Thursday, November 20, 2014

பயணம்



பேருந்து கிளம்பியும் அவனது தொல்லை எல்லையின்றி போய் கொண்டிருக்கிறது. அவன் நிஜமாகவே போனில் பேசுகிறானா என்ற சந்தேகம் கூட அந்த பேருந்திலுள்ள அனைவருக்கும் இருந்தது. போக்குவரத்து நெரிசல் வதைப்பது போதாது என இவனும் வதைத்துக் கொண்டிருந்தான்.
“டேய் மச்சி நாளைக்கு தலைவர் படத்துக்கு புக் பண்ணிட்டேல…அப்படியே சாய்ந்திரம் ட்ரீட் யாருது..சரக்கிலாமலா…” என ஊரிலுள்ள நண்பர்கள் அனைவரைக்கும் வரிசையாக போன் போட்டு ஒரே விஷயத்தைப் பேசிக்கொண்டிருந்தான்.மன்னிக்கவும் அவன் பேசுவதாக நினைத்துக் கொண்டு மொத்தப் பேருந்திருக்கும் டமாரம் போட்டுக் கொண்டிருந்தான்.பெங்களூர் சில்க் போர்டிலிருந்து தஞ்சை கிளம்பிய அந்த பேருந்தில் அவனது அலம்பல் கட்டுக்கடங்காமல் போய்கொண்டிருந்தது.
முதல் நாள் தியேட்டர் வாசலையும், டாஸ்மாக் அமைப்பையும் த‌னது செல்போன் உரையாடல் மூலம் தமிழ் தெரிந்த அனைவரது கண் முன்னே வரைந்துக் கொண்டுவந்திருந்தான்.அவனது இருக்கைக்கு முன்னே ஓர் அழகிய காதல் ஜோடியும் அவனது உரையாடலில் உரைந்துக் கொண்டிருந்தது.காதலில் பழம் தின்னு கொட்டை போட்டவர்கள் போலும்.அவர்கள் தலையில் நரை நிறம்பிருந்தது.அவனது உரையாடல் எல்லை மீறல்கள் செய்த போதெல்லாம் , பயத்தில் காதலி காதலன் கைகளை பற்றிக் கொண்டாள்.நகரத்தின் மீதுள்ள பயம் அவளை விட்டு இன்னும் முழுதாக அகலவில்லை அவளிடம்.பரப்பரப்பான சாலைகள்,ஆமையென நகரும் வாகனங்கள்,திறக்காத ஜன்னல் ஓர இருக்கை என அவளுக்கு பார்ப்பதெல்லாம் பயம் தருவதாக இருந்தது.அடிக்கடி ரகசியமாக கணவனின் காதில் ஏதோ சொல்கிறாள்,அவரும் பதிலுக்கு ஒரு முறை அவனை முறைத்துவிட்டு அவளுக்கு சமாதானம் சொல்ல.பற்றிய கரங்களோடு கணவன் மீது சாய்கிறாள்.பயம் சற்று தளர்ந்ததாக உணர்கிறாள்.
இந்த அழகிய காட்சிக்கு ஏற்றதாக இளையராஜாவின் கீதங்கள் இசையின் வேர்களி வழி (ஹெட்போன்ஸ்) ஒலிக்க , நண்பரகள் இருவரும் அந்த செல்போன் ஆசாமியை மீண்டும் ஒரு முறை திரும்பிப் பார்த்தனர்.யாரது பார்வையும் அவன் கண்டதாக தெரியவில்லை.மறுநாள் அட்டவனையை முடித்துவிட்டு தனது சென்ற வருட டாஸ்மாக் சாதனைகளை பட்டியலிட்டுக் கொண்டிருந்தான்.
“இந்த ஃபுல் சவுண்டுலையும் அவன் சவுண்டு கேக்குது டா.” என நண்பர்கள் எரிச்சலுடன் அவனை மீண்டும் ஒரு முறை பார்த்தனர்.வேண்டுமென்றே அவன் காதுப்பட இருவரும் பேச தொடங்கினர்.தன்னைப் பற்றித்தான் பேசுகிறார்கள் என்று அவன் உணர சற்று நேரம் பிடித்தது.
“டேய் நாராயணா இந்த கொசுத் தொல்லை தாங்க முடியலடா” என்று கவுண்டமனி பாணியில் அவர்கள் பேசிய பின்பு தான் சற்று அமைதியானான்.அடைமழை பெய்து ஒய்ந்தது போல ஓர் அமைதி.மொத்த பேருந்து அந்த அமைதியை ரசித்திருக்க அதற்குள் அவனது கைபேசி ஒலித்தது..
“இவன் சும்மா இருந்தாலும் விடமாட்டாங்கப் போல.இன்னைக்கு நமக்கு சிவராத்திரித் தான்” என்று இருவரும் பேசி சிரித்துக் கொண்டிருக்க‌னர் .பேருந்தில் அனைவரும் தங்களை அறியாமலே அவனது உரையாடலை கவனித்தனர்.அவனது குரல் முதல்முறையா அந்தப் பேருந்தில் வேறு தோணியில் ஒலித்தது…
“ஊருக்கு போய்ட்டு இருக்கேன் “
…….
“சில்க் போர்ட் கிட்ட வண்டி வந்திருக்கு”
…..
“கண்டிப்பாவா …நான் வேணும்னா ..”
“ஓ.கே ..வேற வழியே இல்லாட்டி நான் வந்திடுரேன்..”
என்று அவனது டெசிபெல் மெல்ல மெல்ல குறைந்தது.அந்த அலுவலக அழைப்பை அவன் முடிக்கும் போது அவனது முகமும்எண்ணைய் கத்தரிப் போல் வதங்கிருந்தது .தனது பையை சுருட்டிக் கொண்டு , சுற்றி ஒரு முறைப் பார்த்தான்,அவனை கண்டுக்கொள்ளாதது போல் அனைவரும் நடிப்பதை அவன் உணராது,நேராக முன்னே சென்று நடத்துனரிடம் பேருந்தை நிறுத்தச் சொல்ல,பேருந்திலிருந்து இறங்கிச் சென்றான்.
“ஆண்டவன் இருக்கான் மச்சி..” என நண்பர்கள் இருவரும் அவனை கேலிப்பேச‌…
“இப்படி ஊருக்கு போகிற வழியில கூட இறங்கி திரும்ப‌ ஆபிசுக்கு வரச் சொல்லுவாங்களா..பாவங்க, அந்தப் புள்ள ஆசை ஆசையா ஊருக்கு கிளம்புச்சு..” என அவள் தன் கனவனிடம் சொல்ல.அவளது மெல்லிய குரல் எட்டிய தமிழ் நெஞ்சங்கள் அனைத்தும் அவனுக்காக வருந்தியது.

No comments:

Post a Comment