Thursday, November 20, 2014

சிறுவர் இலக்கியம்

(சஞ்சிகை இதழில் வெளியானது)

சமூக வலைத்தளங்களில் நடக்கும் இலக்கிய சண்டைகளின் மத்தியில் அவ்வப்போது ஒருவரின் குரல் சிறுவர் இலக்கியத்தின் முக்கியத்துவம் பற்றி சொல்லிக் கொண்டே இருக்கிறது. சென்ற ஆண்டு ஆனந்தவிகடனின் சிறுவர் இலக்கிய விருதையும் , தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் குழந்தை இலக்கியத்திற்கான விருதையும் வாங்கிய எழுத்தாளர் விழியனின் குரல் தான் அது. ஆங்கிலத்தில் சிறுவர்களுக்கு விதவிதமாக‌ கிடைக்கும் புத்தகங்கள் போல தமிழிலும் கிடைக்க வேண்டும் என்பதே அவரது ஆசை.

அவரது சின்ன சின்ன ஆசைகள் தான் இன்று எழுத்துக்களாக உருமாறி “மாகடிகாரம்” , “டாலும் ழீயும்”, “பென்சில்களின் அட்டகாசம்”, “வளையல்கள் அடித்த லூட்டி”, “அந்தரத்தில் நடந்த அபூர்வ கதை” என்ற குட்டிஸ் புத்தகங்களாக கிடைக்கின்றன.
சென்ற தலைமுறையிலிருந்தே பாட்டி கதைகள் மெல்ல மெல்ல மறைய துவங்கிவிட்டன. இன்று ஒரு குழந்தையிடம் “ஏ…எனக்கு ஒரு கதை சொல்லேன்..” என்று கேட்டால் நமக்கு கிடைப்பது மெளனம் மட்டுமே. அதுவே ஒரு சீரியலின் கதையையோ அல்லது ஒரு திரைப்பாடலையோ அவர்களால் முழுவதுமாக சொல்ல முடிகிறது. ஏனென்றால் அவர்களுக்கு தீனியாக இருப்பது தொ(ல்)லைக்காட்சிகள் மட்டும் தான். இந்த நிலை பெற்றோர்களுக்கும் தான் நீதி கதைகள் தாண்டி புது கதைகளை உருவாக்குவது சிரமம் என்பதை மறுப்பதற்கல்ல. எழுத்தாளர் விழியன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்கள் அடிக்கடி சொல்வது இது தான். குழந்தைகளிடம் அதிகம் உரையாட வேண்டும். அதற்கு ஒவ்வொரு பெற்றோரும் கதை சொல்லியாக மாறிட வேண்டும். அதற்கு முதலில் நல்ல வாசகனாக மாறிட வேண்டும். இது தான் வழி என்பதல்ல. இதுவும் ஒரு வழி என்பது தான். அப்படி வாசகனாக மாறி நான் படித்த சில சிறுவர்கள் புத்தகங்களில் ஒன்று தான் “மாகடிகாரம்”.
maakadikaaram_bookஉலகத்தை காக்க ஏதோ ஒரு மூலையில் ஒரு மிகப்பெரிய கடிகாரம் இயங்கிக் கொண்டிருக்கிறது. அதன் அடுத்த காவலனாக கதையின் நாயகன் தேர்ந்தெடுக்கப்படுகிறான். அவன் நீர்மூழ்கிப் கப்பல் துணைக்கொண்டு அந்த இடத்தினை அடைகிறான். அங்கு அவனுக்கு அந்த கடிகாரம் தான் உலகத்தினை இயக்குவதாக சொல்லப்படுகிறது. அதற்கு சாவிக் கொடுக்கும் பொறுப்பு நாயகன் கையில் வருகிறது. அவன் பொறுப்பினை தவறும் பட்சத்தின் உலகம் அழிந்து விடும் என மாயன் காலண்டர் குறிப்புடன் கதை நகர்கிறது. மகாகடிகாரத்தின் ரகசியத்தினை நாயகன் உடைப்பதுடன் கதை முடிகிறது. மெல்லிய கதையாக இருந்தாலும் சிறுவர்களுக்கு மெல்ல மெல்ல அறிவியல் சார்ந்த அறிமுகங்கள் ஆங்காங்கே கிடைத்துக் கொண்டேயிருக்கும்.
DSC00431_thumb2கதையின் துவக்கத்தில் ஏலகிரி மலையில் நாயகன் அப்பாவுடனும் தங்கையுடனும் செல்வதாக வரும்.அந்த வரியை படித்த உடனே நமது முதலாவது மலைப் பயணம் கண்டிப்பாக நினைவில் வரும். நீர்மூழ்கி கப்பல், கதாப்பாத்திரங்கள், மகாகடிகாராத்தின் அமைப்பு என ஒவ்வொன்றையும் நம் மனது கற்பனை செய்து கொள்வதையும் ஒரு கட்டத்தில் அந்த சிறுவனாக நம்மை நாமே உணர்வதும் இந்த புத்தகத்தின் வெற்றி என சொல்லலாம். நமது கற்பனா சக்திகளை இந்த புத்தகம் தூண்டிவிடும் பட்சத்தில் சிறுவர்களது கற்பனா சக்திகளை கண்டிப்பாக தூண்டும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.
நாளைய‌ கண்டுப்பிடிப்புகளுக்கும், வளமான சமுதாயத்துக்கும் வித்தாக அமைய போவது குழந்தைகளின் கற்பனா சக்திகளே. அவர்களின் கற்பனா சக்திகள் மென்மேலும் வளர இனி பெற்றோர்கள் கதை சொல்லியாக மாறிட வேண்டும். அதற்கு கண்டிப்பாக விழியனின் புத்தகங்கள் உதவியாக இருக்கும்.

No comments:

Post a Comment