Monday, January 8, 2018

வாசிப்பு 2017 - வானம் பதிப்பகம் 1

சென்ற ஆண்டு சிறார் இலக்கியம் மற்றும் சிறார்கள் பற்றின கல்வி,உளவியல் சார்ந்து அதிகம் வாசித்திருக்கிறேன். சிறார் உலகத்தின் பற்றின புரிதலுக்கு மிகவும் உதவிய புத்தகங்கள் இவை. எனது வாசிப்பில் சிறார் இலக்கிய பட்டியலில் அதிகம் வானம் பதிப்பக புத்தகங்களை இருந்தது. சென்னையில் இனியன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த கலை இலக்கிய கொண்டாட்டத்தில் அறிமுகமான புத்தகங்கள். அழகிய வடிவம்,நேர்த்தியான ஓவியங்கள்,வித்தியாசமான அட்டை வடிவமைப்பு என பார்த்தவுடனே ஈர்க்கும் வகையில் புத்தகங்கள் அனைத்தும் அமைந்திருந்தது. அதுமட்டுமில்லாமல் புதுபுது படைப்புகள்,வெவ்வேறு தளங்கள்,சிறார்களுக்கு ஏற்ற எளிமையான மொழி என எனது மகளுக்கு வாசித்துக்காட்டும் பொழுதும் இனிமையான அனுபவமாகவே இருந்தது. அந்த வாசிப்பு அனுபங்களையே இங்கு பகிர்கிறேன்.


1.காணாமல் போன சிப்பாய் - விஜய் பாஸ்கர்

தமிழ் சிறுவர் இலக்கியத்தில் பல பிரிவுகள் உருவாக‌ வேண்டும். கதைகள்,பாடல்கள்,கதைப் பாடல்கள், கட்டுரைகள்,வாழ்கை வரலாறு கதைகள்,காமிக்ஸ்,வெறும் ஓவியங்கள் வைத்து கதைகள்,விளையாட்டுகளின் வரலாறுகளும் அதன் அறிமுகங்களும்,பயணங்கள்,டைரி நினைவுகள்,எளிமையான வரலாறு பதிவுகள்,இயற்கை சார்ந்து அறிமுகங்கள்,பாரம்பரிய கலைகளின் அறிமுகங்கள்,அறிவியல் அறிமுகங்கள் என பட்டியல் நீண்டுக்கொண்டே போக வேண்டும். அதேப் போல் சிறுவர்களின் உலகை புரிந்துக்கொள்வதற்காக நிறைய படைப்புகள் வர வேண்டும் அதிலும் முக்கியமாக பெற்றோர்களுக்கும்,ஆசிரியர்களுக்கும். குழந்தை வளர்ப்பில் நமது சமூகத்தில் கண்டிப்புகள் எந்த அளவில் இருந்திட வேண்டும்,தொலைகாட்சிகள் எந்தவித பாதிப்புகளை ஏற்படுத்துகிறது,கல்வி சூழல் எப்படி இருந்திடல் வேண்டும் என பலவற்றைப் பற்றியும் சுவாரஸ்யமாக பேசிட வேண்டும். அதேப் போல் குழந்தை வளர்ப்பில் ஏற்படும் சுவாரஸ்யமான அனுபவங்களையும் பகிர்ந்திடல் வேண்டும்.

இப்படி ஏகப்பட்ட வேண்டுதல்கள் இருக்கிறது. அதில் ஒரு வேண்டுதலுக்கான‌ பதில் சமீபத்தில் எனக்கு கிடைத்தது. "காணாமல் போன சிப்பாய்" என்ற நூல் தான் அது. குழந்தை வளர்ப்பு சார்ந்தும் அதில் தான் சந்தித்த சிக்கல்களையும் அதை தான் சமாளித்த விதத்தையும் பேசியிருக்கிறார். இந்தப் புத்தகம் சிறுவர்களுக்கானதா அல்லது பெற்றோர்களுக்கானதா என்ற கேள்வி தனக்கே உண்டு என்று முன்னுரையில் ஆசிரியர் சொல்லி இருக்கிறார். என்னைப் பொறுத்த வரை இது இருவருக்குமானது . சிறுவர்களைப் பொறுத்தவரை இது நிஜ வாழ்வில் இன்னொருவரின் கதையாக எடுத்துக் கொள்வார்கள் என்று நம்புகிறேன். அது அவர்களின் வாழ்வின் மீதான ஒரு பார்வையையும் கண்டிப்பாக கொடுக்கும். பெரியோர்கள் சிறுவர்களுடன் சேர்ந்து படித்தால் அருமையாக இருக்கும்.

அப்பா-மகளுக்கான உரையாடல்கள் தான் இந்தப் புத்தகம். மகள் கேட்கும் கேள்விகளுக்கு விடை தேடும் தகப்பின் பயணம். மகளின் கேள்விகளுக்கு எந்தவித தட்டிக்கழித்தலும் இல்லாமல் பதில் தந்திருக்கிறார். குழந்தை வளர்ப்பில் ஏற்படும் சில சிக்கல்களை சமாளித்த அனுபங்களையும் அழகாக நம்முடன் பகிர்ந்திருக்கிறார். அடம் பிடிக்கும் குழந்தையை அம்மா "அவளிடம் கெஞ்சாதீங்க" என்று சொல்ல..மனம் கேட்காமல் அப்பா சமாதானம் செய்யும் செயலை சில நாட்களுக்கு அந்தக் குழந்தையிடமே அம்மா மீது எந்தவித குறையும் சொல்லாமல் தான் செய்த செயலின் விளக்கம் தந்த இடம் மிகவும் ரசித்து படித்தேன். இந்த நிகழ்வை அவர் கையாண்ட முறை நிறைய பெற்றோர்களுக்கு ஒரு புரிதலை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.

ஆசிரியர் தனது மகளை "பிள்ள" என்று அழைக்கும் இடத்தில் எனக்கே தெரியாமல் என் முகம் மெல்லிய புன்னகையை சிந்திவிடுகிறது. எனக்கு முன்னுரையில் மீது எப்பொழுதும் ஒரு மோகம் உண்டு. அதுவும் அவரவர் படைப்புகளுக்கு எழுதும் முன்னுரைக்கு தனி ருசி உண்டு. அந்த வகையில் நான் முன்னுரையை மிகவும் ரசித்துப் படித்தேன்.


2.மரணத்தை வென்ற மல்லன் - உதயசங்கர்



குழந்தைகளே மாயாஜாலத்தின் படைப்பாளிகளாக இருக்கிறார்கள். குழந்தைமையை இழந்து விடாது பெரியவர்களும் மாயாஜாலங்களின் வண்ணச்சிறகுகளைப் பூட்டி அவ்வப்ப்போது தங்கள் குழந்தைமைவானில் பறந்து திரிகிறார்கள். குழந்தைகளும் குழந்தைகளாக இருப்பவர்களும் பாக்கியவான்கள்.

இப்படி ஒரு அழகான முன்னுரையோடு இந்தப் புத்தகம் துவங்குகிறது. டி.என்.ராஜன் அவர்களின் ஓவியங்கள் கதைகளுடன் அழகாக பயணிக்கிறது. இந்தப் புத்தகம் 12 வயது மேற்பட்ட சிறுவர்களுக்கு பொருத்தமாக இருக்குமென தோன்றுகிறது. சின்ன சின்ன நிகழவுகளுடன் அழகாக நகர்கிறது இந்த நாவல். பூதங்களுடன் துவங்கிய கதை மரணத்தை வெல்வதில் முடிகிறது. மரணம் மல்லனை பல முறைகள் எட்டிப்பார்க்கிறது. ஒவ்வொரு முறையும் அவன் அதனை தள்ளிப்போட்டுக்கொண்டே போகிறான். மரணத்தை வென்ற அந்த மல்லன் இன்னும் வாழ்ந்துக் கொண்டிருக்கிறான் என்று முடிகிறது நாவல்.

3.ஒல்லி மல்லி - மு.முருகேஷ் 


தினம் ஒரு கதை என்று வீட்டில் மகளுக்கு நான் வாசித்துக் காட்டிய புத்தகம். கதையாக சொல்லாமல் சத்தமாக வாசித்துக் காட்டினேன். நடுவில் அவளுக்கு புரியாத இடத்தில் மட்டும் சற்று விளக்கம் கொடுத்தேன். ஏன் என்னாச்சு என்று அவளே கேள்விகளை கேட்கும் படி நடுவில் ஆங்காங்க நிறுத்தி நிதானமாக் ஓவியங்களின் உதவியோடு கதைகளை வாசித்தேன். சின்ன சின்ன கதைகளின் தொகுப்பு. மெல்லிய நீதி போதனைகள் இருந்தாலும் கதையின் போக்கிலே அவை அமைந்திருந்தது. சில கதைகள் அவை கதைகளாக கவர்ந்ததை விட அதன் கதாப்பாத்திரங்களும் அதற்குள்ள பெயரும் மிகவும் கவர்ந்துவிட்டது. அப்படி எங்கள் வீட்டில் தற்பொழுது ஓடி விளையாடி நாங்கள் சிரித்துக் கொண்டிருப்பது "அப்படி,இப்படி" கதையை..

ஒரு வீட்டில் இரண்டு பசங்க,ஒருத்தன் எந்தச் செயலையும் நிதானம் இல்லாமல் அவசரம் அவசரமாக செய்பவன் இன்னொருத்தன் மிக மிக‌ மெதுவாக செய்பவன். ஒருவன் அப்படியென்றால் இன்னொருத்தன் இப்படி என்று கதை செல்கிறது. இந்த அப்படி இப்படி என்ற வார்த்தை எனது மகளுக்கு மிகவும் பிடித்துவிட்டது. இதை வைத்தே அவள் செய்யும் வேலைகளையும் சரி வீட்டில் நாங்கள் செய்யும் தவறுகளையும் சரி விமர்சனம் செய்ய முடிகிறது. அழகான களத்தை அமைத்து தந்திருக்கிறது இந்தக் கதை. "அப்படி-இப்படி" செய்யும் சேட்டைகள் அதனால் அவர்களின் அம்மா படும் பாடென நாங்களே புதுக் கதைகளை உருவாக்கி கொண்டிருக்கிறோம்.

4.பேசும் தாடி - உதயசங்கர்


முதலில் இந்த அருமையான படைப்பை கொண்டுவந்த‌ எழுத்தாளர் உதயசங்கர் ,பதிப்பாளர் மணிகண்டன் மற்றும் ஓவியர் அவர்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்

இந்தப் புத்தகத்தை வாசிக்கும் போது சூர்யாவும் சுகானாவும் பத்து சித்திர குள்ளன்க‌ளும் பத்து சித்திர குள்ளிகளும் நம்மையும் அவர்களுடன் சேர்த்து பறக்க வைக்கின்றனர். தேனீக் கூட்டுக்குள்ளையும் , எறும்பின் வீட்டிற்கும் பட்டாம்பூச்சி முதுகில் உப்பு மூட்டையும் ஏற்றி சுற்றி காட்டுகின்றனர் என்றே சொல்ல வேண்டும். எனது மகளுக்கு கடந்த ஒரு வாரமாக கொஞ்சம் கொஞ்சமாக வாசித்துக் காட்டினேன். தினமும் சின்ன இடைவேளை அடுத்த நாள் என்ன நடக்கும் என்ற ஆர்வத்துடன் அவள் காத்திருப்பதை அழகாக ரசித்தேன். கடந்த இரண்டு மாதங்களாக அவளுக்கு கதை சொல்வதை விட புத்தகத்தை வாசித்துக் காட்டிக்கொண்டிருக்கிறேன். இந்தப் புத்தகத்திற்கு அவளுக்கு அதிகாமக விளக்கம் சொல்லவில்லை. அவளே வாசிக்கையில் புரிந்துக்கொண்டிருந்தாள். உதயசங்கர் அவர்களின் எளிமையான மொழி அதற்கு முக்கிய காரணம் என்று சொல்லலாம். அத்துடன் இந்தக் கதைகளம் வீட்டில் நடப்பதால் கதையை தனதாக்கிக் கொண்டாள். கதையின் முடிவில் தாத்தா-பாட்டி ஊருக்கும் செல்லும் போது இவள் இங்கு சோகமாகிவிட்டாள். "எனக்கு இந்தக் கதையே பிடிக்கல" என்ற அழவும் செய்துவிட்டாள். ஆனால் கதையுடன் முழுவதும் மூழ்கிவிட்டாள் என்பதே நிதர்சனம்.

கதையில் தாத்தா தாடியிலிருந்த அந்த பத்து சித்திர குள்ளனும் ஆச்சியின் சுருக்கு பையிலிருந்த சித்திர குள்ளியும் தற்பொழுது எங்கள் வீட்டில் தான் இருக்கிறார்கள். நீங்கள் யாராவது எங்க வீட்டிற்கு வந்தால் உங்கள் மீதும் வண்ண வண்ணப் பொடிகளை தூவி உங்களையும் எங்களுடன் சேர்த்து குட்டியாக மாற்றி வண்ணத்திப் பூச்சி முதுகில் ஏற்றிவிடுவார்கள்.

5.மாயக் கண்ணாடி - உதயசங்கர் 


கோவையில் குட்டி ஆகாயம் சார்பாக நடந்த‌ "குழந்தைகள் குறித்த உரையாடல் -2" நிகழ்வில் தற்கால சிறார் இதழ்கள் பற்றி திரு.சம்பத் அவர்கள் பேசினார். அதில் அரசியல் சார்ந்து எழுத வேண்டிய அவசியத்தைப் பற்றி மிக தெளிவாக பேசினார். பெரியார் பிஞ்சு மற்றும் மின்மினி இதழ்கள் இந்த தளத்தில் இயங்குவது குறித்து பாராட்டுகளை தெரிவித்தார். பஞ்சுமிட்டாய் இதழ்களில் இடம்பெற்ற சில முயற்சிகள் குறித்தும் குறிப்பிட்டிருந்தார். சிறார் இதழ்கள் போன்று புத்தகத்திலும் தற்காலத்தில் அரசியல் குறித்து சிறுவர்களுக்கு பேசிய புத்தகத்தில் முக்கியமானது உதயசங்கர் அவர்கள் எழுதிய "மாயக் கண்ணாடி" புத்தகம்.

"அதிகாரத்தைப் பகடி செய்ய" என்ற தலைப்புடனே புத்தகத்தின் முன்னுரை துவங்குகிறது. அதிலும் சிறார்கள் மீது செலுத்தப்படும் அதிகாரத்தை எந்தவித மறைவும் இல்லாமல் இவ்வாறு கூறுகிறார்...

"பெற்றோர்கள்,ஆசிரியர்கள்,உறவினர்கள்,வயது மூத்தவர்கள்,போவோர்,வருவோர் எல்லோரும் குழந்தைகள் மீது அதிகாரம் செலுத்துகிறார்கள். கெடுவாய்ப்பு என்னவென்றால் இதை குழந்தைகளை நல்வழிப்படுத்துவதற்காகச் செய்கிறோம் என்று சொல்லிக்கொள்கிறார்கள்.

ஆனால் உண்மையில் நடப்பது என்னவென்றால் குழந்தைகள் தங்களிடம் உள்ள இயல்பான படைப்பூக்கத்தினால் இந்த அதிகாரத்தைப் பகடி செய்கிறார்கள். அதிகாரமே வெட்கப்படும் அளவுக்கு அவர்கள் கேலி செய்கிறார்கள்"

இப்படி அதிகாரத்தின் மீதான விமரசனுத்துடன் புத்தகம் துவங்குகிறது. மொத்தம் 11 கதைகள் அனைத்தும் தற்கால அரசியலை பகடி செய்து உருவாக்கப்பட்ட ராஜா கதைகள். ஒவ்வொரு கதையிலும் சின்ன சின்ன விசயத்தை மட்டுமே எடுத்து கதை உருவாக்கபட்டிருக்கிறது. ஆதலால் கண்டிப்பாக சிறார்களுக்கு எளிமையாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும்.

உதயசங்கர் அவர்களின் மிகப்பெரிய பலம் அவரது எளிமையான மொழி நடை (அதுவும் ஆங்கில கலப்பு இல்லாத மொழி நடை) என்று சொல்வேன். சிறார்களுக்கு மிகவும் பிடித்த புத்தகமாக இருக்கும். இந்தக் கதைகளை நாடகமாக‌ இயற்றினால் அருமையாக இருக்கும் என்று தோன்றுகிறது.

12 வயதிற்கு மேலுள்ள சிறார்களுக்கு ஏற்றதாக இருக்கும்.  

No comments:

Post a Comment