Tuesday, December 19, 2017

ஊர் கூடி தேர் இழுத்தோம்

கோத்தகிரி நிகழ்வை முடித்து வீடு திரும்பியதும் முதலில் வாசிக்க நினைத்தது மாயக் கண்ணாடியின் புத்தகத்திலுள்ள‌ அந்தக் கதையை தான். தனது கதை சொல்லலில் மூலம் வாசிக்க வேண்டுமென்ற ஆர்வத்தை அந்தச் சிறுமி என்னுள் ஏற்படுத்திவிட்டாள். பொதுவெளியில் உச்சரிக்க‌ கூச்சப்படும் "குசு" என்ற‌ வார்தை தான் அந்தக் கதையின் மையம். இந்தக் கதையை 10 வயதுள்ள சிறுமி எந்தவித கூச்சமும் இல்லாமல் மேடையில் அனைவர் முன்னிலையில் அவ்வளவு அழகான வர்ணனையுடன் பேசினாள். அவள் பேசப் பேச என்னை அறியாமல் சிரித்துக் கொண்டிருந்தேன். அத்துடன் அவளது அந்தக் கூச்சமற்ற உணர்வு நிறைய யோசிக்கவும் வைத்தது. அவள் தனது பேச்சை அழகாக துவக்கியதுப் போலவே அழகாக முடிக்கவும் செய்தாள்.

"இந்தக் கதையை படிச்சு நானும் அண்ணனும் சிரிச்சுக்கிட்டு இருந்தோம்,அப்போ டிவி பார்த்துக்கிட்டிருந்த எங்க அம்மா அப்பா..ஏன் இப்படி சிரிக்குறீங்கன்னு கேட்டாங்க..நாங்க இந்தக் கதையை காட்டினோம்..அவங்களும் புக்கை படிச்சிட்டு எங்கள மாதிரியே சிரிக்க ஆரம்பிச்சுட்டாங்க"

என்று தனது அனுபவத்துடன் பேச்சை முடித்தது அருமையாக இருந்தது. அவளது அம்மா அப்பாவை வாசிக்க வைத்துவிட்ட அவள் தற்பொழுது என்னையும் வாசிக்க வைத்துவிட்டாள்.   அந்தச் சுட்டிக்கு எனது அன்பு முத்தங்கள்.

அடுத்து சிறுமி ஒருவர், விழியன் அவர்கள் எழுதிய‌ கிச்சா பச்சா புத்தகத்தைப் பற்றி பேசினார். அவர் தனது பேச்சை ஆரம்பித்தது இப்படித் தான்.

"இந்த புக்கை எழுதியவரு விழியன் ஐயா..விழியன் ஐயா வந்திருக்கீங்களா..இங்க இருக்கீங்களா...."

[அவரு வரல மா...என்று கூட்டத்திலிருந்து பதில் வந்ததும்]

"உங்க புக்கு ரொம்ப நல்லா இருந்துச்சு..ரொம்ப நன்றி ஐயா..."

என்று பேச்சின் துவக்கத்திலே பலரையும் ரசிக்க வைத்தவள். கதையில் வரும் சாமியார் பற்றி வரும் இடத்திலும் அழகாகப் பேசி பல கைத்தட்டல்களை வாங்கினார். இவரது பேச்சு போலவே இவரது உடல் மொழியும் பார்வையும் கூட்டத்துடன் நிறைய உரையாடியது.


15 கதை புத்தக மத்தியில் ஒரே ஒரு பாடல் புத்தகமும் இருந்தது.  பாவண்ணன் அவர்கள் எழுதிய மீசைக்கார பூனை புத்தகம் தான் அது. அந்தப் புத்தகம் சார்ந்து இரண்டு சிறுவர்கள் பேசினார்கள்...இல்லை இல்லை..பாடி அசத்திவிட்டார்கள். முதலில் வந்த சிறுவன் அழகான மெட்டெடுத்து "தன்னா தான" என்று ஆரம்பித்தார். மொத்த கூட்டமும் அவரது பாடலுக்கு தலை ஆட்டி ரசித்தது. அவருடன் இன்னொரு சிறுமி "அப்பாவும் நானும்" என்ற பாடலை பாடினார். அந்தப் பாடல்  பள்ளிக்கு செல்ல மறுக்கும் சிறுவனிடம் அப்பா பேசுவதுப் போல் இருக்கும். அந்தப் பாடலை பாடியதோடு மட்டுமல்லாமல் தனக்கு வீட்டில் இருப்பது தான் பிடிக்கும்,பள்ளிக்கு போக பிடிக்காது அதுக்காக தான் இந்தப் பாடலை பாடிக் காட்டினேன் என்று பாடலை ஒட்டிய தனது மனநிலையை அழகாக‌ பேசி பார்வையாளர்களை அசத்திவிட்டார்.

பார்வை குறைப்பாடுள்ள சிறுவர் ஒருவரும் இதில் பேசினார் அவருக்கு வாசித்துக் காட்டிய நண்பரும் கூட நின்றது மனதிற்கு ஏகப்பட்ட உற்சாகத்தை தந்தது.

புத்தக மதிப்புரை நிகழ்வின் மையம் என்றாலும் "குழந்தைக்களுக்கான கலை கொண்டாட்டம்"  என்ற பெயருக்கு ஏற்றார் போல் பலவிதமான கலை வடிவங்கள் நிகழ்வை அலங்கரித்தது. நிகழ்வின் துவக்கத்திலே விஷ்ணுபுரம் சரவணன் அவர்கள் குழந்தைகளோடு சின்ன சின்ன உரையாடல் மூலம் நிகழ்விற்கான மனநிலையை உருவாக்கினார். அழகான கதை ஒன்றையும் சொன்னார்.  அதோடு மற்றுமல்லாமல் மொத்த நிகழ்வையும் அழகாக எடுத்துச் சென்றார். அவரது கதை சொல்லலைத் தொடர்ந்து நானும் கதை ஒன்றை சொல்லி கைத்தட்டல்களையும் சிரிப்பொலிகளையும் பரிசாக பெற்றுக் கொண்டேன். அதன் பிறகு அண்ணன் பாலபாரதி அவர்கள் சிறுவர்களை வைத்தே அரங்கினுள் ரயில் வண்டியை வரவழைத்து அசத்திவிட்டார். நண்பர் அறிவரசன் Magic man ஆக தோன்றி சில அறிவியல் விசயங்களை சுட்டிகளுக்கு அறிமுகம் செய்ததோடு சுட்டிகளுக்கு குட்டியாக விளக்கங்களை சொன்னார். இப்படி கொண்டாட்டத்திற்கான சூழல் உருவானதும் சிறுவர்களின் பேச்சு துவங்கியது.

பறை என்றதும் நமது கால் அசையும். அப்படி இருக்கையில் கலை கொண்டாட்டத்தில் பறை இசை இல்லாமல் போகுமா? அவ்வூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் ப‌ள்ளி சார்பில் பறையாட்டம் அரங்கேறியது. சிறுவர்களின் ஆட்டத்திலும் பறை இசையிலும் அரங்கம் அதிர்ந்தது. பறை அதிர அதிர மொத்த கூட்டமும் குத்தாட்டம் போடும் மனநிலையில் இருந்தது. சிறுவர்களின் பேச்சுக்களுக்கு நடுவே பறை ஆட்டம் போட்டுவிட்டு மீண்டும் சிறுவர் இலக்கிய கொண்டாட்டத்திற்கு திரும்பினோம். ஒவ்வொரு குழந்தையும் அழகாக பேசி முடித்ததும் அண்ணன் குமார் அம்பாயிரம் அவர்களின் "டிஜிருடு வாசிப்பு" நிகழ்வு நடந்தது. மொத்த கூட்டமும் அமைதியாகவும் ஆர்வமாகவும் கேட்டு ரசித்தனர்.  அதன் பிறகு நிகழ்விற்கு வந்திருந்த ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றிகள் தெரிவிக்கப்பட்டது. அதனுடன் அங்குவந்திருந்த சிறுவர்களின் பள்ளிகளுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து "பஞ்சுமிட்டாய்" இதழின் அறிமுகமும் அரங்கில் நடந்தது. பிஞ்சுகளின் கையில் பஞ்சுமிட்டாய் இதழை பார்க்க பார்க்க‌ பேரானந்தமாய் இருந்தது. அடுத்து நிகழ்வில் கடைசிப் பகுதியாக புகிரி அரங்காட்டம் குழுவின் "நாற்காலி" நாடகம் அரங்கேறியது. ஏற்கனவே மதிய உணவு நேரம் எட்டியபோதும் சிறுவர்கள் முழுவதுமாக நாடகத்தினுள் இருந்தனர். நாடகமும் பார்வையாளர்களை தன்னுள் ஏற்றுக்கொண்டிருந்தது. அரங்கம் சிரிப்பொலிகளில் நிறைந்திருந்தது.
மணி இரண்டாகியும் நாடகத்துடன் சிறுவர் ஒன்றி இருந்தது மிகவும் மகிழ்வான தருணமாக இருந்தது.சுருக்கமான நன்றியுரையுடன் குழந்தைக் கலை கொண்டாட்டம் இனிதே முடிந்தது. நல்ல தரமான‌ மதிய உணவு (அசைவம் மற்றும் சைவம்) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிறைந்த மனதுடனும் நிறைந்த வயிறுடனும் அனைவரும் கலைந்துச் சென்றோம்.

சிறுவர்கள் மட்டுமில்லாமல் வந்திருந்த நண்பர்கள் பலரும் அன்று உண்மையான‌ கொண்ட்டாட்ட மனநிலையிலே உலாவிக் கொண்டிருந்தோம். அந்த மனநிலையை வெவ்வேறு இடங்களில் பரப்பச் செய்வதுப் பற்றிய பேச்சுகளே நிகழ்வு முடிந்ததும் அந்த அரங்கில் இருந்தது.

நிகழ்வு நிறைய நண்பர்களையும் நிறைய நினைவுகளையும் கொடுத்தது. பாலபாரதி அண்ணனின் திகில் கதைகளும்,அதற்கு அண்ணி கொடுத்த கவுண்டர் வசனங்களும்,விஷ்ணுபுரம் சரவணன் அவர்களுடனான உரையாடல்களும், பயணம் முழுக்க எனது மொக்கைகளை தாங்கிக் கொண்ட விக்னேஷ் அவர்களுடனான பேச்சுகளும்,தோழர் மோகன‌ சுந்தரம் அவர்களின் அனுபங்களும் அவர் செய்த சின்ன சின்ன வித்தைகளும்,கூட்டாளி ஜெயகுமார்,சர்மிளா அவர்களுடனான பயணங்களும்,மகேந்திரன் அவர்கள் கொட்டித் தீர்த்த‌ கோத்தகிரியின் கதைளும்,தவமுதல்வனின் வரவேற்பும் எனது டைரி பக்கங்களை நிறைக்க காத்திருக்கிறது.

இந்த நிகழ்வு எப்படி சாத்தியமானது என்று யோசிக்கும் போதெல்லாம்ம் "ஊர் கூடி தேர் இழுப்பது" தான் மனதில் தோன்றுகிறது. இனியன் என்ற ஒற்றை மனிதனின் முயற்சி மூலம் ஒரு ஊரைக் கூட்டி இந்தக் கொண்டாட்டத் தேரை வெற்றிக்கரமாக இழுத்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். சிறுவர்கள், அவர்களின் பெற்றோர்கள்,ஆசிரியர்கள்,உதவிய நண்பர்கள்,எழுத்தாளர்கள்,அந்த அரங்கின் உரிமையாளர்,கோத்தகிரியிலுள்ள முக்கிய ஆளுமை நண்பர்கள்,வாகன ஏற்பாடுகள் நண்பர்கள்,ஒளிப்பதிவு செய்த நண்பர்கள்,மதிய உணவு,டீ,சிற்றுண்டி ஏற்பாடு செய்த நண்பர்கள்,புத்தகங்களை நன்கொடையாக அளித்த நண்பர்கள்,பேசிய சிறுவர்களுக்கு வழங்கிய ஃபோட்டோ வரைப்படத்தை ஏற்பாடு செய்த நண்பர்கள்,நிகழ்வை தொகுத்து வழங்கிய நண்பர்கள் என பெயர்களை குறிப்பிடாமலே நன்றி சொல்ல வேண்டிய பட்டியல் பெரிதாக நீளுக்கிறது.

ஒவ்வொரிடமும் பேசி நிகழ்விற்கான அனைத்து விசயத்தையும் ஏற்பாடு செய்து ஒரு திருமணம் போல அலைந்து திரிந்து வெற்றிகரமான நிகழ்வை நடத்தி முடித்திருக்கிறார் . சிறார் இலக்கியத்தை, படைப்புகள் தாண்டி அதனைக் கொண்டு சேர்க்க வேண்டிய மிகப்பெரிய பணியின் சாத்தியக் கூறுகளை அவர் கண்டுப்பிடித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். இதுப் போல் ஏற்கனவே சிலர் முயற்சித்திருக்கலாம் ஆனால் அதனை கதை சொல்லல்,சின்ன விளையாட்டுகள்,நாடகங்கள்,பாரம்பரிய வாத்தியங்கள் என‌ ஒரு அழகான combo வாக மாற்றி வடிவமைத்து அதன் அவசியத்தை பார்வையாளர்களின் மனதிலும் பதித்துவிட்டார். இனியனுக்கு நன்றிகளை அவருடன் தொடர்ந்து பயணிப்பது மூலமே சொல்ல விரும்புகிறேன்.



ஆதலால் தொடர்ந்து பயணிப்போம் இனியா...

நிகழ்வில் சிறுவர்கள் பேசிய புத்தகங்கள்:


  1. பேசும் தாடி-உதயசங்கர்
  2. கிச்சா பச்சா -விழியன்
  3. சுண்டைக்காய் இளவரசன் -யெஸ்.பாலபாரதி
  4. காணாமல் போன சிப்பாய்-விஜயபாஸ்கர் விஜய்
  5. ஸ்பைடர் மேன்- மதுரை சரவணன்
  6. இருட்டு எனக்கு பிடிச்சிருக்கு-ரமேஷ் வைத்தியா
  7. மினர்வக்கு பறக்கத்தெரியாது-மருதன்
  8. வித்தைகார சிறுமி-விஷ்ணுபுரம் சரவணன்
  9. பேய் பிசாசு இருக்கா-உதயசங்கர்
  10. பூதம் தூக்கிட்டுப் போன தங்கச்சி-நீதிமணி
  11. நரியின் கண்ணாடி-அமன்
  12. பேசும் யானையும் பாடும் பூனையும்-கா.விக்னேஷ்
  13. ஒல்லி மல்லி குண்டு கில்லி - மு.முருகேஷ்
  14. தங்கத்தாமரை-செ.யோகநாதன்
  15. மாயக்கண்ணாடி-உதயசங்கர்
  16. மீசைக்கார பூனை-பாவண்ணன்

பெரியர்களுக்காக பேசிய புத்தகம்

  1. கதை கதையாம் காரணமாம்-விஷ்ணுபுரம் சரவணன்


5 comments:

  1. நிகழ்வுகளை மறக்க முடியவில்லை. இன்னும் அப்படியே மனதில் இருக்கின்றது. நன்றிகள் அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த இனியனுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. கட்டுரை அருமை அண்ணா பஞ்சுமிட்டாயைப் போல இனிக்கிறது அனைத்து நிகழ்வு களையும் உங்கள் எழுத்தில் வாசிக்கையில் தொடர்வோம் ...

    ReplyDelete
  3. கட்டுரை அருமை அண்ணா பஞ்சுமிட்டாயைப் போல இனிக்கிறது அனைத்து நிகழ்வு களையும் உங்கள் எழுத்தில் வாசிக்கையில் தொடர்வோம் ...

    ReplyDelete
  4. ஆலே ாசனை தேவை.

    ReplyDelete
  5. ஆலே ாசனை தேவை.

    ReplyDelete