதியை சேர்ந்த ஒருவருக்கு பூணல் அணிவித்து பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் , பாரதியை தேடி போலிஸ் வட்டமிட்ட சம்பவம்,புயலால் பாதிக்கப்பட்ட ஊரினை மீட்டெடுக்க துடிக்கும் நிகழ்வுகள்,காந்தியை சந்திக்கும் நிகழ்வு,காங்கிரஸ் மாநாடு  என அனைத்தையும் வாசிக்கும் போது பாரதி நம் மனதில் கண்டிப்பாக  சம்மணமிட்டு அமர்ந்துவிடுவார்.

பாரதியின் சமுதாய ஈடுபாடுகள் , அவரது நட்பு வட்டங்கள்,அவரது பத்திரிக்கை அனுபவங்கள்,போலிஸ் எதிர்ப்பு , அவரது கோபம்,ஆதங்கம்,எழுத்து,படைப்பு,பாடல் என அடுக்கிக்கொண்டே போகின்றார் வ.ரா.பாரதியின் உருவமைப்புகளை அழகாக வர்ணிக்கிறார் , மிக ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் "பாரதி வழுக்கை" என்பது தான்.எத்தனை வருடங்களாக பாரதியின் புகைப்படத்தை பார்த்திருக்கிறேன்.ஆனால் அந்த முண்டாசினுள் இப்படி ஒரு ரகசியம் இருப்பதாக நான் யோசித்ததேயில்லை.என்னை பொறுத்த வரை இது ஒரு முக்கியமான தகவல்.

பாரதிக்கு நீச்சல் அடிக்க வேண்டுமென்று ஆசையாம் , ஆனால் நண்பர்கள் கடலில் நீந்த இவர் மட்டும் கரையிலிருந்து ஏக்கமாக பார்ப்பாராம்.வ.வே.சு ஐயரிடம் செஸ்,சீட்டு விளையாட்டுகளில் போட்டியிடுகின்றார்.செஸில் அவர் வெற்றி பெறும் போது மனுசன் ஏகப்பட்ட சந்தோசத்தில் குதிப்பாராம்.பாரதி கைதான பின்பு , ஆங்கிலய அரசிற்கு மன்னிப்பு கடிதம் எழுதி தான் வெளியே வருகின்றார்.அதன் விமர்சணங்களை தற்பொழுதும் இணையத்தில் வாயிலாக‌ பார்க்க முடுகிறது.ஆனால் அப்பொழுதைய சூழலில் பாரதி அவ்வாறு செய்தததை தவறாக எண்ண மனம் மறுக்கிறது,அதற்கு இந்தப் புத்தகமும் ஒரு முக்கியமான காரணம்.

பாரதி யானையால் தாக்கப்பட்டார் என்பது நாம் அறிந்ததே,ஆனால் அப்பொழுது அவரை குவளைக் கண்ணன் என்பவர் தான் காப்பாற்றியிருக்கிறார்.இவரைப் போன்ற நிறைய நபர்களை இரண்டு புத்தகங்களும் நமக்கு அறிமுகம் செய்கின்றது.

அது ஒரு நீண்ட பட்டியில் , அதில் சில முக்கியமான நபர்களின் புகைப்படங்கள் இந்த இணையத்தில் கிடைக்கிறது.இதில் பாரதியின் பல படைப்புகளும் கிடைக்கிறது.பாரதியின் சுய விமர்சணமாக கருதப்படும் பாரதியின் சின்னச் சங்கரன் கதை திருடப்பட்டு விட்டது , அதில் நான்கு அத்தியாயம் மட்டுமே தற்பொழுது நம்மிடம் இருக்கின்றது.இதுப் போன்ற அறிய பாரதி படைப்புகள் இந்த தளத்தில் கிடைக்கிறது.

அடுத்து இந்த தளத்தினை வேட்டையாடலாம் என்றிருக்கிறேன்....யாராவது வரீங்களா?



Sunday, January 25, 2015

பலிக்குமா இந்த பகல் கனவு

பகல் கனவு - ஜிஜுபாய் பதேக்கா [தமிழில் - சங்கரராஜுலு]
வெளியீடு - நேஷனல் புக் டிரஸ்ட் [இணையத்தில் கிடைக்கிறது]

இந்தப் புத்தகத்தை வாசித்து முடித்ததும் தான் ஆசிரையரைப் பற்றி தேடினேன்.இந்தியாவில் Montessori கல்வி முறையை அறிமுகப்படுத்தியது ஜிஜுபாய் பதேக்கா அவர்கள் தான்.Montessori கல்வி முறையைப் பற்றி போதுமான புரிதல் எனக்கில்லை.விளையாட்டு மூலம் சொல்லித் தருவார்கள், வழக்கமான வகுப்பு முறைகளுக்கு பதிலாக Mixed age வகுப்பு முறைகள் இருக்குமென‌ இணையத்தில் படித்திருக்கிறேன்.பெங்களூரில் நிறைய Montessori  க்கள் இருக்கின்றன (அது உண்மையிலே Montessori  யா என்பதை இனிமேல் தான் விசாரிக்க வேண்டும்).எனது மகளுக்காக பள்ளிகளை விசாரித்தப் பொழுது சாதாரண பள்ளிகளை விட அசாதாரண கட்டணங்கள் இருந்ததால் விட்டுவிட்டேன்.


இந்தப் புத்தகம் Montessori கல்விமுறையின் தாக்கத்தில் தான் எழுதியது என முன்னுரையில் படித்தேன்.நமது சூழலிற்கு தகுந்தாற் போல் அந்த கல்விமுறையை மாற்றி அதனை 4ம் வகுப்பில் செயல்படுத்தி பார்க்கும் ஒரு அசிரியரியரின் கனவு தான் இந்த "பகல் கனவு".கதையின் நாயகன் ஆசிரியர் தான்.அவர் , மனப்பாடம் செய்யும் கல்வி முறையிலிருந்து விலகி நிற்க முயற்சிக்கிறார்.மாணவர்களுக்கு எது முக்கியம் ? முழுமையான புரிதலா அல்லது தேர்வின் மதிப்பெண்களா ? இது தான் அவரது கேள்வி.மதிப்பெண்கள்,வேலை,சம்பளம் என்ற பெரும்பாலோரின் போக்கை கேள்வி கேட்பது போல் இருந்தது.புரிதல் தான் கல்வியின் நோக்கமாக இருந்திருக்க வேண்டும் என்பது இந்த ஆசிரியரின் ஆசை மட்டுமல்ல‌.அது எல்லோரது ஆசையும் கூட."புரிந்து படி" என ஆசிரியர்,பெற்றோர்,அறிஞர்கள்,அனைவரும் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.ஆனால் உண்மையில் அதை செய்வது கடினமாக தான் இருந்தது.தேர்விற்காக படிக்கும் என்னைப் போன்ற கட்சியினர் அப்பொழுது வேண்டுமானால் புரிந்துப் படிக்கலாம் , ஆனால் தேர்வு முடிந்ததும் காற்றில் கரைந்து விடும் என்பது தான் உண்மை.ஏனென்றால் அதன் பயன்பாடு விளங்கியதேயில்லை.அப்படி ஒரு basement , பள்ளியிலிருந்தே அமைந்துவிட்டது.Rhymes லிருந்து ஆரம்பமாகிறது நமது கல்விதிட்டங்களின் ஓட்டைகள்.எதற்காக rain rain go away , london bridge is falling down,hot cross bun போன்ற பாடல்கள் இன்றும் மாறாமல் உள்ளது? இந்த கேள்வியை யாரிடம் கேட்பது என்று விளங்காமல் தான் நாம் எல்லாரும் இருக்கின்றோம்.


கல்கி,சாண்டிலியன் போன்றோரின் எழுத்துக்கள் நம்மில் பலரிடம் ஏற்படுத்திய வரலாற்று ஆர்வத்தை ஏன் பாடப்புத்தகத்தால் ஏற்படுத்த முடியவில்லை.அவர்கள் கற்பனையை கலக்கின்றார்கள் என்றாலும் உண்மையையும் நம் மனதில் பதிய செய்துவிடுகிறார்கள் என்பதை ஒற்றுக்கொள்ளதான் வேண்டும்.வரலாற்றைப் போல ஒரு சுவாரஸ்யமான பாடம் இல்லை என்று எனக்கு இப்பொழுது தோன்றுகிறது.வரலாற்றை சுலபமாக கதையாக சொல்ல முடியும் ஆனால் வகுப்புகள் அப்படி இருப்பதில்லை.அவை வருடங்களாகவும்,வாயினுள் நுழையாத பெயர்களாகவும் தான் இருக்கிறது

இதே மனப்போக்கில் தான் இந்தக் கதையின் நாயகனும் இருக்கிறார்.அவர் தனது வகுப்பில் முதல் 3-4 மாதத்திற்கு வெறும் கதைகளை தான் சொல்கிறார்.கற்பனைகள் மூலம் மாணவர்களை கதைக்குள் இழுக்கிறார்.கதைகளை மெல்ல மெல்ல அவர்கள் மனதில் பதிக்கின்றார்.கதைகளை நாடகமாக உருமாற்றுகிறார்.பின்னர் கதை உண்மையை விட்டு எவ்வளவு தூரம் மாறியிருக்கிறது என்பதை யோசிக்கிறார்.அடுத்த நாள் உண்மை கதையை சொல்கிறார் , ஆனால் மாணவர்கள் ஏற்க மறுக்கின்றனர்.5000 குதிரைகள் வந்த இடத்தில் 50 எனும் மாற்றத்தைக் கூட மாணவர்கள் கண்டுபிக்கின்றனர் என்பது அவர்கள் எவ்வளவு தூரம் கதைக்குள் இருக்கின்றனர் என்பதை ஆசிரியருக்கு உணர்த்துவதாக இருக்கிறது.மெல்ல மெல்ல உண்மையினை கதைக்குள் கொண்டு வருவதற்கு அவருக்கு சிலக் காலம் தேவைப்படுகிறது.

மாணவர்கள் சரியான வழியில் இழுந்து செல்வதாக அவருக்கு முழு நம்பிக்கை பிறந்ததும் , ஒவ்வொரு கட்டமாக நகர்கிறார்.அவரை கிண்டல் செய்த மற்ற வகுப்பாசிரியர்களும் கவணிக்க செய்யும் சந்தர்ப்பமொன்று பள்ளிவிழாவில் அவருக்கு அமைகிறது.எப்பொழுதும் நடக்கும் அபத்தத்தை எதிர்த்து தனியாக ஒரு நாடகம் போடுகின்றனர்.எந்த அலங்காரமும் இல்லை,மனனம் செய்யும் வசனமுமில்லை . அவர்கள் அன்றாடன் பேசிய கதைகள்,அன்றாடம் அவர்கள் வகுப்பில் நடித்த நாடகங்களையே அங்கு அரங்கேற்றம் செய்தனர்.தெளிவான நடிப்பும்,வசனங்களும் அங்கு அனைவரையும் ஆச்சரியப்பட செய்கிறது.அதுவே அனைவரது கவனத்தையும் ஈர்க்கிறது.

கல்வி நிர்வாகி நாயகனின் முறை சரியானது என்பதை உணர்ந்து அவரிடம் விசாரிக்கும் போது , இலக்கண வகுப்புப் பற்றி இருவரும் பேசுகின்றனர். அவரை மிகவும் பாராட்டி வேண்டிய உற்சாகத்தை தருகிறார் கல்வி நிர்வாகி.ஆண்டு இறுதி தேர்வில் அவரது வகுப்பு மாணவர்கள் என்ன செய்கின்றனர் என்பதே மீதி கதை.எனக்கு அந்த இலக்கண விளக்கம் மிகவும் பிடித்துவிட்டது.இந்த முறையை நாமும் நமது வீட்டில் முயற்சி செய்து பார்க்கலாம் என தோன்றியது.பள்ளியில் மாற்றங்களை எதிர்ப்பார்க்கலாம் ஆனால் நடக்குமென சொல்ல முடியாது.ஆனால் வீட்டில் கண்டிப்பாக நாம் முயற்ச்சிக்கலாம் , என்ன...கொஞ்சம் ஆர்வமும் அதற்கான உழைப்பும் தேவை.அதற்கு இந்த புத்தகம் உறுதுணையாக இருக்கும்.

இந்தப் புத்தகம்  1931 ல் குஜராத்தியில் எழுதியது.அப்பொழுதே கல்விமுறையின் போக்கை கண்டு மனம் வருதிருக்கிறார் என்பது வியப்படையச் செய்கிறது. அப்பொழுது அவர் கண்ட கனவு , 80 ஆண்டுகள் கடந்தும் கனவாகவே இருப்பதால் தான் "பகல் கனவு" என்று பெயர் வைத்தாரோ..?



Sunday, January 11, 2015

2014 - வாசிப்பு - தமிழ்மகன்

31.வெட்டுப்புலி 


தமிழ்மகன் எழுத்தில் நான் வாசித்த முதல் புத்தகம்.வெட்டுப்புலி தீப்பெட்டியை சிலர் பாத்திருக்கலாம் , அந்த தீப்பெட்டியின் மீது ஒட்டிருக்கும் படத்தினை பற்றின தேடலில் தான் இந்த நாவல் துவங்குகிறது.அந்தப் பரம்பரையில் வந்தவன் தான் இதை தேடுகிறான்.அவனது தேடல் வழியே இரண்டு தலைமுறைகளை சொல்கிறார்.சென்னை - செங்கல்பட்டு என கதை காலத்தால் ஏற்பட்ட இந்த நகரங்களின் மாற்றங்களை சொல்கிறது.அரசியல் மற்றும் சினிமாவின் வளர்ச்சியையும் சத்தமில்லாமல் சொல்கிறது.ஆரம்பத்தில் கதையில் ஏகப்பட்ட‌ கதாப்பாத்திரங்கள் நம்மை குழப்பினாலும் , போக போக நாவலுடன் பயணிக்க முடிகிறது.முக்கியமாக எனக்கு தாக்கத்தை ஏற்படுத்தியது பெரியார் பற்றின நிகழ்வுகள்.பெரியார் பின்பற்றியவரின் வாழ்வை சொல்வதன் மூலம் பெரியாரை பற்றி சொல்வது தான் ரசிக்க வைத்தது.பெரியார் வாழ்வினை தெரிந்துக்கொள்ளும் ஆசை வந்திருக்கிறது.வாசிப்பவர்களுக்கு கண்டிப்பாக தங்களது வாழ்வில் சந்தித்த தி.க நபர் வந்துச் செல்வார்.நமது கலாச்சாரத்தில் சாமியில்லை என சாதரணமாக சொல்ல முடியாது.அவர்கள் சந்திக்கும் இக்கட்டாண சூழ்நிலைகளை அழகாக சொல்கிறார்.குறிப்பாக துனைவியுடன் ஏற்படும் மனக்கசப்புகளை.

அதெயெல்லாம் வாசிக்கும் போது எனது தாத்தா தான் ஞாபத்தில்  வந்தார்.அவரும் திக தான்.சாமி கும்பிடுவதை வீட்டில் முற்றிலும் தடை செய்திருந்தார்.திருட்டுத்தனமாகத் தான் பாட்டி சாமி கும்பிடுவார்.அவர் கண்ணில் பட்டுவிட்டாள் அனைத்தும் வீட்டை விட்டு பறக்குமாம்.ஆனால் நாங்கள் இருந்தப் போதெல்லாம் கொஞ்சம் சாமி கும்பிடுவதை அனுமதித்துவிட்டார்.சாமி கும்பிடுவதை அவரால் ஏற்றுக்கொள்ளவே முடியாது , ஆனால் பாட்டியால் சாமி கும்பிடாமல் இருக்க முடியாது.வாசிக்கும் போதெல்லாம் இதே நினைவு தான்.என்னடா ஒரே தாத்தா புராணம் பாடுகிறான் என நினைக்க வேண்டாம்,நீங்களும் வாசித்துப் பாருங்கள் நீங்கள் எனைப் போல் இதேப் போன்று ஒரு புராணத்தை கண்டிப்பாக பாடுவீர்கள்.

இதை தவிற நான் ரசித்த ஒன்று , நாவலில் போகிற போக்கில் இரண்டு காட்சிகள் வரும்...சிறு வயதில் நான் அடிக்கடி கண்ட காட்சிகள் அது..கடைசி 10 வருடங்களில் அந்த காட்சிகளை நான் கவனத்ததில்லை...
1. தோடு , மூக்குத்திக்கு பதிலாக சிலர் ஈர் குச்சி குத்தியிருப்பார்கள்.சிறு வயதில் இந்த காட்சியை நான் அடிக்கடி பாத்திருக்கிறேன்...
2.கூரை வழியாக வெயில் தரையில் வட்டம் வட்டமாக விழும் காட்சி...
இது ஒன்றும் அவ்வளவு பெரிய விஷயம் இல்லை என்ற போதும் , வாசித்ததும் அந்தக் காட்சிகள் மனதிற்குள் வந்து வந்து போனது...


32.ஆண்பால் பெண்பால் 


ஒரு வாசகனுக்கு புத்தகத்தின் முன்னுரை எந்த அளவிற்கு முக்கியமானது என்று எழுதுபவர்கள் யோசிப்பதுண்டா ?.முன்னுரையில் இலக்கணம் எனக்கு தெரியாது ஆனால் வாசகனாக நான் முன்னுரையில் எதிர்ப்பார்ப்பது புத்தகத்தின் பற்றின மெல்லிய அறிமுகத்தை மட்டும் தான்.ஆனால் அப்படிப்பட்ட முன்னுரை அரிதாகத்தான் வருகிறது.ஆசிரியரைப் பற்றியும் அந்தப் புத்தகத்தினைப் பற்றியும் ”மானே தேனே பொன்மானே” என நிரப்பியதாகத் தான் தோன்றுகிறது.
வாசிப்புப் பழக்கம் ஆரம்பமான நாட்களில் எனக்கு வெறும் முன்னுரை மூலம் அறிமுகமான புத்தகம் தான் எஸ்.ரா வின் துணையெழுத்து.அந்த முன்னுரை எனக்கு ஞாபகமில்லை ஆனால் அந்த முன்னுரை தான் என்னை அந்தப் புத்தகத்தை வாங்க வைத்தது என சொல்லலாம்.எனக்கு மிகப்பிடித்த புத்தகப் பட்டியலில் ஒரு முக்கியமான இடம் இந்தப் புத்தகத்திற்கு உண்டு.ஆனால் , அதன் பிறகு எந்த முன்னுரையும் என்னை ஈர்க்கவேயில்லை.
சில முன்னுரைகள் கதையின் முக்கியமான திருப்பங்களை போட்டு உடைத்துவிடுகின்றன.சில முன்னுரைகள் கதாப்பாத்திரங்களை விளாவாரியாக வர்ணிக்கின்றன.சில,படைப்பாளியை பாராட்டுவதிலே முடிந்துவிடுகிறது.கதையின் தளத்தையோ,கதையின் காலத்தை பற்றியோ,கதைக்குள் நுழைவதற்கு முன் கிடைக்க வேண்டிய அறிமுகத்தையோ அவை தருவதேயில்லை.முன்னுரைகளை பாதி நேரம் தவிர்க்கவே நேரிடுகிறது.
பா.சிங்காரத்தின் “புயலிலே ஒரு தோணி” என்ற புத்தகம்.அதன் முன்னுரை பக்கங்கள் பல செல்லும்.அந்த நாவலை படிப்பதற்கு நிறைய அறிமுகங்கள் தேவை.கூகுள் செய்தே அந்த நாவலைப் படித்தேன்.வாசிக்கும் பொழுது அந்தக் காலகட்டத்தின் தலைவர்கள்,கதை நடக்கும் நாட்டின் வரைப்படம் என அறிமுகங்கள் பல தேவைப்படும்.இந்தத் தகவல்களைப் பற்றி துளியும் பேசவில்லை அந்த முன்னுரை.உண்மையில் அந்த முன்னுரை எனக்கு சலிப்பையே ஏற்படுத்தியது.
முன்னுரையைப் பற்றின அபிப்பிராயமே எனக்கு மாறிவிட்டது.அது எழுத்தாளரை பாராட்டுவதற்காக பயன்படுத்தப்படும் இடமாகவே எனக்கு தோன்றியது.வாசகனாகிய எனக்கும் அதற்கும் எந்த உறவும் இருப்பதாகவே தோன்றவில்லை.முன்னுரை எழுதுபவரும் எழுத்தாளரும் பேசிக்கொள்ளும் இடமாகவே தோன்றியது.அப்படியிருந்த என் மன்நிலையை ஒரு முன்னுரை மிகவும் ஈர்த்துவிட்டது.படித்த முதல் சில வரிகளிலே வாசகனுக்காக எழுதியது என தோன்றியது.நான் அடுத்து படிக்க வேண்டிய புத்தகம் இதுவென மாற்றியது.தமிழ்மகனின் ஆண்பால் பெண்பால் நாவலின் முன்னுரை தான் அது.அந்த முன்னுரையை எழுதியது தமிழ்மகன் தான்.வாசகனை தன் வசம் இழுப்பதற்காகவே எழுதப்பட்டதாக அது அமைந்திருந்தது.கதையின் தளத்தையும் , கதாப்பாத்திரங்களையும், கதையின் சிக்கலையும் எந்தவித திருப்பங்களையும் உடைக்காமல் அறிமுகம் செய்கிறார்.கதையின் காலக்கட்டத்தையும் , கதைக்கு சம்மந்தமான சரித்திர தகவலையும் அறிமுகம் செய்து வாசகனை கைப்பிடித்து கதையின் வாசலிற்கு கொண்டு சேர்க்கிறார்.எனக்கு பிடித்த முன்னுரைகளில் கண்டிப்பாக இந்த முன்னுரை இடம்பெறும்.

Men are from Mars , Women are from venus என்று ஒரு புத்தகம் இருக்கிறது . திருமணம் நிச்சயம் ஆனதும் நண்பர் ஒருவர் பரிசாக தந்தது.என் மனைவியை புரிந்துக்கொள்வதற்காக,ஆனால் உண்மையில் எனக்கு அந்தப் புத்தகம் செம மொக்கையாக இருந்தது.இதை செய் அதை செய் என பெரும் அபத்தமாக தோன்றியது.தமிழ் மகனின் ஆண்பால் பெண்பால் புத்த‌கமும் இதே களத்தில் தான் பயணிக்கிறது ஆனால் மிகவும் சுவாரஸ்யமாக செல்கிறது.ஆனால் பிரிந்திருப்பவர்களின் கதை என்பதால் இதை திருமணம் நிச்சயமானவர்களுக்கு தர முடியாது என நினைக்கிறேன் , ஆதலால் அவர்களுக்கு அதே ஆங்கில புத்தகம் தான்.அவர்களை காப்பாற்ற யாராலும் முடியாதுப் போல.விவாகரத்து ஆன அவர்கள் தங்களது பிரிவை அவரஅவர் பார்வையில் பதிவது தான் இந்தக் கதை.அவர்களது கதையில் மிகவும் முக்கியமான ஒரு கதாப்பாத்திரம் எம்.ஜி.ஆர் . எப்படியென படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.சில இடங்களை வாசிக்கும் போது நமது ஈகோ எதிரே காட்சியாகும்.ஆசிரியரின் வெற்றி இதுவேயென நான் சொல்வேன்.முடிவை முன்னதாய் சொல்லிவிட்டு துவங்கினாலும் ஒரு சந்தோஷமான முடிவை எதிர்ப்பார்த்தே கடைசிப் பக்கத்தை புரட்டினேன்.ஆனால் ஆசிரியர் ஏமாற்றிவிட்டார்.



மற்றப் பதிவுகள்








Thursday, January 8, 2015

2014 - வாசிப்பு - இன்னும் சில‌

26.தாகூர் சிறுகதைகள் 


தாகூர் சிறுகதைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில சிறுகதைகளின் தொகுப்பு.இவரது கதைகளில் ஒரு கதாப்பாத்திரம் அதிகமாக வருகிறது.அது அவரது ஊரிலுள்ள நதி தான்.அந்த நதியின் போக்குவரத்துக்கள்.மெத்ராஸ் பட்டிணம் படத்தில் பார்த்ததுப் போல நதியினை மக்கள் தங்களது போக்குவரத்திற்கு உபயோகப்படுத்திருப்பதை நிகழ்வுகளாக அவர் சொல்லும் போது அதன் பிரமாண்டத்தை உணர முடிகிறது.அவருக்கும் அந்த நதியின் பாதிப்பு அதிகமாக இருந்திருக்கும் போல அதான் அவரது எல்லாக்கதைகளிலும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நதியினை குறித்து பேசுகிறார்.ஒரு கதையில் ஆத்தோரத்திலுள்ள ஒரு பெரிய கல் அதான் ஒரு கதையை சொல்கிறது , அதுவும் ஒரு விதவையின் கதையை.ஒரு பெண்ணின் வாழ்வை , நதியோடு அவளது சீண்டலை , அவளது துடிப்பை , அவளது ஆராவாரத்தை , இத்தனையுமின்றி நீண்ட பிரிவிற்கு பின் வாழ்வின் சோகத்தையும் தனிமையையும் மட்டும் சுமந்து அவள் வருகிறாள் , அந்தக் கல் அவளை மீண்டும் சந்தித்த சந்தோஷத்திலிருக்கு அவள் தனது வாழ்வின் முடிவை தேடிக்கொள்வாள் என முடிகிறது.கதையை யாரோ சொல்வதுப் போலவே இருக்கும் முடிவில் தான் அது அந்தக் கல் என்பதே தெரியும்.நான் மிகவும் ரசித்த சிறுகதை.

தாகூரின் படைப்புலகத்திற்கு ஒரு அறிமுகம் கிடைத்ததாக இருந்தது


27.லிண்ஷேலோகன் w/oமாரியப்பன் - வா.மணிகன்டன்


சிறு சிறு கதைகளாக 25 கதைகள் , ஒவ்வொரு கதைகளும் 2-3 பக்கங்களே.”வாமா மின்னல்..” என்பதை மனதில் வைத்துத் தான் மின்னல் கதைகள் என்று sub-title வைத்தாரோ என்னவோ..? கதை துவங்குவதும் , நம்மைக் கடந்து செல்வதும், முடிவதும் மின்னல் போல இருக்கிறது.இந்த மின்னல் கதைகள் வாசிப்புப் பழக்கம் இல்லாதவர்களுக்கும் படிக்க ஏதுவாக இருக்கும்.அப்போ வாசிப்புப் பழக்கம் இருக்கிறவர்களுக்கு எப்படி இருக்கும்னு நீங்க கேட்கிறது என் காதில் விழாமலில்லை…

சிறுகதைகள் வாசிக்கும் போது ,அந்தக் கதாப்பாத்திரங்கள் நம்முடன் பயணிப்பது போன்ற அனுபவம் இதில் சற்று குறைவாக எனக்குத் தோன்றியது.எனது பள்ளி,கல்லூரி நினைவுகளை தூண்டியபோதும் அத்துடன் பயணம் செய்யப் போதுமான இடம் இல்லாது போலத் தோன்றியது.

படித்து முடித்த இரு தினங்கள் ஆகிறது ,தற்பொழுது நினைவில் இருக்கும் கதைகள் என்று சொல்வதை விட மனதைத் தொட்ட சில கதைகள் என்று சொன்னால் அவை சரோஜா,துலுக்கன்,நீதானே என் பொன் வசந்தம், லிண்ஷேலோகன் w/o மாரியப்பன்,காமத் துளி (இன்னும் இருக்கு..எனக்கு பிடித்த முதல் 5 மட்டும் இவை) போன்ற கதைகள்.என்னிடம் பெஸ்ட் ஆஃப் மின்னல் கதையைத் தேர்வு செய்யச் சொன்னால்,நான் தேர்வு செய்வது ”சில்க் ஸ்மிதா” கதையாகத் தான் இருக்கும்.

2-3 கதைகள் சுவாரஸ்யமாக எனக்குத் தோன்றவில்லை.குறிப்பாக என்கவுண்டர் கதை.லூஸ் பால்ல ஏன் மனுஷன் 6 அடிக்காம விட்டாருன்னு தோனிச்சு.ஆனால் அதிகப்பட்சக் கதைகள் பட்டயைக் கிளப்பியது.அதுவும் கடைசிப் பத்துக் கதைகளில் எழுத்தின் முதிர்ச்சியை உணர முடிந்தது.


28.சொல்லவே முடியாத கதைகளின் கதை - ஆதவன் தீட்சண்யா


புரட்சிக்கரமான கதைகள் என்று சொல்லலாம் , கொஞ்சம் பகடியும் சேர்த்து.ஏரியும் பனிகாடு நாவலை ஒரு சிறுகதையாக சொன்னால் எப்படி இருக்கும் அதன் வலியை சிறுகதையில் கொண்டு வர முடியுமா..?முடியும் என்று சொல்கிறார் முதல் கதையில்.சாக்கடை சுத்தம் செய்யும் தொழிலுக்கு நாட்டின் அதிகப்பட்சம் சம்பளம் ஒரு நாட்டில் கொடுத்தால் அந்த நாட்டின் நிலைமை என்னவாகும் , ஒரு சின்ன கற்பனை தான்..அந்த கதையின் பகடி சற்று சுள்ளென்று இருக்கும்.அதேப்போல் கைபேசியை வைத்து ஒரு கதை அதிலும் பகடி ரசிப்பதாகவும் கொஞ்சம் உண்மையை சொல்லி நடு மண்டையில் கொட்டியதாகவும் இருக்கும்.அந்தப் புத்தகத்தின் கடைசி கதை - ரஞ்சித் என்ற கதாப்பாத்திரம் , வேறு யாருமில்லை பகத் சிங் தான்.நான் மிகவும் ரசித்த கதை.பகத் சிங் எழுதிய 4 புத்தகம் நமக்கு கிடைக்காமலே அழிந்து விட்டதாம்.அதை வைத்து ஒரு புனைவு.அந்த புத்தகம் கிடைப்பதுப் போல.படித்த முடித்ததும் அப்பாடா அந்தப் புக் கிடைத்தது , என்ன புக் என்று இணையத்தில் தேடியப்போது தான் அது புனைவு என்பதை தெரிந்துக் கொண்டேன்.ஒரு மிகப்பெரிய பொக்கிசியத்தை இழந்த வருத்தம் இன்னும் கொல்கிறது.அந்தக் கதையிக் ஏகப்பட்ட தகவல்கள் பகத் சிங் பற்றி,அவர் பேசிய வார்த்தைகளின் குறிப்புகளுடன் கதை செல்லும்.பகத் சிங் பற்றி தேடலுக்கு ஒரு தூண்டுதலாக இந்த கதை இருந்தது.இந்தக் கதை இணையத்திலும் கிடைக்கிறது.


29.யேசு கதைகள் - பால் சக்காரியா - தமிழில் - ஜெயஸ்ரீ



செம புத்தகம் , யேசுவை மையமாக வைத்து எழுதிய புத்தகம்.சில பல எதிர்ப்புகளை சந்தித்த புத்தகம்.நண்பர் இந்தப் புத்தகத்தைப் பற்றி சொல்லும் போதெல்லாம் எனக்கு ஆன்மீக சம்மந்தமாக புத்தகங்கள் மீது நாட்டமில்லை என சொல்ல நினைத்தேன்.ஆனால் இந்த கதையின் களங்கள் வேறு என்பதை அவர் மீண்டும் மீண்டும் என்னிடம் சொல்லும் போது புரிந்துக் கொண்டேன்.இது யேசு வின் புகழ் பாடும் புத்தகம் அல்ல . அதை விட முக்கியமான ஒரு விஷயத்தை இந்தப் புத்தகம் விவாதிக்கிறது .யேசு ஒரு சாதாரண மனிதனாகவும் வாழ்ந்து இறந்திருக்கலாம் , காலம் தனது தேவைகளுக்காக அவரை கடவுளாக மாற்றியிருக்கலாம் என்ற விவாதம் தான் அது.யேசு முதன் முதலாக கண்ணாடியை பார்த்து சவரம் செய்வதாக ஒரு கதை , மிகவும் ரசித்து படித்த கதை.அதைப் போல் ஒரு யேசுவின் சிலை (பொம்மை) ஒரு விறகு கடையில் கிடைக்கிறது,அதை யாரும் மதிக்கவில்லை என்றே சொல்லலாம்.அதற்கு முக்கியமாக ஒரு காரணத்தை கதையில் சொல்கிறார்,அதில் யேசு சிரிப்பதாக இருக்கிறது அதான் அந்த சிலையை யாரும் கண்டுக்கொள்ளவேயில்லை இங்கு அனைவருக்கும் யேசுவின் பாவப்பட்ட முகம் தான் தேவை என்று வருகிறது.சற்று யோசிக்க வேண்டிய விஷயம் தான் .இந்தப் புத்தகத்தின் பற்றிய ஒரு அறிமுகம் தி.ஹிந்துவில் வ‌ந்திருக்கிறது.வாசித்துப் பாருங்கள்


30.கோபல்ல கிராமம் - கி.ரா




ரொம்ப நாளாக எனது அலமாரியில் உறங்கிக் கொண்டிருந்த புத்தகம் தான் கோபல்ல கிராமம்.நீண்ட முன்னுரை படித்தலிருந்து , இந்தப் புத்தகத்தை படிக்க தொடர்ந்து நேரம் கிடைத்தால் தான் முடியும் என்ற‌ பிம்பம் மனதில் உருவாகியிருந்தது . அப்படியொரு நேரம் கிடைக்குமென , "உனக்கு அடுத்த முறை நல்ல சம்பள உயர்வு வாங்கித் தரேன்" என மேனஜரின் சொல்லை நம்பி அடுத்த முறைக்காக காத்திருக்கும் ஐ.டி இளைஞன் போல நானும் காத்திருந்தேன்.அந்த நல்லவிதமான அடுத்த முறை வரவேயில்லை.பொறுத்தது போதுமென சென்ற வாரம் கையில் இந்தப் புத்தகத்தை எடுத்துவிட்டேன்.ஏகப்பட்ட கதாப்பாத்திரங்களின் அறிமுகங்கள் ,ஆரம்பத்தில் சற்று தடுமாற வைத்தது.முதல் சில பக்கங்களில் ஏகப்பட்ட தெரியாத வார்த்தைகள் வேறு.சரி இதுவும் கடந்து போகுமென பட்டியலை மட்டும் குறித்துவைத்துவிட்டு தொடர்ந்த வாசிப்பு போகப்போக ரெக்கை கட்டிப் பறந்தது.கதாப்பத்திரங்களின் பிம்பங்களோடு கிராமத்தை கண்டிப்பாக நம் கண்முன்னை வார்த்தைகளின் வழியாக வரைந்து விடுகிறார் கி.ரா.நாம் அறியாமல் புன்னைகை சிந்தும் இடமும் உண்டு கண்களை கசங்க வைக்கும் இடமும் உண்டு.கதையினை பற்றி சொல்லாமல் இந்நாவலை மேலும் விவரிப்பது சிரமம் என்பதால் எனக்குப் பிடித்த சில வரிகளையும் , வார்த்தைகளையும்  இங்கே பகிர்கிறேன்.....

//
அவர்கள் சூரியோதத்தைப் பார்த்ததும் அப்படியே நின்று விட்டார்கள்!இந்தச் சூரியோதயம் ஒன்றை எத்தனை தரம் பார்த்தாலும் சலிப்பதில்லை,அது ஒருநித்தப்புதுமை,அன்றலர்ந்த மலர்போல.இந்த கண் கூசாத சூரியனை,பூப்படையாத மங்கையைப் பார்ப்பது போல கூசாமல் பார்க்கலாம்.!
//

//
கோபல்ல கிராம‌மும் சுற்றுப்புறமும் கும்பினியின் ஆட்சிக்குக் கீழே வந்து பல வருஷங்கள் ஆகியும் எந்தவித மாறுதலும் உண்டாகிவிடவில்லை.மாறுதல் என்று ஒன்றைச் சொன்னால்வேண்டுமானால் அப்போது ஆகாயத்தில் தோன்றிய வால் நட்சத்டதிரத்தை வேண்டுமானல் சொல்லலாம்.
//

ருசிக்கல் - சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு உப்பு என்று சொல்ல கூடாதாம்.

அத்தாளம் -  dinner desserts

அரவ தேசம் - தமிழ்நாடு

ஏணி நாற்காலி - படிவைச்ச ஸ்டூல் [நீளமுள்ள‌ கூந்தலை உணர்த்திக்கொள்ள உதவும்]

நல்ல நாவல்.வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக படிக்கவும்.



மற்றப் பதிவுகள்



Tuesday, January 6, 2015

2014 வாசிப்பு - வலிகள்

ஒருவரது வலியை மற்றொருவருக்கும் உணரச்செய்வதில் இலக்கியத்திற்கு ஒரு முக்கிய பங்குண்டு..அப்படி 2014 ல் நான் வாசித்ததில் வலிகளை பேசிய படைப்புகளைப் பற்றி, 


22.எரியும் பனிக்காடு - பி.எச் டேனியம் [தமிழில் - இரா-முருகவேள்]


Red Label என்ற ஆங்கில நாவலின் மொழியாக்கம் தான் இந்த நாவல் ,  மிக முக்கியமான புத்தக‌ம் . நாம் அன்றாடம் அருந்தும் தேநீரின் கதை இது.பாலாவின் பரதேசி படம் இந்த நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்டது தான்.நான் படம் பார்க்கவில்லை , ஆனால் ஒரு பாட்டு பாத்தேன்.என்னால் அந்த பாட்டை நாவலின் எந்த இடத்திலும் வைத்து பார்க்க முடியவில்லை. 12  years a Slave  என்று ஒரு ஆங்கில திரைப்படம் .செம படம்.அந்த படத்தின் ஒவ்வொரு காட்சியிலையும் இந்த நாவலைப் பார்க்க முடிந்தது .டீ எஸ்டேட்டில் எப்படி வேலைக்கு ஆட்களை பிடித்து வருகின்றனர் என்பதில் துவங்குகிறது நாவல்.கங்கானி என்று சொல்லப்படுபவர்கள் தான் இந்த வேலையை செய்கின்றனர்.இந்த கங்கானிகள் கதாப்பாத்திரங்களை எந்த துறையிலும் பொருத்திப்பார்க்க முடியும்.நாயகனும் நாயகியும் இதுப் போன்ற ஒரு கங்கானியை நம்பி தங்கள் இடத்தினை விட்டு புறப்படுகின்றனர்.பஞ்சமும் , வேறு வேலைவாய்ப்பின்மையும் அவர்களை இந்த முடிவை எடுக்கச் செய்கிறது.எப்படியும் சம்பாதித்து விரைவில் கை நிறைய பணத்துடன் ஊருக்கு திரும்பிடலாம் என்ற நம்பிக்கையா போனவர்களுக்கு அங்கு சென்ற பின்பு தான் உண்மை நிலவரம் மெல்ல மெல்ல புரிகிறது.நாம் அருந்தும் தேனீர் பின்னாடி இப்படி ஒரு கதையிருக்கும் என சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. இதுப் போன்ற உடல் ரீதியான,பண ரீதியான துயரங்கள் இல்லாவிட்டாலும் நான் ஐ.டி துறையில் இருப்பதாலோ என்னவோ இந்தத் துறையினை நாவலின் ஒவ்வொரு வலி மிகுந்த இடத்திலும் பொருத்திப்பார்க்க முடிந்தது.முக்கியமாக‌ நாவலில் ஒரு இடத்தில் பரித்த தேநீர் இலைகளை இடை போடும் காட்சி வரும் அது எனது துறையில் நடக்கும்  "performance appraisal" ஐ நினைவிற்கு கொண்டு வந்தது. எவ்வளவு தூரம் பிழிய முடியுமோ பிழிந்தெடுத்துவிட்டு , முடியாது என்ற கட்டம் வரும்போது திறமையற்றவர் என‌ சொல்லி வெளியில் அனுப்புவது ஐ.டி துறையில் அவ்வப்போது நடந்துக் கொண்டே இருக்கிறது.இந்த நிலை நாவல் படிக்கும் போது காட்சிகளாக மனதில் சுற்றிக் கொண்டேயிருந்தது.நாவல் வாசிக்கும் போது அந்த நிலப்பரப்பின் குளிரையும் அந்த மக்கள் மனதில் எரியும் நெருப்பையும் நன்கு உணரலாம்.


23.நிமித்தம் - எஸ்.ரா


ஒரு பயணத்தில் தனது 6ம் வகுப்பு நண்பனை காண்கிறார் , அவர் பேருந்து நிலையத்தில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்."என்னடா " என்று கேட்க , தனது காது கேளாத பிரச்சனைத் தான் இந்த நிலைக்கு காரணம் என சொல்கிறார்...காது கேளாமை இவ்வளவு தூரம் ஒருவரின் வாழ்வை மாற்ற முடியுமா..? இந்த கேள்விக்கான விடை தேடலே நிமித்தம் நாவலாக உருமாறியிருக்கிறது.தேவ்ராஜ் என்ற கதாப்பாத்திரம் மூலம் காது கேளாதவர்களின் வலியை உர‌க்க சொல்லியிருக்கிறார்.இதில் காது கேளாமைத் தவிர , தாமதமாக திருமணமாகும் ஒருவனின் வலியும் இருக்கிறது.குறைந்த வயதை நிர்ணயம் செய்தவர்கள் , அதிகப் பட்ச வயதை நிர்ணயம் செய்யாதது ஏன்..என்ற கேள்வி சமுதாயத்தில் ஒரு பெண்ணிற்கு திருமணம் ஆகாதப் போது அவளை பாவப்பட்ட ஜென்மம் என்றாவது நினைப்பார்கள் ஆனால் ஆணிற்கு அதுவும் இல்லை என்பதே நிதர்சனம்.காது கேளாத ஒருவனது வாழ்க்கை தான் இந்த நாவல்.அவனை இந்த சமூகம் எப்படியெல்லாம் பந்தாடுகிறது , அவனது வலியை நமது செவிக்கு எட்டவைத்திருக்கிறார் எஸ்.ரா.

எஸ்.ராவின் எழுத்துக்கள் எனக்கு எப்போதும் நண்பன் தோழ் மீது கைப்போட்டு பேசுவதுப் போலவே இருக்கிறது,அவரது எழுத்தின் எளிமை எனக்கு மிகவும் ஒத்துப்போகிறது என்றே சொல்லலாம்.

24.கள்ளம் - தஞ்சை பிரகாஷ்


தஞ்சாவூர்காரனாக இருந்தும் தஞ்சை பிரகாஷ் பற்றி இணையத்தில் படித்துத் தான் தெரிந்துக் கொண்டேன்.அவரது எழுத்துக்கள் அதிகம் அச்சில் இல்லையாம்,கள்ளம் நாவல் போன வருடம் மறுப்பதிப்பாக வந்தது.உடனே வாங்கிவிட்டேன்.தஞ்சை ஓவிய கலை தான் கதையின் மையம்.தஞ்சை ஓவியம் எப்படி உருவானது , அந்த சமூகம் பற்றின அறிமுகம் முன்னுரையிலே ஆசிரியர் தந்து விடுகிறார். நாவல் தஞ்சை அரண்மனையிலே துவங்குகிறது . நாயகன் தஞ்சை ஓவிய கலை பின்னனியில் வந்தவன் , ஆனால் அவனுக்கு எந்த வித புதுப்பிதலும் இல்லாமல் வெறும் tempalte ஆக ஓவியம் தயாரிப்பதில் நாட்டமில்லாமல் அதை எதிர்க்கிறான்.அதிலிருந்து அவனது பயணம் துவங்குகிறது.கதை அதிகமாக பூக்கார வீதியிலே நடக்கிறது.தஞ்சையின் முக்கியமான இடங்களில் ஒன்று.அங்குள்ள மக்களுடன் நாயகன் சேர்கிறான் , அவர்களின் துனைகொண்டே கலைக்கு புது உருவம் தருகிறான்.அதற்கு அவன் கையாளும் முறை ... அதை நாவல் படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.இதில் நாயகனின் ஒரே வலி , கலை தான் ... அவன் உயிரோட்டமில்லாமல் அப்படியே நகலாக உருவெடுப்பதை பார்க்கும் போதெல்லாம் தவிக்கிறான்.அவனது தவிப்பே இந்த நாவல்.கலையோடு உறவுகளையும் அதுகம் கையாண்டிருப்பார்.சில இடங்கள் சினிமா தனமாக தோன்றினாலும் வாசிக்கும் போது சுவாரஸ்யமாகவே இருந்தது.

25. மாதொருபாகன் - பெருமாள்முருகன்



பெருமாள் முருகன் எழுத்தில் நான் படிக்கும் முதல் நாவல்.பாதி வாசிப்பில் இருக்கும் போதே , நாவல் பற்றின பிரச்சனை செய்தி எட்டியது.அந்த விஷயத்தை முன்னுரையிலையே சொல்லிவிடுவார்.அதை மற்றும் படிச்சிட்டு பிரச்சனை செஞ்சாங்களான்னு தெரியல.இந்த நாவல் வேறு விஷயத்தை தான் பேசுகிறது.அது என்னான்னா குழந்தையில்லாமல் இருக்கும் ஒரு தம்பதியின் வலி தான்.அதில் இந்த பிரச்சனைக்குறிய விஷயம் ஒரு திருப்பமாக வரும்...

திருமணம் ஆனதும் "என்ன ஏதாச்சும் விஷேசம் உண்டா" என்ற கேள்வி இங்கு திருமணம் ஆன அனைவரும் எதிர்கொள்ளும் கேள்வி தான்.இதுப் போன்ற கேள்விகள் தான் நம் வாழ்க்கையை நடத்துகிறதோ என்ற சந்தேகம் கூட அடிக்கடி வருவதுண்டு.10 வது மார்க்,+2,எந்த காலேஜ்,campus,இன்னும் வேலை கிடைக்கலையா,அவன் அவ்வளவு சம்பளம் வாங்குறான்,வெளிநாடு,திருமணம்,முதல் குழந்தை,சொந்த வீடு,கார்,ஆண் வாரிசு..என கேள்விகள் வந்துக் கொண்டேயிருக்கிறதுஏதாச்சும் ஒரு கேள்விக்கு +ve ஆக பதில் சொன்னால் அடுத்த கேள்விக்கு தாவி விடுவார்கள்.ஆனால் -ve ஆக பதில் சொன்னால் அவ்வளவு தான்,அதே கேள்வியை திரும்ப திரும்ப கேட்டு வாழ்வை ரணமாக மாற்றுவதில் இந்த சமூகம் ஆர்வம் காட்டும் பாருங்க...அப்படி தான் இங்கு குழந்தை இல்லாத போதும் தங்களுக்குள் பிரச்சனை இல்லாததாக உணர்ந்த வந்த தம்பதியர் வாழ்வில் அன்றாடம் சந்திக்கும் ஏதோ ஒரு நிகழ்வில் அந்த வருத்தம் ஏற்பட்டுக் கொண்டேயிருந்தது.அதை ஏற்படுத்துவதே அந்த சமூகத்தின் முதல் கடமையாக இருந்தது.

இந்த நாவலில் வரும் கணவன் - மனைவிக்குள் இருக்கும் ஈடுபாடை,காதலை,காமத்தை அழகாக ரசிக்கலாம்.நாயகனின் அறிமுகமே ஒரு பூவரச மரத்தடியில் (அவனது மாமியார் வீட்டில்) அவனது சோம்பலான விழிப்புடன் துவங்குகிறது...நேரத்தை கடத்த முயன்று அவன் மெல்ல மெல்ல தனது நினைவுகளை ஓட்டுகிறான்.
குழந்தையில்லாத காரணத்தால் அவன் சந்தித்த அவமானம் மட்டுமே அவனது நினைவில் அதிகம் இருக்கிறது.குழந்தையின்மை - எவ்வளவு பெரிய பூதமாக தங்களுக்குள் இருப்பதையும் , தங்களது கூடல் கூட மகிழ்ச்சிக்கரமாக அமையாது பயத்துடன் இருப்பதை நினைத்து வாடுவதை என்னவென்று சொல்வது...

நாவல் சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தினுடையது , திருச்சங்கோட்டில் நடக்கிறது , அங்கிருக்கும் வழிபாட்டு முறைகளையும் , வேண்டுதலையும் சொல்லி நகர்கிறது.அங்கு நடக்கும் திருவிழா , அப்பொழுதைய நடப்பில் இருக்கும் சில முறைகளை இந்த கதைக்கு முக்கிய திருப்பமாக உபயோகித்திருக்கிறார்.வாசிக்கும் போது அது ஒரு ஆச்சரியம் தருவதாக இருந்ததைத் தவிர பெறும் கலாச்சார அவமானமாக தோன்றவில்லை எனக்கு.

நாவலின் அடுத்த இரண்டு பகுதிகள் வருகிறதான் (12 B style ல் என்று கேள்வி).....


மற்றப் பதிவுகள்