Monday, December 26, 2016

வாசிப்பு 2016 - சிறுவர் இலக்கியச் சிந்தனைகள்

சிறுவர்களுக்கான இலக்கியத்தை சிறுவர்களின் வயதிற்கேற்ப‌ இரண்டாக பிரித்தல் வேண்டும் என்று நண்பர் விழியன் அடிக்கடி சொல்வார். எட்டு வயது வரை உள்ள சிறுவர்களுக்கானது "குழந்தை இலக்கியம்" என்றும் , 8 முதல் 14 வரையில் உள்ளவர்களுக்கானது  "சிறுவர் இலக்கியம்" என்றும் பிரித்திடல் வேண்டும். அதே போன்று "தமிழ் விமர்சன" இலக்கியத்தில் "சிறுவர் இலக்கிய விமர்சனம்" என்று தனிப் பிரிவையையும் உருவாக்கிடல் வேண்டும்.அந்த பிரிவில் சேர்க்கப்பட வேண்டியவை தான் கீழே உள்ள புத்தகங்கள். ஆசிரிய‌ர்களுக்கும்,பெற்றோர்களுக்கும் மற்றும் சிறுவர்கள் சார்ந்து இயங்கும் நண்பர்களுக்கும் இதனை பரிந்துரை செய்கிறேன். இந்தப் புத்தகங்கள் மூலமாக சிறுவர் இதழ்கள் பற்றின தரவுகள் நிறைய கிடைத்தன‌. அதில் முக்கியமான ஒன்று 1950 களில்,மாதம் 50 தமிழ் சிறுவர் இதழ்கள் வெளியாகியுள்ளன‌ என்பது தான். இன்று எத்தனை இதழ்கள் வெளிவருகின்றது என்ற கேள்வி தான் பஞ்சுமிட்டாய் இதழாக உருமாறியது.

3. தமிழ்க் குழந்தை இலக்கியம் விவாதங்களும் விமர்சனங்களும் - சுகுமாரன் 

சென்னையில் எழுத்தாளர் விழியன் இல்லத்தில் சிறுவர் இலக்கியம் சார்ந்து ஒரு நாள் பட்டறை நடந்தது , அப்பொழுது அறிமுகமான புத்தகம் தான் இது . சுகுமாரன் அவர்களும் அங்கு வந்திருந்தார். செம ரகளையான புத்தகம். தமிழ் சிறுவர் இலக்கியத்தின்வளர்ச்சி,அதன் போக்கு,தற்பொழுதைய நிலை,சிறுவர் இலக்கியத்தின் பிரிவுகள்,இதழ்கள் என அனைத்து அம்சங்கள் பற்றியும் விரிவாக பேசுகிறார் சுகுமாரன். ஒரு நல்ல அரசு,சிறுவர்களுக்கான உலகத்தினை கட்டமைப்பதில் என்னென்ன‌ செய்திடல் வேண்டும் என்ற கேள்விக்கு நல்ல நூலகங்கள்,ஒவ்வொரு நூலகங்களிலும் சிறுவர்களுக்கான பிரிவு,சிறுவர்களுக்கான நிகழ்வுகள்,சிறுவர்களுக்கான  திரையரங்குகள் என்று நீண்ட பட்டியலை தருகிறார். இவை அனைத்தும் தமிழகத்தில் இருக்கிறதா,ஏன் அதற்கான எந்தவித முயற்சிகளும் எடுக்கப்படவில்லை என்பதைப் பற்றியும் பேசுகிறார்.

தற்பொழுது யார் யார் சிறுவர் இலக்கியத்தில் இயங்குகின்றனர்,சிறுவர் இலக்கியத்தில் பள்ளி ஆசிரியர்களின் பங்கு எத்தகையது,உண்மையில் சிறுவர்களுக்கான படைப்புக‌ள் தான் வருகிறதா என்று பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. காலம் மாறுகிறது சிறுவர்களின் ரசனையும் உலகமும் ஏகப்பட்ட மாற்றங்களை சந்தித்துவிட்டன‌ ஆனால் சிறுவர் இலக்கியம் மட்டும் மாறாமல் வள்ளியப்பா ஏற்படுத்திய பாணியிலே பயணிப்பதை சுட்டிக் காட்டுகிறார்.

"குழந்தை இலக்கியத்தில் குழந்தையின் உணர்வுகளும் எண்ணங்களும் செயல்களுமே வெளிப்பட வேண்டும். ஆனால் வெளிப்பட்டதெல்லாம் குழந்தை எழுத்தாளரின் எண்ணங்களும் உணர்வுகளுமே !"

என்று சிறுவர் இலக்கியம் சிறுவர்களிடமிருந்து அன்னியப்படிருப்பதையும் சாடுகிறார்.

4.சிறுவர் இலக்கியச் சிந்தனைகள் - பூவண்ணன்

சிறுவர் இலக்கியம் சார்ந்து வெவ்வேறு காலக்கட்டத்தில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பே இந்த புத்தகம். தமிழ் சிறுவர் இலக்கியம் எப்பொழுது தோன்றியது, அதன் ஆளுமைகள் யார்,அதன் வளர்ச்சி எத்தகையது, முதல் சிறுவர் இதழ் எது , இதுபோன்ற எண்ணற்ற‌ கேள்விகளுக்கு விடையாக அமையும். பாடல்கள்,கதைகள்,கதைப் பாடல்கள்,விடுகதைகள்,நாடகங்கள்,திரைப்படங்கள் என சிறுவர்கள் இலக்கியத்தின் பிரிவுகளில் தமிழில் வந்த படைப்புகளைப் பற்றின ஒரு விரிவான பார்வை இதில் உள்ளது.
அவ்வையின் ஆத்திச்சூடி உண்மையிலே சிறுவர் இலக்கியமா  அதைச் சார்ந்து நடந்த விவாதகங்கள்,சிறுவர் இலக்கிய எழுத்தாளர் சங்கத்தின் தோற்றம்,அதன் செயல்பாடு,வள்ளியப்பா எனும் ஆளுமையின் பங்கு என தமிழ் சிறுவர் இலக்கியத்தின் வரலாற்றை அழகாக சொல்கிறது. வெவ்வேறு காலக்கட்டத்தில் எழுதப்பட்ட கட்டுரைகள் என்பதால் , சில கருத்துக்கள் மீண்டும் மீண்டும் வருவது சலிப்பை தருகிற‌து.மற்றபடி சிறுவர் இலக்கியம் பற்றிய‌ புரிதலை தேடுவோருக்கு இது ஒரு சிறந்த புத்தகம்.

5.அழ.வள்ளியப்பா - பூவண்ணன்

அழ.வள்ளியப்பா...சென்ற தலைமுறை தமிழ் பெற்றோர்களுக்கு நன்கு பரிச்சயமான பெயர். சிறுவர் பாடல்கள் பற்றின‌ பேச்சுக்கள் எழும் போதெல்லாம் வள்ளியப்பாவின் பாடல்களை
நினைவுகொள்கின்றனர். இந்தத் தலைமுறை பெற்றோர் பல‌ருக்கும் அழ.வள்ளியப்பா யார் என்பதே தெரியவில்லை. 90களில் டிவியின் தாக்கம் அதிகமானது இதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம். ஆனால் அவர்களுக்கு  சினிமா அல்லாத சிறுவர்களுக்கான‌ தமிழ் பாடல்கள் என்றதும் முதலில் நினைவிற்கு வருவது வள்ளியப்பாவின் பாடல்கள் தான்.  "அணிலே அணிலே ஓடி வா"  , "தோ தோ நாய் குட்டி" , " மாம்பழமாம் மாம்பழம் " போன்ற பாடல்கள் அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது.

வள்ளியப்பா புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் , ஆனால் சென்னையில் வங்கி பணியிலிருந்தார். சென்னையில் இருந்துக்கொண்டே புதுக்கோட்டையில் சிறுவர் இதழை கொண்டுவந்திருக்கிறார். அச்சு மட்டும் தான் புதுக்கோட்டையில் நடந்திருக்கிறது. அதற்கு முந்தைய வேலைகள் அனைத்தையும் சென்னையிலே செய்திருக்கிறார். மிகவும் மலைப்பாக இருக்கிறது. மாதம் 10 இதழ்கள் வெளிவர உறுதுனையாக இருந்திருக்கிறார். சிறுவர்களுக்கான படைப்புகளை மட்டுமல்ல , பல படைப்பாளிகளையும் உருவாக்கியுள்ளார். இந்த வேகத்திலும் , படைப்புகளில் சிறுவர்களை திசை திருப்பும் எண்ணங்கள் எதுவும் வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்திருக்கிறார்.ஒரு முறை தமிழ் சிறுவர் இலக்கியத்தில் துப்பாக்கி கலாச்சாரம் தலை தூக்கியிருக்கிறது, அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். (அதன் எதிர்ப்பு எப்படி முடிவுற்றது என்பதை தேடிட வேண்டும்.)

இந்தப் புத்தகத்தை வாசித்தப் பொழுது மனதில் ஓடிய எண்ணம் இது தான், "தனி மனிதராய் மனுஷன் எப்படியெல்லாம் இயங்கியிருக்கிறார்!" என்று. நல்ல நண்பர்கள் மட்டும் இருந்தால் போதும் நமது விருப்பங்களை கண்டிப்பாக உருமாற்றிக் கொள்ள முடியும் என்பது தான் வள்ளியப்பாவின் வாழ்வு எனக்கு சொல்வதாக தோன்றுகிறது.

No comments:

Post a Comment