Thursday, January 8, 2015

2014 - வாசிப்பு - இன்னும் சில‌

26.தாகூர் சிறுகதைகள் 


தாகூர் சிறுகதைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில சிறுகதைகளின் தொகுப்பு.இவரது கதைகளில் ஒரு கதாப்பாத்திரம் அதிகமாக வருகிறது.அது அவரது ஊரிலுள்ள நதி தான்.அந்த நதியின் போக்குவரத்துக்கள்.மெத்ராஸ் பட்டிணம் படத்தில் பார்த்ததுப் போல நதியினை மக்கள் தங்களது போக்குவரத்திற்கு உபயோகப்படுத்திருப்பதை நிகழ்வுகளாக அவர் சொல்லும் போது அதன் பிரமாண்டத்தை உணர முடிகிறது.அவருக்கும் அந்த நதியின் பாதிப்பு அதிகமாக இருந்திருக்கும் போல அதான் அவரது எல்லாக்கதைகளிலும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நதியினை குறித்து பேசுகிறார்.ஒரு கதையில் ஆத்தோரத்திலுள்ள ஒரு பெரிய கல் அதான் ஒரு கதையை சொல்கிறது , அதுவும் ஒரு விதவையின் கதையை.ஒரு பெண்ணின் வாழ்வை , நதியோடு அவளது சீண்டலை , அவளது துடிப்பை , அவளது ஆராவாரத்தை , இத்தனையுமின்றி நீண்ட பிரிவிற்கு பின் வாழ்வின் சோகத்தையும் தனிமையையும் மட்டும் சுமந்து அவள் வருகிறாள் , அந்தக் கல் அவளை மீண்டும் சந்தித்த சந்தோஷத்திலிருக்கு அவள் தனது வாழ்வின் முடிவை தேடிக்கொள்வாள் என முடிகிறது.கதையை யாரோ சொல்வதுப் போலவே இருக்கும் முடிவில் தான் அது அந்தக் கல் என்பதே தெரியும்.நான் மிகவும் ரசித்த சிறுகதை.

தாகூரின் படைப்புலகத்திற்கு ஒரு அறிமுகம் கிடைத்ததாக இருந்தது


27.லிண்ஷேலோகன் w/oமாரியப்பன் - வா.மணிகன்டன்


சிறு சிறு கதைகளாக 25 கதைகள் , ஒவ்வொரு கதைகளும் 2-3 பக்கங்களே.”வாமா மின்னல்..” என்பதை மனதில் வைத்துத் தான் மின்னல் கதைகள் என்று sub-title வைத்தாரோ என்னவோ..? கதை துவங்குவதும் , நம்மைக் கடந்து செல்வதும், முடிவதும் மின்னல் போல இருக்கிறது.இந்த மின்னல் கதைகள் வாசிப்புப் பழக்கம் இல்லாதவர்களுக்கும் படிக்க ஏதுவாக இருக்கும்.அப்போ வாசிப்புப் பழக்கம் இருக்கிறவர்களுக்கு எப்படி இருக்கும்னு நீங்க கேட்கிறது என் காதில் விழாமலில்லை…

சிறுகதைகள் வாசிக்கும் போது ,அந்தக் கதாப்பாத்திரங்கள் நம்முடன் பயணிப்பது போன்ற அனுபவம் இதில் சற்று குறைவாக எனக்குத் தோன்றியது.எனது பள்ளி,கல்லூரி நினைவுகளை தூண்டியபோதும் அத்துடன் பயணம் செய்யப் போதுமான இடம் இல்லாது போலத் தோன்றியது.

படித்து முடித்த இரு தினங்கள் ஆகிறது ,தற்பொழுது நினைவில் இருக்கும் கதைகள் என்று சொல்வதை விட மனதைத் தொட்ட சில கதைகள் என்று சொன்னால் அவை சரோஜா,துலுக்கன்,நீதானே என் பொன் வசந்தம், லிண்ஷேலோகன் w/o மாரியப்பன்,காமத் துளி (இன்னும் இருக்கு..எனக்கு பிடித்த முதல் 5 மட்டும் இவை) போன்ற கதைகள்.என்னிடம் பெஸ்ட் ஆஃப் மின்னல் கதையைத் தேர்வு செய்யச் சொன்னால்,நான் தேர்வு செய்வது ”சில்க் ஸ்மிதா” கதையாகத் தான் இருக்கும்.

2-3 கதைகள் சுவாரஸ்யமாக எனக்குத் தோன்றவில்லை.குறிப்பாக என்கவுண்டர் கதை.லூஸ் பால்ல ஏன் மனுஷன் 6 அடிக்காம விட்டாருன்னு தோனிச்சு.ஆனால் அதிகப்பட்சக் கதைகள் பட்டயைக் கிளப்பியது.அதுவும் கடைசிப் பத்துக் கதைகளில் எழுத்தின் முதிர்ச்சியை உணர முடிந்தது.


28.சொல்லவே முடியாத கதைகளின் கதை - ஆதவன் தீட்சண்யா


புரட்சிக்கரமான கதைகள் என்று சொல்லலாம் , கொஞ்சம் பகடியும் சேர்த்து.ஏரியும் பனிகாடு நாவலை ஒரு சிறுகதையாக சொன்னால் எப்படி இருக்கும் அதன் வலியை சிறுகதையில் கொண்டு வர முடியுமா..?முடியும் என்று சொல்கிறார் முதல் கதையில்.சாக்கடை சுத்தம் செய்யும் தொழிலுக்கு நாட்டின் அதிகப்பட்சம் சம்பளம் ஒரு நாட்டில் கொடுத்தால் அந்த நாட்டின் நிலைமை என்னவாகும் , ஒரு சின்ன கற்பனை தான்..அந்த கதையின் பகடி சற்று சுள்ளென்று இருக்கும்.அதேப்போல் கைபேசியை வைத்து ஒரு கதை அதிலும் பகடி ரசிப்பதாகவும் கொஞ்சம் உண்மையை சொல்லி நடு மண்டையில் கொட்டியதாகவும் இருக்கும்.அந்தப் புத்தகத்தின் கடைசி கதை - ரஞ்சித் என்ற கதாப்பாத்திரம் , வேறு யாருமில்லை பகத் சிங் தான்.நான் மிகவும் ரசித்த கதை.பகத் சிங் எழுதிய 4 புத்தகம் நமக்கு கிடைக்காமலே அழிந்து விட்டதாம்.அதை வைத்து ஒரு புனைவு.அந்த புத்தகம் கிடைப்பதுப் போல.படித்த முடித்ததும் அப்பாடா அந்தப் புக் கிடைத்தது , என்ன புக் என்று இணையத்தில் தேடியப்போது தான் அது புனைவு என்பதை தெரிந்துக் கொண்டேன்.ஒரு மிகப்பெரிய பொக்கிசியத்தை இழந்த வருத்தம் இன்னும் கொல்கிறது.அந்தக் கதையிக் ஏகப்பட்ட தகவல்கள் பகத் சிங் பற்றி,அவர் பேசிய வார்த்தைகளின் குறிப்புகளுடன் கதை செல்லும்.பகத் சிங் பற்றி தேடலுக்கு ஒரு தூண்டுதலாக இந்த கதை இருந்தது.இந்தக் கதை இணையத்திலும் கிடைக்கிறது.


29.யேசு கதைகள் - பால் சக்காரியா - தமிழில் - ஜெயஸ்ரீ



செம புத்தகம் , யேசுவை மையமாக வைத்து எழுதிய புத்தகம்.சில பல எதிர்ப்புகளை சந்தித்த புத்தகம்.நண்பர் இந்தப் புத்தகத்தைப் பற்றி சொல்லும் போதெல்லாம் எனக்கு ஆன்மீக சம்மந்தமாக புத்தகங்கள் மீது நாட்டமில்லை என சொல்ல நினைத்தேன்.ஆனால் இந்த கதையின் களங்கள் வேறு என்பதை அவர் மீண்டும் மீண்டும் என்னிடம் சொல்லும் போது புரிந்துக் கொண்டேன்.இது யேசு வின் புகழ் பாடும் புத்தகம் அல்ல . அதை விட முக்கியமான ஒரு விஷயத்தை இந்தப் புத்தகம் விவாதிக்கிறது .யேசு ஒரு சாதாரண மனிதனாகவும் வாழ்ந்து இறந்திருக்கலாம் , காலம் தனது தேவைகளுக்காக அவரை கடவுளாக மாற்றியிருக்கலாம் என்ற விவாதம் தான் அது.யேசு முதன் முதலாக கண்ணாடியை பார்த்து சவரம் செய்வதாக ஒரு கதை , மிகவும் ரசித்து படித்த கதை.அதைப் போல் ஒரு யேசுவின் சிலை (பொம்மை) ஒரு விறகு கடையில் கிடைக்கிறது,அதை யாரும் மதிக்கவில்லை என்றே சொல்லலாம்.அதற்கு முக்கியமாக ஒரு காரணத்தை கதையில் சொல்கிறார்,அதில் யேசு சிரிப்பதாக இருக்கிறது அதான் அந்த சிலையை யாரும் கண்டுக்கொள்ளவேயில்லை இங்கு அனைவருக்கும் யேசுவின் பாவப்பட்ட முகம் தான் தேவை என்று வருகிறது.சற்று யோசிக்க வேண்டிய விஷயம் தான் .இந்தப் புத்தகத்தின் பற்றிய ஒரு அறிமுகம் தி.ஹிந்துவில் வ‌ந்திருக்கிறது.வாசித்துப் பாருங்கள்


30.கோபல்ல கிராமம் - கி.ரா




ரொம்ப நாளாக எனது அலமாரியில் உறங்கிக் கொண்டிருந்த புத்தகம் தான் கோபல்ல கிராமம்.நீண்ட முன்னுரை படித்தலிருந்து , இந்தப் புத்தகத்தை படிக்க தொடர்ந்து நேரம் கிடைத்தால் தான் முடியும் என்ற‌ பிம்பம் மனதில் உருவாகியிருந்தது . அப்படியொரு நேரம் கிடைக்குமென , "உனக்கு அடுத்த முறை நல்ல சம்பள உயர்வு வாங்கித் தரேன்" என மேனஜரின் சொல்லை நம்பி அடுத்த முறைக்காக காத்திருக்கும் ஐ.டி இளைஞன் போல நானும் காத்திருந்தேன்.அந்த நல்லவிதமான அடுத்த முறை வரவேயில்லை.பொறுத்தது போதுமென சென்ற வாரம் கையில் இந்தப் புத்தகத்தை எடுத்துவிட்டேன்.ஏகப்பட்ட கதாப்பாத்திரங்களின் அறிமுகங்கள் ,ஆரம்பத்தில் சற்று தடுமாற வைத்தது.முதல் சில பக்கங்களில் ஏகப்பட்ட தெரியாத வார்த்தைகள் வேறு.சரி இதுவும் கடந்து போகுமென பட்டியலை மட்டும் குறித்துவைத்துவிட்டு தொடர்ந்த வாசிப்பு போகப்போக ரெக்கை கட்டிப் பறந்தது.கதாப்பத்திரங்களின் பிம்பங்களோடு கிராமத்தை கண்டிப்பாக நம் கண்முன்னை வார்த்தைகளின் வழியாக வரைந்து விடுகிறார் கி.ரா.நாம் அறியாமல் புன்னைகை சிந்தும் இடமும் உண்டு கண்களை கசங்க வைக்கும் இடமும் உண்டு.கதையினை பற்றி சொல்லாமல் இந்நாவலை மேலும் விவரிப்பது சிரமம் என்பதால் எனக்குப் பிடித்த சில வரிகளையும் , வார்த்தைகளையும்  இங்கே பகிர்கிறேன்.....

//
அவர்கள் சூரியோதத்தைப் பார்த்ததும் அப்படியே நின்று விட்டார்கள்!இந்தச் சூரியோதயம் ஒன்றை எத்தனை தரம் பார்த்தாலும் சலிப்பதில்லை,அது ஒருநித்தப்புதுமை,அன்றலர்ந்த மலர்போல.இந்த கண் கூசாத சூரியனை,பூப்படையாத மங்கையைப் பார்ப்பது போல கூசாமல் பார்க்கலாம்.!
//

//
கோபல்ல கிராம‌மும் சுற்றுப்புறமும் கும்பினியின் ஆட்சிக்குக் கீழே வந்து பல வருஷங்கள் ஆகியும் எந்தவித மாறுதலும் உண்டாகிவிடவில்லை.மாறுதல் என்று ஒன்றைச் சொன்னால்வேண்டுமானால் அப்போது ஆகாயத்தில் தோன்றிய வால் நட்சத்டதிரத்தை வேண்டுமானல் சொல்லலாம்.
//

ருசிக்கல் - சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு உப்பு என்று சொல்ல கூடாதாம்.

அத்தாளம் -  dinner desserts

அரவ தேசம் - தமிழ்நாடு

ஏணி நாற்காலி - படிவைச்ச ஸ்டூல் [நீளமுள்ள‌ கூந்தலை உணர்த்திக்கொள்ள உதவும்]

நல்ல நாவல்.வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக படிக்கவும்.



மற்றப் பதிவுகள்



No comments:

Post a Comment