Thursday, October 26, 2017

இது எங்கள் வகுப்பறை

ஒரு ஆசிரிய‌ராய் தனது சுற்றத்தில் முழு சக்தியை பயன்படுத்தி மாணவர்களுக்கு விரும்பும் வகையில் கற்றலை மாற்றியிருப்பதற்காகவும் அதனை இலக்கியத்திற்கு கொண்டு வந்ததாற்கவும் முதலில் எனது வாழ்த்துக்களை தோழி சசிகலா அவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் புத்தகத்தை வாசிக்கும் பொழுது இரண்டு புத்தகங்கள் எனது மனதிற்குள் வந்து வந்து சென்றது. அவை "பகல் கனவு" மற்றும் "ஜன்னலின் ஒரு சிறுமி" புத்தகங்கள். கல்வி துறையில் இவை இரண்டுமே முக்கியமானதாய் கருதப்படும்  புத்தகங்கள். பெற்றோர்,ஆசிரியர்கள்,சமூகம் இந்த மூவருக்கும் குழந்தை வளர்ப்பில் மிக முக்கிய பங்குண்டு. அதில் "இது எங்கள் வகுப்பறை" என்ற‌ இந்தப் புத்தகம் ஆசிரியரின் பங்கினை எவ்வாறெல்லாம் திறமையாகவும்,சிறப்பாகவும் செய்ய முடியுமென்பதை எடுத்துக்காட்டுகிறது.

மாணவர் பருவத்தில் ஆசிரியருடன் நெருங்கி உறுமையுடன் பழகிவிட்டால் போதும்,அந்தக் குழந்தை தனது முழு ஆற்றலையும்,கற்றல் என்பதன் உண்மையான சுவையையும் அனுபவத்திட‌ முடியும். அப்படி தனது மாணவர்களுக்கு சூழலை அமைத்திட நினைத்து அதனை செயல்முறை படுத்திய அனுபவம் தான் இந்தப் புத்தகம். பள்ளி வரலாற்றுடன் புத்தகம் துவங்குவது மகிழ்ச்சியை தருகிறது. தனது வகுப்பறை அனுபவத்தை அழகாக பகிர்ந்துள்ளார். அவரது எழுத்துக்கள் மூலம் அந்த வகுப்பறையின் நிகழ்வுகளை காட்சிகளாக ஓட்டிப்பார்க்க முடிகிறது. எனது பிள்ளைக்கும் இந்த மாதிரி வாய்ப்புகள் கிடைக்குமா என்ற எதிர்ப்பார்ப்பை உண்டாக்குகிறது.

சிறுவர்கள் எப்பொழுதும் செயல்பாடுகளையும்,அதிலுள்ள பொறுப்புகளையும் ரசிக்கின்றனர். வீட்டில் கூட பெரியவர்கள் செய்யும் வேலைகளில் தங்களுக்கு ஏதேனும் வாய்ப்பு கிடைக்குமா என்ற ஏக்கத்துடனையே இருக்கின்றனர். "இதெல்லாம் பெரியவங்க வேலை" என்ற வாக்கியத்தை அவர்கள் அதிகம் வெறுக்கின்றனர். சமைக்கும் போதும்,வீட்டை சுத்தம் செய்யும் போதும்,கடைக்கு செல்லும் போதும்,தோட்டத்தில் நாம் இருக்கும் போதும் இதை நன்றாக கவனிக்கலாம். இதுப்போன்ற சூழலில் அவர்களுக்கு கிடைக்கும் சிறிய பொறுப்புகளை முழு ஈடுபாடுகளுடன் செய்து முடிக்கின்றனர். அதன் மூலம் அவர்களுக்கு கிடைக்கும் கற்றலை வகுப்பறையில் அமர்ந்துக்கொண்டு வார்த்தைகள் கொண்டு அறிமுகம் செய்வதென்பது மிகவும் கடினமானது. அதைவிட சின்ன சின்ன செயல்பாடுகள் கொண்டு கற்றலை இயற்கையாய் ஏற்படுத்தினார் என்பதை வாசிக்கும் போது அழகாக இருந்தது.

ஒவ்வொரு பாடத்திற்கும் புதுப்புது பெயர்கள் சூட்டி அதன அனுபவத்தினை குழந்தைகள் எழுத்துகளாய் மாற்றும் முயற்சி மிகவும் சிறப்பானது. அதுவும் தோட்டம் அமைப்பதற்கான அத்துனை முயற்சிகளும் மிகப்பெரிய பாராட்டுகளுக்குறியது. புழு எப்படி பூச்சியாக மாறும் ? இந்த சந்தேகத்தை அவர் ஒவ்வொருவருக்கும் புரியும் படி செய்த செயலும் மிகவும் அருமையானது.

ஜட்டி போடாமல் வரும் 1ம் வகுப்பு சிறுமியை கையாண்ட விதம் என்னென்ன கேள்விகளை மனதினுள் எழுப்புகிறது. குழந்தையுடன் சற்று இறங்கி பேசும்பொழுது மாற்ற முடியாத சில விஷயங்களை எவ்வள்வு எளிமையாக மாற்றிட முடியும் என்பதை காணமுடிகிறது.

முட்டை எலும்புக்கூடு, பானை ஓவியம், வாட்டர் கேன் செடி தோட்டம்,#tense கதை,கத்தரிக்காய் ராஜா பாடலும் நாடகமும்,பம்பரம்,கிளி பாடல்,அந்த ஐந்து குழுக்கள்,அவர்கள் வரைந்த ஓவியங்கள்,ஜூஜூ கடிதங்கள் என அனைத்தும் காட்சிகளாய் மனதில் ஓடுகிறது. அதுவே இந்தப் புத்தகம் பெற்ற வெற்றியென நினைக்கிறேன்.

அவரது ஒவ்வொரு செயல்பாட்டிலும் 4-5 சிறுவர்கள் ஒட்டாமல் இருப்பதை ஆங்காங்கே சொல்கிறார். அது இயற்கையானதே அதை பதிந்தது மிக முக்கியமான ஒன்று. ஆனால் அதை சார்ந்து ஆசிரியரின் மன ஓட்டத்தை பதிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. ஒரு இடத்தில் சிறுவர்களை சற்றே கடிந்துக்கொள்கிறார். ஆனால் அடுத்த நிமிடத்தில் சிறுவர்கள் வேறு எதோ செய்ததும் அன்புடன் பழகிக்கொள்கிறார். இந்தச் சம்பவத்தை முழுவதும் பதிந்திட வேண்டும் என்று தோன்றுகிறது. அதிக சுதந்திரம் சிறுவர்களுக்கு தேவையில்லை என்பதை இந்த சமூகம் பெரிதாக நம்புகிறது. அந்த நம்பிக்கையால் குழந்தையை எப்பொழுதுமே தெரிந்தும் தெரியாமலும் கடிந்துக்கொண்டேயிருக்கிறது. அந்த மனநிலையை மாற்றுவதற்கு இதுபோன்ற சிக்கல்களை கையாளும் விதத்தைப் பற்றி முழுவதுமாக பேச வேண்டும். அது நிறைய நண்பர்களுக்கு உதவியாக இருக்கும்.

தோழியின் முயற்சிகளுக்கு மீண்டும் பெரிய நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். உங்கள் வகுப்புகள் தாண்டி அந்தப் பள்ளி முழுவதும் இதுப்போன்று மாறிட வேண்டும். மற்ற பள்ளிகளும் உங்களைப் பார்த்து மாணவர்கள் ஆர்வம் சார்ந்து இயங்கிட வேண்டும். அதற்கு இந்தப்புத்தகம் உதவும் என்று நம்புகிறேன். பெற்றோர் பார்வையிலிந்து புத்தகத்தை வாசிக்கும் போது ஆசிரியர்கள் சந்திக்கும் சவால்களையும் அதற்கான அவர்கள் செய்யும் முயற்சிகளையும் நன்றாக புரிந்துக்கொள்ள முடிகிறது.

 விதை முதல் விருட்சம் வரை என்று குழந்தைகளின் அனுபவ பதிவுகளை அழகாக தொகுத்து புத்தகமாக கொண்டு வரவேண்டும் என்று அன்புடன் தோழியிடம் கேட்டுக்கொள்கிறேன்.

இறுதியாக..இது யாருடைய வகுப்பறை? என்ற ஆயிஷா.நடராசன் கேள்விக்கு விடை தந்திருப்பதுப் போல் இருக்கிறது தலைப்பும் புத்தகமும். அதற்கு எனது சிறப்பு வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment